முஸ்லிம் ஊடகங்களுக்கு முஸ்லிம் வர்த்தகர்கள் உதவ முன்வராமை கவலைக்குரியது
Posted by Kattankudi Web Community on 12/02/2013
முஸ்லிம் சமூகத்துக்கோ வர்த்தகர்களுக்கோ ஏற்படும் நெருக்கடிகளை அல்லது அச்சுறுத்தல்களை பகிரங்கத்துக்கு கொண்டு வருவதில் அரசியல் தலைவர்களை விட முஸ்லிம் ஊடகங்களே முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வாறு பங்காற்றும் முஸ்லிம் ஊடகங்களுக்கு ஒரு விளம்பரத்தைக்கூட வழங்கி உதவுவதற்கு பெரும்பாலான முஸ்லிம் வர்த்தகர்கள் முன்வராமை கவலைக்குரியது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினதும் முஸ்லிம் கவுன்ஸிலினதும் தலைவர் என்.எம். அமீன் கூறினார்.
மாவனல்லைப் பிரதேச பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஹிங்குலோய மஸ்ஜிதுல் ஹுதாப் பள்ளிவாசலில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் சிறப்புச் சொறிபொழிவு ஒன்றை நிகழ்த்தியே அவர் இதனைத் தெரிவித்தார். மஸ்ஜிதுல் ஹுதாவின் தலைவர் டாக்டர் ஹமீத் ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் என்.எம்.அமீன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் நெருக்கடியும் சமூகத்தின் பொறுப்பும் என்ற தலைமையில் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் முஸ்லிம் சமூகத்தின் சமய, கலாசார பழக்க வழக்கங்கள் பற்றி பெரும்பான்மைச் சமூகம் புரிந்து கொள்ளாமையாகும். எம் சமூகத்தின் நிலைமையை எடுத்துக் கூறுவதற்கு எமது சமூகத்தின் கையில் ஊடகமில்லை. எமக்காக ஒரு நாளிதழோ, வானொலியோ, தொலைக்காட்சியோ இல்லை. வாரத்துக்கொரு முறை வெளிவரும் முஸ்லிம் பத்திரிகைகள் கூட பெரும் நெருக்கடிகளுக்குள்ளேயே வெளிவருகின்றன. முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ஏதும் நடந்தால் அது பற்றிக் குரல் கொடுப்பது முஸ்லிம் பத்திரிகைகளாகும்.
இந்த பத்திரிகைகளை எத்தனை பேர் வாங்கிப் படிக்கின்றார்கள். எத்தனை வியாபாரிகள் ஒரு சிறு விளம்பரத்தையேனும் கொடுத்து உதவுகின்றார்கள் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் இல்லை என்பதேயாகும்.
முஸ்லிம்களுக்கெதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்த சிங்கள, முஸ்லிம் உறவினைச் சீர்குலைக்க மேற்கொள்ளும் ஒரு சதி முயற்சியாகும். இந்தச் சதியில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது. முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த சந்தேகங்களை சமூகத்துக்கு எதிராகப் பிரசாரப்படுத்தி வருகின்றனர். இதனால் முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்க முற்பட்டுள்ளனர். முஸ்லிம் சமூகத்தை இப்போது இரண்டாகப் பிரித்துப் பார்க்க முற்பட்டுள்ளனர். பாரம்பரிய முஸ்லிம்கள், தீவிரவாத முஸ்லிம்கள் என பிரித்து இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி வருகின்றனர். இன்று எம் முன்னுள்ள பாரிய பொறுப்பு எம்மைப் பற்றிய சந்தேகங்களை தம்மைச் சார்ந்து வாழும் பெரும்பான்மையினச் சகோதரர்களுக்கு தெளிவுபடுத்துவதேயாகும்.
நாம் இன்று எதிர்நோக்கியுள்ள அந்தச் சவாலை எதிர்கொள்ள எம்மத்தியில் நிலவும் பிளவுகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஆத்மீக அமைப்புக்களினடிப்படையில் அரசியலடிப்படையில் ஊர்களடிப்படையில் நாம் பிரிந்து செயற்படுகின்றோம். இந்தப் பிரிவினை தொடருமானால் இந்தச் சவாலை எம்மால் வெற்றி கொள்ள முடியாது.
உருவாகியுள்ள இந்தச் சவாலை எதிர் கொள்வதற்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் கவுன்ஸிலும் தொடராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாம் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். நம்மவர்கள் மிக நிதானமாக நடந்து கொள்வது அவசியமாகும். எமக்காகப் பேசுவதற்கு சிங்கள தலைமைகளைப் பயன்படுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் தம் செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும். நாங்கள் எந்தெந்த விடயங்களில் தவறு விட்டுள்ளோம் என்பதனை சமூகம் ஆராய்ந்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
தேசிய விவகாரங்களில் முஸ்லிம்கள் அக்கறை காட்டுவதில்லை. முஸ்லிம்கள் தனித்து வாழ முற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் சமூகம் சிந்திக்க வேண்டும். இன்று உருவாகியுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நாம் வெளிநாடுகளை நம்பியிருக்க முடியாது. நாம் நம் நாட்டு மக்களையே நம்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.








mmsajp said
This is the habit of our community …………