மட்/மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர், வலயக் கல்வி அலுவலகத்திற்குச் செல்வாரா?
Posted by Kattankudi Web Community on 21/01/2013
மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.எம். இஸ்மாலெப்பை (SLEAS) அவர்கள் ஏறாவூர் மத்தி வலயக் கல்வி அலுவலகத்திற்கு பதவி உயர்வு பெற்றுச் செல்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறியக்கிடைக்கிறது.
ஏறாவூர் மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் வெற்றிடமாகவுள்ள பிரதிக் கல்விப் பணிப்பாளர் (DDE) பதவிக்கு இவரை நியமிக்க சுமார் இரு வாரத்திற்கு முன் நடைபெற்ற காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இத்தீர்மானம் தொடர்பில் பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்;கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காத்தான்குடி கல்விச் சபை மற்றும் காத்தான்குடி அதிபர்கள் சங்கம் ஆகியனவும் மேற்குறித்த தீர்மானம் தொடர்பில் பிரதியமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது.
அதிபர் அல்ஹாஜ் எம்.எம். இஸ்மாலெப்பை அவர்கள் ஏறாவூர் மத்தி வலயக் கல்வி அலுவலகத்திற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்படுமிடத்து வெற்றிடமாகவுள்ள அதிபர் பதவிக்கு மட் அல்ஹிறா வித்தியாலய அதிபர் எம்.சீ.எம். சத்தார் அவர்கள் நியமிக்கப்படவிருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பில் பாடசாலை அதிபருடன் கலந்துரையாடிய போது ‘விடயம் உண்மை என்றும், தான் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’ என்றும் கூறினார். எனினும் மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இது தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
இருப்பினும் 18.08.2004 முதல் மட்/ மீரா பாலிகாவுக்கு இடமாற்றம் பெற்று வந்த அதிபர் அல்ஹாஜ் எம்.எம். இஸ்மாலெப்பை அவர்களின் இன்றுவரையான காலப்பகுதியில் இப்பாடசாலை பல்வேறு சாதனைகளை கல்வியிலும், விளையாட்டிலும் புரிந்துள்ளதுடன் இவரின் நிருவாக காலப்பகுதியில் தான் இப்பாடசாலை தேசிய பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. அத்துடன் இவரது காலப்பகுதியில் அப்பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன் பாடசாலை பௌதீக வளங்களிலும் துரித முன்னேற்றமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.








PMAMF Mohammed H.I.R.A.Z said
சத்தார் சேர் போன்ற திறமையான அதிபரின் நிர்வாகத்தின்கீழ்
அல்ஹிறா பல்வேறு சாதனைகளை சாதிக்க வேண்டி இருக்கையில் அல்ஹிறாவின்
கனவை பொய்யாக்கி சத்தார் சேர் அவர்களை மாற்ற முனைவது அல்ஹிறாவுக்கு
செய்யும் அநியாயமாகும்!!!
Jawahir Saly said
மீரா பாளிகாவைப் பொறுத்தவரை இவர்கள் இருவருமே தரமான அதிபர்களே. இருவருடனும் நான் மிகநெருக்கமாகப் பழகி அவர்களது திறமைகளை மெச்சினவன் . முஹம்மத் ஹிராஸ் அவர்கள் சொன்னதுபோல, அல்ஹிராவுக்கு அதிபர் தேவைதான் , ஆனாலும் அதைவிட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் வலயக்கல்விப் பணிமனையில் D.D.E ஆக இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் என்றும் நான் மதிக்கும் மர்ஹூம் லத்தீப் sir பிரதிக் கல்விப் பணிப்பாளராக இருந்தார். அதன்பின் நீண்ட இடைவெளி , அது ஒரு மறைமுகமான பாதிப்பு. இவ்வாறு ஒருவர் இருப்பது மறைமுகமாக கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே அதிபருக்கு தகுதியானவர்களும் , தகுதியான அதிபர்களும் காத்தான்குடியில் நிறையவே இருக்கிறார்கள். எனவே அவர்களைக்கொண்டு பாடசாலைகளை கொண்டு செல்லலாம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வலயக்கல்விப் பணிமனையில் அந்த இடத்தை இழக்க வேண்டிவரும். கல்குடாவைச் சேர்ந்த நாங்கள் இரண்டுபேர் முன்பு இருந்தோம். இப்போது இருவரும் இல்லை , இந்தப்பாதிப்பு இன்னும் சில மாதங்களில் அங்குள்ளவர்களுக்கு விளங்கும். Sehuali sir தற்போது கிண்ணியாவில் வலயக்கல்விப் பணிப்பாளராக இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு அது பெரிய கௌரவம், ஆனால் அவர் பிரதிக்கல்விப் பணிப்பாளராக ஏறாவூரில் இருந்தபோது கல்குடாவிற்கு கிடைத்த எந்த நன்மையும், பிரதேச அதிபர்,ஆசிரியர்களுக்கு இருந்த தன்னம்பிக்கையுடன் கூடிய பெருமையும் இனிக் கிடைக்காது. எனவேதான் எனது அபிப்பிராயம் இஸ்மாலெப்பை sir ஏறாவூர் அலுவலகத்திற்கு பிரதிக்கல்விப்பணிப்பாளராக பொறுப்பேற்க வேண்டும்.
அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் . அல்ஹம்துலில்லாஹ்