காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

சிறிலங்கா: இரண்டு தலைமை நீதியரசர்களின் கதை

Posted by Kattankudi Web Community (KWC) on 20/01/2013

shiraniசிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக தனது ஆலோசகர்களில் ஒருவரான மோகன் பீரிசை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். மோகன் பீரிஸ் முன்னர் சிறிலங்காவின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியிருந்தார். இவர் அண்மைய ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்.

இவருக்கு முன்னர் தலைமை நீதியரசராகப் பணியாற்றிய சிராணி பண்டாரநாயக்க மீது சிறிலங்கா அரசாங்கத்தால் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அரசாங்கத்தை விமர்சித்தமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், தான் இவ்வாறான எவ்வித குற்றங்களிலும் ஈடுபடவில்லை என சிராணி பண்டாரநாயக்க கூறுகிறார்.

சிறிலங்கா அதிபரின் சகோதரர்களில் ஒருவரின் கீழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்திப் பணிகளை மத்திய மயப்படுத்துவது தொடர்பான சட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு தலைமை நீதியரசராக கடமையாற்றிய சிராணி பண்டாரநாயக்க மறுப்புத் தெரிவித்த நிலையிலேயே இவரை தண்டிப்பதற்கான ஒரு வழியாகவே இவரின் மீது இவ்வாறான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் முன்னாள் தலைமை நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்ததாகவும் விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் இந்த விமர்சனத்தை சிறிலங்கா அதிபர் செயலகப் பேச்சாளர் மோகன் சமரநாயக்க மறுத்துள்ளதுடன் “முன்னாள் தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது திவிநெகும திட்டத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. சிராணி பண்டாரநாயக்க மீது 14 வகையான துர்நடத்தைக் குற்றங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றின் 117 உறுப்பினர்கள் ஏகமனதாக இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தனர்” என மோகன் சமரநாயக்க கூறுகிறார்.

“நீதிபதி ஒருவர் இந்த வகையில் பதவியிலிருந்து நீக்கப்படும் போது ஏனைய நீதிபதிகளும் அச்சத்துடனேயே பணிபுரிய வேண்டும். எதிர்காலத்தில் நீதித்துறையில் எவ்விதமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என்பது இவர்களுக்கு தெரியாது. இவ்வாறான ஒரு சூழலில் சுயாதீன நீதிச்சேவையை எவரும் எதிர்பார்க்க முடியாது” என சட்டவாளரும் செயற்பாட்டாளருமான வெலியாமுன தெரிவித்துள்ளார்.

சிராணி பண்டாரநாயக்க மீதான 14 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கடந்த நவம்பரில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவானது பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு இறுதியில் இவர் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்கு தமது தரப்பு வாதியான பண்டாரநாயக்கவுக்கு போதியளவு காலஅவகாசம் வழங்கப்படவில்லை எனவும், இவர் தொடர்பான சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வதற்கான அனுமதி கூட வழங்கப்படவில்லை எனவும் இந்நிலையில் இவருக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்ததாகவும், சிராணி பண்டாரநாயக்கவுக்கு ஆதரவான சட்டவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“நான் சுயாதீன நீதிச் சேவையை நிலைநாட்டுவதற்காக குரல் கொடுத்துள்ளவர் என்ற வகையில் இவ்வாறு எனக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள அநீதியான குற்றச்சாட்டுக்களை எண்ணி நான் வேதனைப்படுகிறேன். இக்குற்றச்சாட்டுக்களை நான் முற்றிலும் மறுக்கிறேன்” என பண்டாரநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றானது அங்குள்ள அரசாங்க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்திருந்தது.

“முன்னாள் தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் யாப்புக்கு உட்பட்டதாகும். ஆகவே இது சட்ட ரீதியானதாகும். சிறிலங்காவில் உயர் மட்டப் பதவிகளில் உள்ள அதிகாரிகள் தொடர்பான தீர்மானங்களை நாடாளுமன்றமே எடுக்கின்றது. இந்நிலையில் குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முன்னாள் தலைமை நீதியரசரும் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்” என அதிபர் செயலகப் பேச்சாளர் சமரநாயக்க நியாயப்படுத்துகிறார்.

சிறிலங்கா அதிபரின் கையெழுத்துடன் சிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்ட கையோடு மோகன் பீரிஸ் புதிய தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார். நூற்றுக்கணக்கான காவற்துறையினர் மற்றும் சிறப்பு படையினரின் பாதுகாப்போடு மோகன் பீரிஸ் தனது புதிய பணியை ஆரம்பிப்பதற்காக தனது பணியகத்திற்கு சென்றார்.

சிராணி பண்டாரநாயக்க தனது பணியககத்திற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இவருக்குப் பதிலாக நீதிமன்ற பணியாளர்கள் இவரது முன்னைய பணியகத்தை சீர்ப்படுத்தி புதிய நீதியரசரிடம் கையளிக்குமாறு கட்டளையிடப்பட்டது.

சிறிலங்காவின் இரு முக்கிய ஜனநாயகத் துறைகளான நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டுக்கும் இடையிலான ஒரு பனிப்போராகவே சிராணி பண்டாரநாயக்கவின் விவகாரம் கருதப்படுகிறது. அரசியல் யாப்பில் திருத்தம் செய்கின்ற தனியுரிமையை சிறிலங்கா உயர் நீதிமன்றம் மட்டுமே கொண்டுள்ளது. இந்நிலையில் சிராணி பண்டாரநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டரீதியானதல்ல.

இதேவேளையில், நாடாளுமன்றம் தனி இறைமையைக் கொண்டிருப்பதால் நீதிமன்றங்களை அனுசரித்துப் போக வேண்டிய தேவை இதற்கில்லை என ஆளும் கட்சி அறிவித்திருந்தது. “நாடாளுமன்ற சபாநாயகர் என்ற வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான மனு என்னிடம் கையளிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நான் நியமித்துள்ளேன். இந்த வகையில் முன்னாள் தலைமை நீதியரசர் பதவி விலக்கப்பட்டமை தொடர்பில் எந்தவொரு தவறும் இடம்பெறவில்லை” என சிறிலங்கா அதிபரின் பிறிதொரு சகோதரரும் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“தலைமை நீதியரசரின் செயற்பாடுகளில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சுயாதீன நீதிச்சேவையை குழப்பும் விதமாக சிறிலங்கா ஆளும் அரசாங்கம் செயற்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்ட ஆட்சி, இயற்கையான நீதி முறைமை போன்றன மிகக் கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ளன” என முன்னாள் நீதியரசரான சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

“நீதிபதி ஒருவரின் பிரச்சினையைக் கையாள்வதற்கு நாட்டின் அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளுக்கு அமைவாக நடந்து கொள்ள வேண்டும்” என சட்டவாளர் வெலியாமுன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய போக்கானது நாட்டு மக்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் எல்லாவற்றினதும், எல்லோரினதும் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக அமையும்” என அண்மைய ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரித்து வருபவரும் ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் சில நகர்வுகள் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளவருமான மூத்த சட்டவாளர் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலக்கப்பட்டிருந்தார். சரத் பொன்சேகா சிறிலங்கா அதிபரை எதிர்த்து அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்றதைத் தொடர்ந்து இவரது இராணுவப் பதவி நிலை, ஓய்வூதியம் என்பன பறிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டார்.

“தற்போது மகிந்த ராஜபக்சவும் அவரைச் சூழவுள்ளவர்களும் அதிகாரம் என்கின்ற பானத்தை முற்றாக அருந்தியுள்ளனர். இது நாட்டுக்கு நல்லதல்ல” என குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றை தலைமை தாங்கும் ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் நாட்டின் முக்கிய துறைகளின் தலைமைப் பொறுப்புக்களில் உள்ளனர். இவர்கள் தமது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி நாட்டை ஆளுகின்றனர்.

சிராணி பண்டாரநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அனைத்துலக சமூகத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியதுடன், இதனை அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு வலுவாக எதிர்த்திருந்தது. இந்நிலையில் பீரிஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதானது நாட்டின் எதிர்கால சட்ட ஆட்சி மற்றும் பொறுப்பளித்தல் போன்றன தொடர்பாக மிக மோசமான சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் இடம்பெற்ற போதிலும், தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதிய தலைமை நீதியரசை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. தலைமை நீதியரசர் புதிதாக பதவியேற்ற முதல் நாள் நீதிமன்ற வளாகத்தில் இவரைச் சந்தித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

“நடைமுறையிலுள்ள முறைமையின் படி இதனை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். புதிய தலைமை நீதியரசருக்கு கீழ்ப்படியாது பணியாற்ற முடியாது. மிகப் பலமான இராணுவ உத்திகள் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டில் இதுதான் நடக்கும்” என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத மூத்த சட்டவாளர் ஒருவர் தெரிவித்தார்.

வழிமூலம் : Minelle Fernandez – Aljazeera.net
மொழியாக்கம் : நித்தியபாரதி via புதினப்பலகை

About these ads

One Response to “சிறிலங்கா: இரண்டு தலைமை நீதியரசர்களின் கதை”

  1. Mohamed Irsath said

    ஆட்சி மாற வேண்டும்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,371 other followers

%d bloggers like this: