சிறிலங்கா: பௌத்த சிங்கள பயங்கரவாதிகளால் உள்நாட்டு யுத்தம் ஒன்று ஆரம்பமாகலாம்?
Posted by Kattankudi Web Community (KWC) on 15/01/2013
Gulf News ஊடகத்தின் சிறப்பு செய்தியாளர் Tariq A. Al Maeena / மொழியாக்கம்: நித்தியபாரதி.
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009ல் வெற்றிகொள்ளப்பட்ட போது சிறிலங்காவானது பலம்பெற்ற, ஒற்றுமையான ஒரு நாடாக விளங்கும் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது.
மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் வடுக்கள் சிறிலங்கா என்கின்ற தேசத்தை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதித்தது. யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டது தொடர்பில் இதற்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
தமிழ்ப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக சிறிலங்காவைச் சேர்ந்த 150,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த யுத்தத்தின் விளைவாக 80,000 – 100,000 வரையான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த நாட்களில் மட்டும் 40,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இவ்வாறான ஆழமான வடுக்கள் காணப்படுகின்ற அதேவேளையில், சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை கொண்டுவருவதற்கான ஆரம்ப முயற்சிகளில் இந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டது.
ஆனால் இவ்வாறான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் சிறிலங்காவில் காணப்படவில்லை என்பதை யுத்தத்தின் பின்னரான நிகழ்வுகள் சில எடுத்துக்காட்டின. சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
பௌத்த சிங்கள சமூகத்தால் முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர். அத்துடன் முஸ்லீம் மக்கள் மீது பௌத்த சிங்களவர்கள் மேற்கொள்ளும் சில தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
சிறிலங்காவின் ஆழமான பொருளாதார மற்றும் சமூக மோதலை உருவாக்குவதற்காக சிறிலங்காவின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ராஜபக்ச அரசாங்கம் துணைபோவதாக சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறான பௌத்த சிங்கள ஆதிக்கசக்திகளால் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாட்டில் சமாதானம் மற்றும் இனஒற்றுமை போன்றவற்றை நிலைநிறுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா முழுவதிலும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் Bodu Bala Sena என்கின்ற பௌத்த ஆதிக்க சக்தி முதன்மை இடத்தை வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்கள் பௌத்த மதத்திற்கும் பௌத்தர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய என்கின்ற அரசியற் கட்சியுடன் இணைந்து செயற்படும் Bodu Bala Sena என்கின்ற இப்பயங்கரவாதக் குழு அறிவித்துள்ளது. “எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி சிறிலங்காவில் பௌத்த மதத்தையும் அதன் மரபுகளையும் பலப்படுத்துவதுடன், இதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக” இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்படுவதை உறுதிப்படுத்துவதே இந்த அமைப்பின் தெளிவான நோக்காகக் காணப்படுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதத்தை அதாவது இரண்டு மில்லியன்களாக காணப்படும் முஸ்லீம்கள் கடந்த பல பத்தாண்டுகளாக தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது என்கின்ற உண்மையை இவர்கள் மறந்துவிடக் கூடாது.
சிறிலங்காவின் முஸ்லீம் மக்கள் நாட்டின் இராணுவம், காவற்துறை போன்ற துறைகளில் மிக அரிதாகவே இணைக்கப்படும் அதேவேளையில், சிறிலங்கா அரச திணைக்களங்களிலும் ஏனைய அரச நிறுவகங்களிலும் பதவிகளில் அமர்த்தப்படுவதும் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் இவ்வாறான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் சமசந்தர்ப்பத்தை இழக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதேபோன்று சிறிலங்காவின் வர்த்தக மற்றும் வியாபாரத் துறைகள் உள்ளடங்கலான முதன்மையான பொருளாதார நடவடிக்கைகளில் முஸ்லீம் சமூகம் ஓரங்கட்டப்படுகின்றனர்.
சிறிலங்காவின் வடக்கில் யுத்தத்தில் பங்கெடுத்த இரு தரப்பினரதும் தாக்குதலுக்கு உட்பட்டு 130,000 வரையான முஸ்லீம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட யுத்தத்தால் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்கின்றனர். முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை முக்கியப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இதேவேளையில், மத்திய மாகாணத்திலுள்ள கண்டியிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறிய நகரான புவெலிகட என்கின்ற இடத்தில் வாழும் முஸ்லீம் மக்கள் மீது அண்மையில் Bodu Bala Sena அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறைகளை மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் சிறிய கடைகளைக் கொண்டுள்ளனர்.
“பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் குழு ஒன்று முஸ்லீம்கள் சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது வான் ஒன்று வீதிக்கு தடையாக நிறுத்தப்பட்டதாக கூறியே இந்தச் சண்டை ஆரம்பித்தது. இந்த வன்முறைச் சம்பவத்தில் சில முஸ்லீம்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்பு காவற்துறை அதிரடிப் பிரிவு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை” என இந்தச் சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
“சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல பத்தொன்பது இணையத்தளங்களின் ஊடாக இஸ்லாம் மற்றும் முஸ்லீம் தொடர்பாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இதனை மிகச் சிறிய ஆனால் நன்றாக திட்டமிட்டு நிர்வகிக்கப்படும் சிங்கள குழு ஒன்றே மேற்கொண்டுள்ளது” என முஸ்லீம்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அனுராதபுரத்தில் 400 ஆண்டு காலப் பழமை வாய்ந்த முஸ்லீம் புனித தலம் ஒன்று அண்மையில் அழிக்கப்பட்டமை மற்றும் இதனைத் தொடர்ந்து தம்புள்ள புனித பள்ளிவாசல் மீது இப்பகுதியில் பொறுப்பாகவுள்ள புத்த பிக்குவின் தலைமையில் பௌத்த காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டமை போன்றவற்றை முஸ்லீம்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சில பள்ளிவாசல்கள் மீதும் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிகள் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்.
நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை அழித்து நாட்டை கொலைக்களங்களாக மாற்றும் சில பௌத்த சிங்கள பயங்கரவாதிகள் தொடர்ந்தும் தண்டிக்கப்படாது தட்டிக்கொடுக்கப்பட்டால், நாட்டில் மீண்டும் பிறிதொரு நீண்ட கால உள்நாட்டு யுத்தம் ஒன்று ஆரம்பமாகும்.
சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான வன்முறைகள் மற்றும் பயங்கரவாத, அடக்குமுறைகளை இந்த உலகமானது தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்கு சிறிலங்கா மட்டும் விதிவிலக்கல்ல. தனது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை வழங்கத் தவறியதற்கான தண்டனையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து சிறிலங்கா தப்பிக்க முடியாது. (courtesy: புதிப்பலகை)








sadiq said
அரசாங்கத்தின் மறைமுகமான உதவி இந்த இனவாதிகளுக்கு இருக்கும் போது அவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமே, அfரசாங்கம் இவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்ததாக நாடக மாடுமே தவிர தீர்வொன்றும் கிடைகப்போவதில்லை, அரசாங்கத்தையே நம்பி வாழும் நம் முஸ்லிம் தலைவர்களும் இதற்காக குரல் கொடுப்பது போன்று அரசுடன் இனைந்து நாடகம் நடத்துவார்களேதவிர நடக்கப்போவது ஒன்றுமில்லை,
இதற்கான ஒரே முயற்சி இந்திய முஸ்லிம்களைப்போன்று அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் வேற்றுமை பாரது இவ்விடயத்தில் ஒன்றினந்து சிறுவர் சிறுமியர். வயோதிபர்கள், ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னடுக்கும் மாபெரும் வன்முறை அற்ற ஆற்பாட்டமே இதற்கு வழிவகுக்கும்,அனைவரும் அவரவர் ஊர்களிலிருந்து பாராளுமன்றத்தை நோக்கி நகர்ந்தால் இன்னும் சிறப்பாக அமையும்.