அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
Posted by Kattankudi Web Community on 23/02/2012
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (23.2.2012) அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்திற்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று கிராமத்திற்கு ஒரு அபிவிருத்தி திட்டம் கிராமத்தை கட்டியெழுப்புதல் எனும் திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் எதிர்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
இக் கூட்டத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பசீர் சேகுதாவூத், விநாயக மூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் உட்பட அரசாங்க அதிகாரிகள் மாவட்டத்திலுள்ள உள்ளராட்சி மன்றங்களின் தலைவர்கள் அதன் உறுப்பினர்கள் ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பிராந்திய ஊடகவியலாளர்கள் எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இங்கு சென்ற பிராந்திய ஊடகவியலாளர்கள் மண்டப நுழை வாயிலில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதே நேரம் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.அமைச்சர் பசில் ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.







