ஆற்றங்கரையில் வெட்டப்பட்ட பசுவின் சினைக்குட்டி
Posted by Kattankudi Web Community on 21/02/2012
காத்தான்குடியின் ஆற்றங்கரையோரம் வெட்டப்பட்ட பசு மாடு ஒன்றின் சினைக்குட்டியொன்று நேற்று (20.02.2012) உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்ட பொதுமக்கள் காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
வெட்டப்பட்ட பசு மாடு ஒன்றிலிருந்து இந்த சினைக்குட்டி உயிரிழந்த நிலையில் எடுக்கப்பட்டு இதை காத்தான்குடி முதலாம் குறிச்சி ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு சென்றிருப்பதாக அப்பகுதயிலுள்ள பொதுமக்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சினைக்குட்டியை பொலிசார் அவ்விடத்தில் புதைத்துள்ளனர்.
இங்கு இந்த மாட்டுக்குட்டியை வீசிய சந்தேக நபரை கைது செய்யவுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனார்.
பசு மாடு வெட்டக் கூடாது என்று காத்தான்குடி நகர சபை கண்டிப்பாக அறிவித்துள்ள நிலையில் இது களவில் அறுக்கப்பட்டு குட்டி வீசப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாம் பொலிசாருக்கு அறிவித்துள்ளோம் எனவும் அவர் கூறினார்.
காத்தான்குடியின் மாடு அறுக்கும் மடுவத்திலிருந்து கொண்டுவரும் கழிவுகள், மாட்டுக்குடல் என்பன காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள மஸ்ஜிதுல் ஈமான் பள்ளிவாயலுக்கு முன்பாக உள்ள ஆற்றில் கழுவப்படுவதாகவும் இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் முதலைகளின் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் இந்த ஈமான் பள்ளிவாயலின் தலைவரும் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளருமான எஸ்.எம்.பி.முகைதீன் மற்றும் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.நசார் (அல்பா) ஆகியோர் தெரிவித்தனர்.








