வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை
Posted by Kattankudi Web Community on 16/02/2012
இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?
ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?
அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர்.
“அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)
இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் “வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ‘மஹர் வழங்கி மண முடியுங்கள்” என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.
அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)
அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)
மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி?
“ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி” இது முதுமொழி. இப்போது “ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி” இது புதுமொழி.
வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.
இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன – மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.
இறைவன் தன் திருமறையில் “விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.
அப்போதுதான் வரதட்சணை ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ்…..
நன்றி-ரீட் இஸ்லாம்







Aliyar Mohideen - Kattankudy said
பல நல்ல விசயங்கல சொல்லியிருக்காக… இந்த கட்டுரையில……
என்னதான் கட்டுர படிச்சாலும் குத்பா உர கேட்டாலும் ஆயிரம் பயான் கேட்டாலும் எல்லார்ர மனசும் இந்த விசயத்துல மாத்திரம் ஒத்துப்போகுதில்லயெங்குறது உண்ம…
புள்ள படிச்சிட்டு வெளிநாடு போறயென்டு முடிவு செஞ்சாப்போதும் உம்மாவும் வாப்பாவும் புள்ளைக்கு ஊருக்குள்ள 2 மாடிஊடு கட்டுப்பட்டிருக்கா எங்குறதுதான் ஆராய்ச்சி……
பெத்தவங்க நச்சரிப்பால என்ன செய்றயென்டு சீதனம் வாங்குறவக….
மாமனாரு தொல்ல பொறுக்கா சீதனம் வாங்குறவக…..
இப்புடி பல விதம்…
படிச்ச புள்ளைகள மாட்டு யாவாரம் பண்ற மாதிரி அடிமப்படுத்துற பணக்கார மாமனாருக இரிக்குமட்டும் இது நடந்துக்கிட்டுத்தான் இரிக்கும்.
மாப்புள சீதனம் வாங்கற இல்லையென்ட முடிவோட அரம்பத்தல இருந்து நிய்யத்தோட இருந்தாலும் மாப்புள படிச்சி கெம்பசுக்கு எடுபட்டயாம் என்டு தெரிஞ்சாப் போதும் ….
நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு ஒரு கூட்டம்….
இவக செய்யிற இந்த வேலயால ஏழைப்புள்ளைகளுக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்… ஏப்படுது…
இந்தப் பாவமெல்லாம் யாருக்கு?? நம்ம உருக்குள் இப்ப இந்த விசயம் போட்டியில போயிட்டிரிக்கி…. உன்ட அவளுக்கு 2 மாடி ஊடா? என்ட அவளுக்கு 2 மாடி ஊடும் மாப்பள்ளைக்கு காரும் கொடுப்பன்…. எங்க போய்ச சொல்லுற இத…. வெளியால ஹாஜியாரு வேசம்……??
sabry basheer said
செவிடன் காதில் ஊதும் சங்கு,,,,,,,,,,,,,
Nooman said
உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர்? எத்தனை பேர்? எ
இந்தக் கேள்வி கேட்டும் எத்தனை பேருக்கு புத்தி வந்த??
வெளிநாட்டுல நாங்க படுறபாடு தெரியுமா அவகளுக்கு?
காலுக்கு மேல கால் போட்டுட்டு அதக்குடு இதக்குடு என்டு ஊரான் சொத்த வாங்கி ஏப்பமிடுறத்தோட அவங்க வீட்டிலேயே ……..த்துழும்புற கலாச்சாரத்த எப்ப விடுறது????
Ahamed Rizvi said
எவற்றுக்கெல்லாமோ சண்டை போடுகிறோம்- எமது சமூகத்தின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் என்னென்னவென்று புரிந்து கொள்ளாமல்.
படித்தவர்கள், உலமாக்கள், எல்லாருமே மௌனிகளாகவே இருக்கின்றார்கள்.
உடனடியாக தீர்வு காணப் பட வேண்டிய கொடிய தொற்று நோய் இது.
இதற்கான தனியான நிறுவனம் ஒன்று ஊரில் நிறுவப் பட்டு,
தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.
முதலில், இவ்வாறான சூழலிலும் சமூக உணர்வுள்ள, இறைவனுக்காக எதையும் இழக்கத் துணிந்த, வீடு, சொத்துக்கள் வாங்காமல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் கண்ணியப் படுத்தப் பட வேண்டும்.
70% பங்கு பெண்களுடையது.
அவர்களுக்கு முதலில் விழிப்புணர்வு கிடைக்க வேண்டும்.