மோப்பநாய் உதவியுடன் பகல் கொள்ளையர்கள் வசமாக அகப்பட்டனர்
Posted by Kattankudi Web Community (KWC) on 12/02/2012
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக பகல் வேளைகளில் வீடுகளை உடைத்து கொள்ளையிடும் சம்பவம் இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸாரின் மோப்பநாய் ஊடாக கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையின் போது இரண்டு கொள்ளையர்கள் மட்டக்களப்பு கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடம் இருந்து நகை பணம் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் பல பகல் கொள்ளைகள் இடம்பெற்ற நிலையில் மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற பகல் கொள்ளையினைத் தொடர்ந்தே மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி டி.எம்.என்.வி.தசாநயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சிறுகுற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ரி.சாந்தகுமார் தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் கடந்த 7ம் திகதி பூம்பூகார் வீதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது வீட்டு யன்னல்களை திறப்பதற்கு பயன்படுத்தப்படும் குறடு, ஸ்கூட்ரைவர் போன்றவை இவர்களிடம் காணப்பட்டதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைக்குட்படுத்தப்படுத்தி குறித்த இருவரும் தாம் இக்கொள்ளைகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையினூடாக மட்டக்களப்பு நகர் பகுதியல் ஏழு வீடுகளையும், கல்லடியில் நாலுவீடுகளையும் பகல் வேளையில் யன்னல்களினூடாக திறந்து கொள்ளையிட்டமையும் ஒப்புக்கொண்டுள்ளதுடன் கொள்ளையிட்ட பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆரயம்பதி இல:37, மதுராபுரம் பகுதியை சேர்ந்த கந்தையா சந்திரகுமார் அல்லது குமார் (25), 1ம் வட்டாரம் மண்முனை ஆரயம்பதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை உதயச்சந்திரன் (32) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து பணம், தங்க நகைகள், மற்றும் இமிற்றேசன் நகைகள், மின்சாதனப் பொருட்கள், கையடக்க தொலைபேசிகள், கமராக்கள், உடுப்பு, வெண்கல பாத்திரங்கள், அலுமினியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி திரு.கருணாகரன் முன்னிலையில் கடந்த 8ம் திகதி ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டுள்ளார். தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(Ada derana)








Mohammed Hiraz said
பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான் !!!