முதன்முறையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு விஜயம்
Posted by Kattankudi Web Community on 08/02/2012
பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) தலைவருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா முதன்முறையாக எதிர்வரும் 13ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சின் தேசிய ஆலோசகர் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.
இம்மாதம் 13ம் திகதி மட்டக்களப்பு சீலாமுனையில் ஆரம்பமாகும் மூன்று நாள் மூலிகை கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அமைச்சருடன் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திசாநாயக்காவும் வருகை தரவுள்ளார்.
சீலாமுனை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.கண்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் கிழக்கு முதலமைச்சர்’ சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வினாயகமூர்த்தி முரளீதரன், பஷீர் சேகு தாவூத் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1994ம்ஆண்டு முதல் தொடர்ந்து அமைச்சர் பதவி வகித்துவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது விஜயம் இதுவென தெரியவருகின்றது.







