முஸ்லிம்களின் பள்ளிவாயல் காணியை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை: பிரம்ம குமாரிகள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்
Posted by Kattankudi Web Community (KWC) on 29/01/2012
மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் பிரம்மகுமாரிகள் தியான மண்டபம் நிர்மாணிப்பதற்கு முஸ்லிம்களின் பள்ளிவாயல் காணியை ஒரு போதும் நாம் ஆக்கிரமிக்கவில்லையென இன்று (29.1.2012) மட்டக்களப்பு கள்ளியங்காடு பிரம்ம குமாரிகள் தியான மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரம்ம குமாரிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.சுரேஸ் தெரிவித்தார்.
பிரம்மகுமாரிகள் அமைப்பு தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் செயற்பாடு தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று நடைபெற்றது.
இதில் மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கு பற்றினர்.
இதன் போது இந்த பிரம்மகுமாரிகள் மண்டபத்தை அமைத்துள்ள இடத்தில் முஸ்லிம்களின் புனித வணக்கஸ்த்தலமான பள்ளிவாயல் இருந்துள்ளது.
இதை தங்களது அமைப்பு ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்படுகின்றது இதை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள் என ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் கேட்டகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அதன் இணைப்பாளர் சுரேஸ் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பில் வாடகை கட்டிடமொன்றில் நாங்கள் எமது தியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தோம்.
அப்போது எமக்கு ஒரு கட்டிடம் அமைப்பதற்கு காணி தேவைப்பட்டது. அதற்காக கொத்துக்குளம் பகுதியில் ஒரு காணியை நாம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கேட்டுச் சென்றோம். அதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் இந்த காணியை எமக்கு கட்டிடம் அமைப்பதற்காக அடையாளப்படுத்தி தந்தார்.
அதன் பின்னர் இந்த காணியில் எமது பிரம்ம குமாரிகள் கட்டிடம் அமைப்பது தொடர்பாக அதற்காக ஒதுக்கப்பட்ட காணியென மூன்று மாதங்கள் பெயர்ப்பலகை இட்டிருந்தோம். ஆனால் அப்போது எந்த விதமான எதிர்ப்பும் எமக்கு வரவில்லை.
அதன் பின்னர் 16 இலட்சம் ரூபா செலவில் இக்கட்டிடத்திற்கான அத்திவாரம் போட்ட பின்னர்தான் இது ஏற்கனவே பள்ளிவாயல் இருந்த காணியென்று தெரியவந்தது.
அத்துடன் இக்காணிக்குப்பதிலாக பள்ளிவாயலுக்கு வேறு ஒரு காணி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக்காணியில் ஏதாவது சட்ட பிரச்சினைகள் உள்ளதா என பலரிடமும் விசாரித்த போது சட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லையென கூறப்பட்டது.
சட்டத்தை மீறி நாம் இந்த கட்டிடத்தை நாம் நிர்மானிக்கவில்லை. சட்ட ரீதியாக முழு அனுமதியுடன் தான் இதை நிர்மானித்துள்ளோம்.
இந்த கட்டிடத்திற்கான அனுமதி பெறுவதற்காக மட்டக்களப்பு மாநகர சபைக்கு விண்ணப்பித்த போது எமது கட்டிட அனுமதி தருவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையினாலும் அனுமதி வழங்கப்பட்டது.
பிரதேச செயலக கணக்காளர் தருமலிங்கமும் இதற்கு பதிலாக வேறு காணி முஸ்லிம்களின் பள்ளிவாயல் கட்டிடத்திற்காக வழங்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
நாங்கள் இந்த இடத்தில் பிரம்ம குமாரிகள் மண்டபத்தை அமைத்தது தொடர்பில் முஸ்லிம் சமூக நிறுவனங்கள் எதுவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே போன்று இந்த பள்ளிவாயல் நிருவாகம் எந்த எதிர்ப்புக்களையும் காட்டவில்லை.
ஆனால் இரண்டு பேர் மாத்திரமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டிட விடயத்தில் ஏதாவது சட்ட பிரச்சினை இருப்பின் நியாயத்தை பெற்றுக்கொள்ள அவர்கள் நீதிமன்றத்தை நாடமுடியும்.
எங்களுக்கு இந்த ஆத்மீக நடடிக்கையை மேற்கொள்ள எந்த நாடும் பணம் தரவில்லை. நாங்கள் யாரிடமும் கையேந்துவதில்லை.
சுனாமி அனர்தத்திற்கு பின்னர் எமது ஆத்மீக நடவடிக்கை மட்டக்களப்பில் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 கிளைகள் இதன் கீழ் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் வாழைச்சேனை ஆதார வைத்திய சலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.தட்சணாமூர்த்தி உட்பட அதன் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுதந்திர ஊடகவியலாளர் ஹுஸைன் உட்பட தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரும் பங்கு பற்றினர்.
This slideshow requires JavaScript.







