சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க ஓய்வூதியம் – லக்ஸமன் யாப்பா
Posted by Kattankudi Web Community (KWC) on 24/01/2012
எதிர்வரும் மார்ச் மாதத்துடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க ஓய்வூதியம் பெறும் நிரந்தர உத்தியோகத்தர்களாக மாற்றப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஸமன் யாப்பா அபேவர்த்தன வாழைச்சேனையில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (24.1.2012) மாலை வாழைச்சேனை பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அமைச்சர் லக்ஸமன் யாப்பா அபேவர்த்தன சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர் வரும் மார்ச் மாதத்துடன் அரசாங்க திணைக்களத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர்.
இவர்கள் திவிநெகும எனும் திணைக்களத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர். அதன் மூலம் இந்த நாட்டிலுள்ள அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் நிரந்த அரசாங்க உத்தியோகத்தர்களாக மாற்றப்படவுள்ளனர்.
இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பெறவுள்ளளோம்.
நிரந்தர ஓய்வூதியம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மாற்றப்பட்டு அவர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் பெறும் அத்தனை சலுகைகளும் வழங்கப்படும்.
திவிநெகும திட்டத்தினுடாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாடுபடவேண்டும். அதற்காக திறம்பட உழைக்க வேண்டும்.
இத்திட்டத்தனை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டும்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர்களாக மாறும் போது மூன்று வழிவகைகளை பின்பற்ற முடியும். இவ்வளவு காலமும் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக 12வீதம் செலுத்தி வந்த ஊழியர் சேமலாப நிதியினை (ஈ.பி.எப்.) பெற்றுக்கொள்ள முடியும் அவ்வாறு அவர்கள் அதை பெற்றுக்கொண்டால் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் புதிய நியமனத்துக்குள்ளாகுவார்கள்.
அவ்வாறில்லாமல் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்கிய 12 வீத ஊழியர் சேமலாப நிதியினை பெறாமல் விட்டால் அவர்கள் ஆரம்ப முதல் அவர்களின் சேவை கணக்கிடப்பட்டு நிரந்தர ஓய்வூதியத்துக்கு உடனடி தகுதிபெறுன்றனர்.
அத்தோடு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து நீங்கிக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு இரண்டு வருட சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியும் வழங்கப்படும்.
இவற்றில் ஏதாவது ஒன்றை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பின்பற்ற முடியும். ஆனால் எந்த வொரு சமுர்த்தி உத்தியோகத்தரும் பணத்தைப்பெற்றுக்கொண்டு சேவையிலிருந்து விடுபடக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட ஆலோசனையாகும்.
தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களாக இருப்பவர்கள் அரசாங் உத்தியோகத்தர்களாக மாற்றப்பட்டால் அனைவருக்குமே இதன் மூலம் சிறந்த எதிர்காலமுண்டு இதனால் யாரும் இதிலிருந்து நீங்கி விடக்கூடாது என நான் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக்கப்பட்டவுடன் அவர்களளுக்கான வீட்டுக்கடன் வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.
இவ்வளவு காலமும் வழங்கப்படாமலிருந்த அனைத்து பதவியுயர்களும் நிரந்தமாக்கப்பட்டவுடன் வழங்கப்படும். தற்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தையும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இம்மாத சம்பளத்துடன் வழங்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார பணிப்பளார் எம்.நடேசராசா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் உட்பட அதிகரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.







