தாளங்குடாவில் வீதி விபத்து
Posted by Kattankudi Web Community (KWC) on 23/01/2012
- தகவல் மற்றும் படங்கள்: அபூ மாசின் -
இன்று முற்பகல் 11:00 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பான தகவல்களையும் படங்களையும் வாசகர் ஒருவர் அனுப்பி வைத்திருந்தார்.
அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனமே மேற்படி விபத்தில் சிக்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அக்கரைப்பற்றில் இருந்து சீமேந்து குழைக்கும் இயந்திரத்தையும் அதற்குரிய வேலைகளில் ஈடுபடுவோரையும் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி இந்த வாகனம் பயணித்துள்ளது. சாரதியைத் தவிர்த்து வாகனத்தின் முன்பகுதியில் இரண்டு பேரும், பின்பகுதியில் எழு பேரும் பயணித்துள்ளனர்.
இடையில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய வாகனம் ஒரு பக்கமாக பிரண்டு அதிசக்தி மின்சாரத் தூண் ஒன்றில் மோதியுள்ளது.
மாடு ஒன்று வீதியின் குறுக்கே வந்ததாகவும், அதில் மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட போதே வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் சாரதி கூறியுள்ளார் எனினும் சாரதி தூக்கத்தில் வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என போக்குவரத்து போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அதிஷ்டவசமாக வாகனத்தில் பயணித்தோர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர்.
பொத்துவில் முதல் திருக்கொண்டியாமாட வரையிலான வீதி சுனாமிக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஜப்பானிய மக்களின் நிதி உதவியைக் கொண்டு அகலப்படுத்தப்பட்டு காபட் இட்டு புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப் பட்ட பின்னர் இவ்வீதியில் விபத்துகள் அதிகளவு இடம்பெற்று வருகின்றன என்பதும், கூடுதலான விபத்துகள் சாரதிகளின் கவலையீனத்தாலும், வேகமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துவதாலும் இடம்பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வாசகர்கள் இவ்வாறான செய்திகளையும் படங்களையும் எமது மின்னஞ்சல் முகவரியான kattankudi@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம், பொருத்தமான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்ட பின் பிரசுரிக்கப்படும்)












