எங்களது தாய் மண்ணில் வாழ்ந்து மரணிப்பதற்கு உதவுங்கள்-உன்னிச்சை முஸ்லிம் நலன்புரிச் சங்கம்
Posted by Kattankudi Web Community on 22/12/2011
எங்களது சொந்த தாய் மண்ணில் வாழ்ந்து மரணிப்பதற்கு உதவுங்கள் என்று 20.12.2011 செவ்வாய்க்கிழமை சமூக மதப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழுச் செயலாளருமான இல்மி அஹமட் லெவ்வை அவர்களின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம் பெற்ற நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களுடனான கலந்துரையாடலில் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் மிகவும் வினயமாகக் கேட்டுக்கொண்டார்கள்.
தொடர்ந்து அவர்கள், 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரவாத வன்செயல் காரணமாக நாங்கள் சொந்த மண்ணையும், உடமைகளையும் இழந்து வெளியேற்றப்பட்டோம். இன்று சுமுகமான சூழ் நிலை நிலவுவதனாலும், நாட்டின் எல்லாப்பகுதியிலும் உள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறலாம் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அங்குள்ள அரச உயரதிகாரிகள் நாங்கள் குடியேறுவதை தொடர்ந்து மறுத்த வருகின்றார்கள். இதுவரை எந்த அரச நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை பாரம்பரியமாக விவசாயமே செய்து பழக்கப்பட்டதனால் இதுகாலவரை பொருளாதாரக் கஸ்டத்துடனே வாழ்ந்து வருகின்றோம்.
எனவே தயவு செய்து எங்களது தாய்மண்ணில் குடியேறி பரம்பரையாக மேற்கொண்டு வந்த விவசாயத் தொழிலை செய்வதற்கும் எங்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உதவுங்கள் என்று அவர்கள் மிகவும் மனக்கவலையோடு வினயமாகக் கேட்டுக்கொண்டார்கள்.
இக்கலந்துரையாடலில் கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் ஸனலி அவர்களும், முன்னால் புனர்வாழ்வு திணைக்களத் தலைவர் சல்மான் அவர்களும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழுச் செயலாளர் இல்மி அஹமட் லெவ்வை அவர்களும், உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிசங்க தலைவர் ஆதம் லெவ்வை, செயலாளர் ஹாலிதீன், பொருளாளர் அப்துல் ஜப்பார், உபசெயலாளர் நியாஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், இதற்காக என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் நடவெடிக்கைகளையும் மேற்கொள்வேன் என உறுதியளித்தார்கள்.
தகவல் : இல்மி அஹமட் லெவ்வை








