இஸ்லாமிய அடிப்படை, மூடநம்பிக்கைகளுக்கு மத்தியில் கிரகணங்கள்”
Posted by Kattankudi Web Community (KWC) on 10/12/2011
அஷ்ஷேக் M.H.M.அஸ்பர் ஹசன் (பலாஹி)
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும்.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது . இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வுக்கு சந்திரகிரகணம் என்று கூறப்படுகிறது.
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் என்பவை அல்லாஹ் ஏற்படுத்திய பிரபஞ்ச விதிகளுக்கு அமைவாக வானில் ஏற்படும் நிகழ்வுகளாகும். இது புவியில் ஏற்படும் வேறு எந்த நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுபவையல்ல என்பதை இஸ்லாமும் , இன்றைய விஞ்சானமும் உம்மைப்படுத்துகிறது.
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் மரணித்தபோது சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள் யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’
அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.
அறிவியல் உண்மை இவ்வாறு இருக்க, சந்திர கிரகணம் என்பது சந்திரன் என்னும் கோளை ராகு என்னும் பாம்பு விழுங்குவதால் உருவாகிறது என்றும், கிரகணம் நீங்குதல் என்பது விழுங்கிய நிலவினை அப் பாம்பானது வெளியே உமிழும் நிகழ்ச்சி என்றும் கூறுவது அறிவியலுக்குப் புறம்பான ஒரு கற்பனையே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்
இவையிரண்டும் ஏற்படும் போது முஸ்லீம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் தமது மேலாடை இழுபட (வேகமாக) பள்ளிவாயளிக்குள் நுளைந்தார்கள். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரகஅத்துக்கள் தொழுவித்தார்கள். பின்னர் எவரது மரணத்திற்க்காகவும் சூரிய,சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை.எனவே அவ்விரு கிரகணங்களையும் காணும் போது தொழுங்கள். உங்களுக்கு ஏற்பட்டது விலகும் வரை துஆச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
ஆதாரம் (புகாரி)
கிரகணம் ஏற்படும் போது அதற்கான தொழுகையை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. கிரகணம் எப்போது ஏற்படும் என்பதை இன்றைக்கு மிகத் துல்லியமாக முன்கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டாலும், அதில் மாத்திரம் நம்பிக்கை வைக்காமல் , அது ஏற்படுவதை நேரடியாக பார்த்த பின்னரே தொழுகை நிறைவேறப்பட வேண்டும் என்பது “நீங்கள் கிரகணங்களைக் கண்டால்” என்ற நபிமொழியில் இருந்தும், நபியவர்களின் நடைமுறையில் இருந்து தெளிவாகிறது.
இந்நடைமுறை நமது கிரகணத் தொழுகைகளின் போது கவனிக்கப்படுவதில்லை. மாறாக வானியல் கணிப்பீட்டை மாத்திரம் அடிப்படையாக வைத்து தொழுகை நிறைவேற்றப்படுவதால் சிலவேலைகளில் கிரகணம் ஏற்படுவதற்கு முன்னரும், கிரகணம் ஏற்பட்டது நமது கண்களுக்கு தென்படாத போதும் தொழுகை நிறைவேற்றப்படுவதை அவதானிக்க முடிகிறது. இது ஸுன்னாவுக்கு மாற்றமான நடைமுறையாகும்.
மூட நம்பிக்கைகள்:
பழங்காலந்தொட்டே மக்கள் மத்தியில் கிரகணம் குறித்த பல மூட நம்பிக்கைள் நிலவி வருகின்றன, இதில் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கான ஒன்றல்ல என்பது இன்றும் கூட கிரகணம் தொடர்பில் நிலவி வரும் மூட நம்பிக்கைகள் கட்டியம் கூறுகின்றன.
உலக வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளதை அறியமுடிக்கிறது, அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் என்பவர் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்போது ஏற்படும் என்பதை முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, தமக்கு உணவுப் பொருட்களைத் தரமறுத்த செவ்விந்தியர்களிடம் ‘நீங்கள் எங்களுக்குப் போதுமான அளவில் உணவளிக்காததால் குறிப்பிட்ட தினத்தில் சூரியன் இருட்டில் மறைந்து விடும்’ என்று அச்சுறுத்தினார். அவர் குறிப்பிட்ட தினத்தன்று சூரியக்கிரகணம் ஏற்படவே, அதைக் கண்டு பயந்து நடுங்கிய செவ்விந்தியர்கள் கொலம்பஸ்ஸிற்கு ஏராளமான உணவுப்பொருட்களையும், மற்ற பொருட்களையும் கொடுத்ததாக சரித்திர குறிப்புகள் கூறுகின்றன.
கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தைப் பார்த்தால், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என்றும், கிரகணம் அன்று வெளியில் செல்லக்கூடாது, குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்றால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் என்றும் கிரகணங்களின் போது கர்ப்பிணிப் பெண்கள் ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தால், எந்தச் செயலைச் செய்கிறார்களோ, அதை ஒத்திருக்கின்ற குறைபாடுடைய குழந்தைப் பிறக்கும் என நம்புகின்றனர். இவையெல்லாம் அறிவுக்கு ஒத்துவராத வெறும் மூட நம்பிக்கைகளாகும்.
இதனால் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி சில குறைபாடுகளுடன் குழந்தை பிறந்தாலும் அதை கிரகணத்தோடு தொடர்புபடுத்துவதும், அன்றைய தினம் கற்பிணிகளை அறைகளுக்குள்ளே அடைத்து வைக்கின்றனர்.
இதனை விஞ்சான ரீதியாக பார்க்கின்ற அறிஞ்சர்கள் கூட கிரகணங்களின் அதிகபட்ச பாதிப்பு என்பது அதை வெற்றுக் கண்ணால் பார்க்கும் போது அதன் கதிர்கள் கண்களைப் பாதிப்பதாகும், அதன் காரணமாகவே அதற்குரிய கருவிகளைக்கொண்டு பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதுவும் சூரிய கிரகணம் என்கின்ற போதுதான் கூடுதலாக ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சந்திர கிரகணம் இரவில் நிக்ழ்வதால் அதனைப் பார்ப்பதால் பாதிப்பு இல்லை எனவும் விஞ்சானிகள் குறிப்பிடுகின்றனர்.
வெளியில் சாதாரணமாக நடமாடும் மனிதர்களுக்கே பாதிப்பு இல்லை எனும் போது வயிற்றில் உள்ள குழந்தை பாதிக்கப்படும் எனக்கூறுவது அறியாமையாகும் என்கின்றனர்.
எனவே இவ்விரு நிகழ்வுக்காகவும் ஸுன்னாவை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் போது இது தொடர்பிலான மூடநம்பிக்கை களையும் களைவதற்கு உலமாக்கள் முயற்சிக்கவேண்டும்.







Irham Segu Dawood said
காலத்துக்குப் பொருத்தமானதும் காலாகாலமாக நமது சமூகத்தில் இருந்து வருகின்ற மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றதுமான கட்டுரை. எனது அறிவுக்கு எட்டியவரை கிரகணங்களின் போது கர்ப்பிணிப் பெண்கள் ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தால், எந்தச் செயலைச் செய்கிறார்களோ, அதை ஒத்திருக்கின்ற குறைபாடுடைய குழந்தை பிறக்கும் என்ற மூடநம்பிக்கை நமது பகுதிகளில் மட்டும்தான் இருக்கின்றது. ஏனெனில், மேல் மாகாணத்தில் உள்ள முஸ்லிம் ஊர் ஒன்றிலேயே நான் திருமணம் முடித்து வசித்து வருகின்றேன். இங்கு அவ்வாறான எத்தகைய நம்பிக்கைகளும் இல்லை. கிரகணம் அன்றைக்கு கர்ப்பிணிப் பெண்கள் ஏனைய நாட்கள் போன்று தமது வழமையான செயற்பாடுகளை செய்கின்றனர். அவர்களுக்கு பிறந்துள்ள குழந்தைகளும் ஆரோக்கியமான குழந்தைகளாகவே பிறந்துள்ளதையும் நான் அவதானித்துள்ளேன். ஆனால் கைக்குழந்தைகளை கிரகண நேரத்தில் வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற ஒரு பொதுவான கருத்து இங்கு உள்ளது. கிரகண நேரத்தில் வெளியாகின்ற கதிர் வீச்சுக்கள் கைக்குழந்தைகளை தாக்கும் என்ற விஞ்ஞான ரீதியான கருத்தை அதற்கு ஆதாரமாக சொல்வார்கள். ஆனால், அதில் எந்தளவு தூரம் உண்மை உள்ளது என்பதை நான் அறிந்திலேன்.
Mahmooth said
சில பிரதேசங்களில் கிரகணத்தின் போது உலாவிய கர்பிணிகளுக்கு
ஊனமான குழந்தை பிறந்த சான்றுகளும் உள்ளன.இருப்பினும் அதற்கான காரணத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.