நூல் அறிமுகம்: இஸ்லாத்தில் இசை
Posted by Kattankudi Web Community (KWC) on 25/11/2011
‘இஸ்லாத்தில் இசை’ என்ற கருத்தாக்கம் அறபு முஸ்லிம் சிந்தனைப் பரப்பில் மட்டுமல்ல இஸ்லாம் பரவிய ஆசிய சமூகங்களிலும் பெரும் வாதவிவாதங்களை இன்றுவரை கிளறிவிட்டுள்ள ஒரு விவகாரம் என்பதை நாம் நன்கறிவோம்.
நாம் வாழும் இப்பின்நவீன யுகத்தில் மட்டுமல்லாது பல நூற்றாண்டுகளாக எமது பாரம்பரியத்தில் இவ்விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது.
கருத்தியல்கள் அல்லது சிந்தனைகள் அடிப்படையில் ஒரு தேசம் உருவாகிய பின்பும் அதன் கோட்பாடு சார்ந்த வாதவிவாதங்கள் முடிவடையாமல் தொடர்வதைப் போல அழகியல் பற்றிய அல்லது நுன்கலை பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு குறித்த வாதமும் இந்த வகையிலேயே நோக்கப்பட வேண்டும்.
‘ஹந்தஸத் அஸ்ஸவ்த் – ஒலி தொழில்நுட்பம்’ குறித்த ஆய்வு அறபு இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடும் பாரம்பரியத்தைக் கொண்டது. பதிற்றுக்கணக்கான இமாம்கள், சட்ட வல்லுனர்கள், பிற துறை சார்ந்தவர்கள் இந்த ஒலித் தொழில்நுட்பத் துறையிலும் பெரும் பங்காற்றியுள்ளனர். சென்ற நூற்றாண்டின் இறுதியில் ‘இஸ்லாமிக் ஓர்னமென்டேஷன்’ என்ற இஸ்லாமிய அழகியல் கலைகள் பற்றிய மிக விரிவான ஆய்வை முன்வைத்த இஸ்மாயில் பாரூக்கியும் அவரது துனைவியார் லம்யா அல் பாரூக்கியும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்கள் எனக் கருதுகின்றேன். இஸ்லாத்திற்கு ஒரு நாகரீக பதிலீட்டை கோரிநிற்கும் முகமாகவே இவ்வாய்வுகள் மேற்கிளம்பி வருகின்றன. இஸ்லாம் வெறும் இலட்சியவாதமாகவன்றி அது நடைமுறைச் சாத்தியமான பண்பாடாக முன்வைக்கும் வகையிலேயே மேற்குறித்த ஆய்வுகள் நம்மை வந்தடைகின்றன.
இஸ்லாத்தில் இசை – கலாநிதி முஹம்மத் இமாரா – தமிழில் அஷ்ஷெய்க் பி. தாரிக் அலி (நளீமி) – நிகழ் வெளியீடு 2011 – பக்கம் 68 – விலை ரூ.180
அந்த வகையில் ‘இஸ்லாத்தில் இசை’ என்ற கலாநிதி முஹம்மத் இமாரா அவர்கள் எழுதிய அஷ்ஷெய்க் பி. தாரிக் அலி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நிகழ் பதிப்பகத்தால் அழகிய வடிவமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூல் தமிழ் வாசகப் பரப்பில் காத்திரமான பணியாகும். நான் அறிந்தவரை இஸ்லாத்தில் இசை பற்றிய எதிர்மறைச் சிந்தனைகள் நிரம்பிய தமிழ் வாசகப் பரப்பில் இசை பற்றிய சமன் செய்யப்பட்ட பார்வை ஒன்றை முன்வைக்கும் இரண்டாவது நூலாக இதனைக் கருதுகின்றேன். பல தசாப்தங்களுக்கு முன்னர் அப்துல் வஹாப் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவின் ஓர் அத்தியாயமான ‘கிதாபுஸ் ஸமாஃ – இசை கேட்பதிலுள்ள இஸ்லாத்தின் ஒழுங்கள்’ என்ற நூலுக்குப் பின் வருகின்ற இரண்டாவது வரவாக இதனைக் கொள்ளலாம்.
முஸ்லிம்கள் இந்த இடத்தை வந்தடைவதற்கு, இஸ்லாத்தில் இசை பற்றிய எதிர்மறைப் பார்வைகள் அல்லது பத்வாக்கள் பொதுமைப்படுத்தப்பட்டு அனைத்து வகையான இசை முயற்சிகளையும் அல்லது ஒலித் தொழில்நுட்பம் குறித்த எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்ற நிலைக்கு சென்றமை மிக முக்கியமான காரணியாகும். மற்றது பாடல், இசை, இசைக் கருவிகளை தடைசெய்து வந்துள்ள பலவீனமான ஹதீஸ்களை அப்படியே எந்தவித விமர்சனமுமின்றி வரலாறு நெடுகிலும் பரிவர்த்தனை செய்தமையும் காரணமாகும். இசை இன்றி எந்தவொரு வழிபாடும் பண்பாடும் உலகில் கிடையாது. முஸ்லிம்களால் நம்பப்படும் தாவூத் நபிகள் இசை மூலமே வழிபாடு செய்தார். அவர் இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகளை ‘மிஸ்மார்’ எனும் யாழ் கருவி மூலமே இசைத்தார் எனவும் அப்போது மொத்த இயற்கையிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் அதற்கு கட்டுண்டு கிடந்ததாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய வழிபாடுகளில் அடிக்கடி ஓதப்படும் அல் பாதிஹா அத்தியாயம் ஏழு ஸ்வரங்களைப் போல ஏழு வசனங்களும் தனியான இசைத் தன்மை கொண்டது. ‘ஸபுஉமதானி’ என்பது கூட ‘சரிகமபதநி’ என்பதையே நினைவூட்டுவதாகவுள்ளது. அல்குர்ஆனை முறைப்படி ஓதுவதற்கு பயன்படும் தஜ்வீத் நெறிமுறைகள் இசைக் குறியீடுகளே.
அல்குர்ஆன் சுன்னாவின் ஒளியில் பாடலும் இசையும், கருத்து முரண்பாடுகளுக்கான காரணங்கள், பல்வேறு சட்டமரபுகளின் பார்வையில் இசை பற்றிய கருத்துக்கள், நுன்கலைகள் பற்றிய இஸ்லாத்தின் பொதுப் பார்வை ஆகிய பெருந்தலைப்புக்களில் இந்நூலில் இஸ்லாத்தில் இசை பற்றிய ஆராயப்படுகின்றது. இசை பற்றிய உடன்பாடான நிலைப்பாட்டை எடுக்கும் போதே எமக்கான மாற்றீடுகளை உருவாக்கும் முயற்சியில் நாம் முனைப்போடு செயற்பட முடியும். வெறும் பத்வாக்களையும் சமயவாதப் பிரதிவாதங்களையும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருப்பதால் மாற்றீடுகளை உருவாக்குகின்ற பணி தாமதப்படும் என்பதில் சந்தேகமில்லை. நமது பாரம்பரியத்தில் இசை பெற்றுவந்த வகிபாகத்தையும் அதில் புலமை வாய்ந்த கலைஞர்களையும் அவர்களது சாதனைகளையும் இசை முயற்சிகளையும் கோவைப்படுத்துவதும் மறுவார்ப்புச் செய்வதும் அத்தகைய கலைஞர்களுக்கான வாய்ப்புக்களை சமூகக் களத்தில் பெற்றுக் கொடுப்பதும் முஸ்லிம் இசை மரபை ஒரு பயில் நிலை கற்கை நெறியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதுமே இன்றைய எமது தேவையாக இருக்கின்றது. எனவே நிகழ் பதிப்பகமும் எதிர்காலத்தில் இசையை பயில்வதற்கான வெளியீடுகளை கொண்டுவர வேண்டுமென ஆசைப்படுகின்றோம்.
Courtesy: www.idrees.lk








Muhammed Niyas said
இசை என்பதன் விளக்கம் என்ன …?
இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இந்த நாதம் இருவகைப்படும் 1) ஆகத நாதம், 2) அனாகத நாதம்.
ஆகத நாதம்
மனிதனது முயற்சியால் வேண்டுமென்றே உருவாக்கப் படுவதற்கு *ஆகத நாதம்* என்று பொருள் இவை இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதை குறிக்கும்.
அனாகத நாதம்
மனிதனது முயற்சியில்லாமல் இயற்கையாக கேட்கப்படும் நாதம் அனாகத நாதம் என்று கூறுவர் அதாவது கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை போன்றவற்றை கருதலாம்.
இசையால் நமக்கு நன்மை-தீமை என்ன ?
நன்மை :
1. இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறது.
2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறது.
3. புத்துணர்ச்சி கிடைக்கிறது.
4. நேரம் போவது தெரியாது – டைம் பாஷ்.
தீமை :
1. மனிதன் இசையை கேட்கும் போது அவனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். இறை சிந்தனை மறந்து போகிறது
2. இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர் களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றிவிடுகிறது அந்த அளவுக்கு அது மனிதனை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கிறது
3. இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசைதானே! அந்த இசையைக் கொண்டுதானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
4. இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல் தூக்கமின்மை அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.
5. செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
6. ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
இஸ்லாம் என்ன சொல்கிறது இசையை பற்றி :
1.இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறதா..?
இதைப்பற்றி அறிய திருமறையை புரட்டிப்பார்த்தால் கீழ்கண்ட இறைவசனமே நம் முன் வருகிறது! இசையால் உள்ளம் அமைதி பெறும் என்று கூறுவோரின் வாதம் அல்லாஹ்வின் திருமறைக்கு மாற்றமாக உள்ளது!
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)
இதனால் முதல் வாதம் பொய்யாகிறது.
2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறதா..?
இசையை வைத்து மருத்துவம் செய்யலாம் ( மன ரீதியான, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ) என்பது உண்மையான ஒன்றுதான் . இது இன்னும் பரவலாக வரவில்லை என்பது வேறு விஷயம் .
ஆனால் இதை வைத்துகொண்டு இசை கேட்கலாம் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாது. ஏன் என்றால் இசை கேட்பது வேறு இசையால் மருத்துவம் செய்வது வேறு ,உதரணமாக சொல்லவேண்டும் என்றால்
மதுவில் இருக்கும் alcohal என்னும் பொருள் நம் உடல்நலத்தை கெடுக்கிறது தெரிந்த விஷயம்
ஆனால் அதே மது நாம் குடிக்கும் இருமல் மருந்தில் சிறிதளவு கலக்க பட்டுள்ளது. இதை மருத்துவத்திற்காக நாம் ஏற்றுகொள்கிறோம். இதை வைத்து கொண்டு மது அருந்துவது கூடும் என்போமா ? என்று சிந்தித்தால் நமக்கு விளங்கிவிடும்.
3,4. புத்துணர்ச்சி கிடைக்கிறதா..? நேரம் போவது தெரியாதா..?
இது நிரூபிக்க பட்ட உண்மை அல்ல…, இவர்கள் கூறும் புத்துணர்ச்சிக்கு பின்னாள் மனசோர்வு தான் மிஞ்சும் .. நேரம் வீணடிப்பதை நல்ல விஷயம் என்று சொல்ல முடியாது. வாழ்கையில் பல விஷயங்கள் தெரிந்துகொள்ள அந்த நேரத்தை செலவிடலாம்.
இது போக இசையை ஒரு வரம்புக்கு உட்பட்டு அளவோடு , ஒளி அழவை நிதானமாக கேட்பதனால் ஒன்றுமில்லையே என்று வாதிடுபவர்கள் உண்டு மேலும் மற்றொரு கேள்வி இறை நினைப்பை ஏற்படுத்தும் நல்ல கருத்துள்ள இஸ்லாமிய பாடலை ஏன் கேட்ககூடாது என்பது….
இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு விஷத்தை தடுக்க வேண்டும் என்றால் அதன் ஆரம்ப நிலையை தகர்க்கும் ,அப்போது தான் ஒரு தீமை முழுவதுமாக தடுக்க படுகிறது என்று பொருள். வளர்ந்து வரும் தீமைக்கு தடை போட்டால் அவை உண்மையான தடையாக இருக்காது..
இஸ்லாத்தில் இசை பற்றிய டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கண்ணோட்டம்:தமிழாக்கம்
பல்வேறு ஆதாரப்புர்வ ஹதீதுகளில் இசைக்கு தடைகள் உள்ளன:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள்.ஆதன் உண்மையான
பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக்கருவிகளை இசைத்தும் பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும் பன்றிகளாகவும் மாற்றி விடுவான்.
(இப்னு மாஜா – கிதாபுல் ஃபிதன்)
நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில
கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் பட்டு,மது,இசைக்
கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில
கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகைள இடையன்
(காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான்.
அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான்.(எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். நூல்: புகாரி 5590
ஆனால் சில ஹதீதுகளில் ”தஃப் (கொட்டு)” இசைப்பதற்கு அனுமதிகப் பட்டுள்ளது போன்று குறிப்புகள் உள்ளன. (அதாவது ஒரு புறம் மூடப்பட்டும் மறுபுறம் திறந்த நிலையிலும் இருக்கும்) தாம்புரைன்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் அருகே இரண்டு சிறுமியர் “ தஃப்”எனும் *கொட்டு அடித்துக்
கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக்
கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும்
விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி அபூ
பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்”என்று
கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.
*(புகாரி 987)
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்)
அவர்களிடம்) கூறினார்.
எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி(ஸல்) அவர்கள் (எங்கள்
வீட்டுக்கு) வந்தார்கள்.எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று
நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில
(முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு
பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்)பாடிக்
கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி எங்களிடையே
ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள்.உடனே நபி(ஸல்) அவர்கள் ‘(இப்படிச் சொல்லாதே!) இதைவிட்டுவிட்டு
முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!’என்று
கூறினார்கள். (புகாரி 5147)
இதன்மூலம் மேற்கண்ட ஆதாரத்தின்படி தஃப் இசைக்கருவியைத் தவிர மற்ற பொதுவான இசை கருவிகளுக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது போன்ற முடிவு கிடைக்கிறது!
இசை பொதுவாக ஒரு மனிதனை மயக்கி அல்லாஹ்வின் பாதையிலிருந்து விலக்குகிறது. மேலும் இசையானது ஆண் அல்லது பெண்ணுடைய மூளையில் (சிந்திக்கும் ஆற்றல்) இடம் பிடித்து தன்னை படைத்த படைப்பாளனையும் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற நினைவையும் மரக்கடிக்க விடுகிறது.
இசையுடன் கூடிய பாடல்களை ரசிக்கும் மக்கள் அதன் மூலம்
உருவாகும் அர்த்தமற்ற, தவறான, மார்க்கத்திற்கு முரணான கருததுக்களையும்
வரவேற்கின்றனர் எனவே இது போன்ற ஆங்கில, இந்தி பாடல் வரிகளையும், கஜல்களையும் ரசிக்கக்கூடியவர் அதில் உள்ள தவறுகளை உணர வேண்டும்.
எனவே தான் இசை ஒரு மனிதனது மூளையை வசப்படுத்தி அவனை நேரான பாதையிலிருந்து தடம்புரளச் செய்கிறது என்பதாக கூறுகிறோம்.
மேலும் விபரங்களறிய http://www.onlinepj.com/aayvukal/isai_ayvu/ என்ற லிங்கை பார்வையிடவும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்!
Mohammed Hiraz said
………………………… அநியாயமாக எந்த ஆதாரமும் இல்லாமல் தாவூத் அலைஹிஸலாம் அவர்கள் மீது பழி சுமத்துவோறுக்கு அல்லாஹ்வே நீயே தீர்பு கூறு!!! இசை நிச்சயமாக அது செய்தானின் ஒரு ஆயுதமாகும்