புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக…(பகுதி-01)
Posted by Kattankudi Web Community on 09/11/2011
இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை-இம்மாதிரியான எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.
சகோதரி பிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாத்தை தழுவியதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சரியான இருப்பிடம் உணவு இல்லாமல் தவித்து என்று இவருக்கும், இவருடைய அண்ணனுக்கும் இறைவன் கொடுத்த சோதனைகள் ஏராளம்.
எனக்கு முதலில் அறிமுகமானது சகோதரி பிர்தவ்ஸ் அவர்களின் அண்ணனான சகோதரர் முஹம்மது உமர் தான்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் உமர். வேதங்களில் நல்ல புலமை பெற்றவர். மைசூரில் இருந்து இவரது குடும்பம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்தபோது, கூடுதல் வருமானத்திற்காக சையத் கலீம் என்பவரது துணிக்கடையில் முதலீடு செய்தனர் இவரது குடும்பத்தினர்.
வரும் லாபத்தில், முதலீட்டிற்கு ஏற்ற பங்கை உமரின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட வேண்டுமென்பது ஒப்பந்தம்.
சையத் கலீம் அவர்களின் நேர்மையான வியாபாரத்தால் கவரப்பட்ட உமரின் பெற்றோர், தாங்களும் அந்த கடையில் முதலீடு செய்திருப்பதால், சையத் கலீமுடன் சேர்ந்து பணியாற்றுமாறு உமரை கேட்டுக்கொண்டனர். ஆனால் முஸ்லிம்களுடன் பணியாற்ற மறுத்து விட்டார் உமர். நாளடைவில் பெற்றோர்களின் வற்புறுத்தல் அதிகமாக வேண்டா வெறுப்பாக அந்த கடையில் பணியாற்ற ஆரம்பித்தார் (அப்போது டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தால் பகுதி நேரமாகவே பணியாற்றினார் உமர்).
சையத் கலீம் அவர்களின் துணிக்கடை வாயிலாக உமருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினான் இறைவன். அங்கே அவருக்கு குர்ஆன் கொடுக்கப்பட, மாற்றங்கள் மிக வேகமாக நடந்தேற ஆரம்பித்தன.
முஸ்லிம்கள் மீதான வெறுப்பு முற்றிலும் மறைந்து, இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் உமர். தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய மார்க்கத்தை தன் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். உமரின் இறைப்பணி வெற்றியளிக்க ஆரம்பிக்க, அவரின் சகோதரி பிர்தவ்ஸ்சும் இஸ்லாத்தை பின்பற்றுவதென முடிவெடுத்தார்.
இறைவனின் கடுமையான சோதனைகள் ஆரம்பித்தன. எவ்வாறான சோதனைகள் அவை? இறைவனின் சோதனைகளை எப்படி கையாண்டனர் உமரும், சகோதரி பிர்தவ்சும்?
சகோதரியின் வார்த்தைகளில் இருந்து…. “கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். நான் (ஆஷா), என் சகோதரி வீணா மற்றும் எங்கள் அண்ணன் நாகராஜ் என்று நாங்கள் மூன்று பேர். கடைசிப் பிள்ளை என்பதால் என் மீது செல்லம் அதிகம். என் அண்ணன் ஆன்மீக விசயத்தில் மிகவும் தீவிரமானவர். தினமும் காலை மாலையென பூஜைகளை மேற்கொள்வார். முரட்டுத்தனமும் அதிகம். சமயங்களில் அவரிடம் அடி கூட வாங்கியிருக்கின்றோம். சையத் கலீம் என்பவரின் துணிக்கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்து பூஜைகள் செய்வதை நிறுத்திவிட்டார் என் சகோதரர். இதனால் என் அம்மாவிற்கும், அவருக்குமிடையே பெரிய அளவிலான வாக்குவாதங்கள் நடைபெறும். அவருடைய நடவடிக்கைகளும் மாற ஆரம்பித்திருந்தன. என் சகோதரர் இப்போது அதிக பொறுப்பானவராக மாறியிருந்தார். மென்மையாக பேசவும் செய்தார்.
நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய இந்த திடீர் மாற்றம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. தினமும் என் அம்மாவிடம் விவாதிப்பார். ஈஸ்வரனுக்கு எதற்கு மனைவி?, சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரனுக்கு எதற்கு குடும்பம், மகன்கள்?, இறைவன் அவ்வளவு வலிமையானவன் என்றால், விநாயகரின் தலையை ஏன் ஈஸ்வரனால் திரும்ப கொண்டுவர முடியவில்லை?… இப்படியான அவருடைய கேள்விகளால் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
என் அண்ணனது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். தினமும், சில நிமிடங்கள் தன் அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொள்வார்.
உள்ளே என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் என்பதை அறிய விரும்பினேன். ஒருநாள், அவர் வெளியே சென்றிருந்த நேரம், அவரது அறைக்குள் சென்று, எதையாவது மறைத்து வைத்திருக்கின்றாரா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது கையில் அகப்பட்டது ஒரு டைரி. அதனைத் திறந்தேன். உள்ளே இருந்த எந்த வார்த்தையும் எனக்கு புரியவில்லை, ஒரே ஒரு வார்த்தையை தவிர. அது நமாஸ் (தொழுகை) என்ற வார்த்தை. அன்று மாலை இது குறித்து என் சகோதரரிடம் கேட்க நினைத்தேன்.
அதற்கேற்ப, என் அம்மாவும் சகோதரியும் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த டைரி குறித்தும், அவருடைய இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்தும் கேட்டேன். என் சகோதரர் கூற ஆரம்பித்தார். ஆதாம், ஏவாள், இப்லீஸ் என்று விளக்க ஆரம்பித்தார். இந்த சிலை வணக்கங்கள் தவறென்றார். இவை மனிதனை நேரான பாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கின்றன என்று கூறினார். இப்போது நான் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். எப்படி மனிதனால் இறைவனின் உருவத்தை கற்பனை செய்யமுடியும்? வெற்று கண்களால் நம்மால் ஒரு குறிப்பிடத்தக்க தூரம் வரை வானத்தை பார்க்க முடியும். அதற்கு மேலாக பார்க்க நம்மால் முடியாது. நம் கண்களுக்கு அவ்வளவுதான் வரையறை. அது போல, நம் மனதிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க எல்லை இருக்க வேண்டும். நம்மால் அந்த வரையறையை வைத்துக்கொண்டு இறைவனின் உருவத்தை கற்பனை செய்ய முடியாது. என்னுடைய ஆய்வுக்கு பிறகு, இறைவனுக்கான இந்த உருவங்கள், மனிதர்களின் கற்பனையால் உருவானவை என்ற
முடிவுக்கு வந்தேன். ஒருநாள், என் சகோதரர் வேலை செய்துக்கொண்டிருந்த சையத் கலீம் அவர்களின் கடைக்கு சென்றேன். அங்கே கலீம் அவர்களின் சகோதரர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். அது அப்துல்லாஹ் யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு. அல்-கஹ்ப்f என்ற அத்தியாயத்தில் இருந்து நான் வாசித்த வசனம் என்னை யோசிக்க வைத்தது. ’கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும், இறைவனின் வார்த்தைகளை எழுதி முடிக்க முடியாது’ என்று கூறியது அந்த வசனம். இறைவன் அவ்வளவு போற்றுதலுக்கு உரியவனா? இந்த வசனத்தை பிரதிபலிக்க ஆரம்பித்தேன். மனிதனின் படைப்பு, உயிரினங்கள், இந்த பூமி என்று இவை அனைத்து குறித்தும் பிரதிபலிக்க ஆரம்பித்தேன். ஆம், அந்த வசனம் கூறுவது உண்மைதான். எனக்குள் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. இஸ்லாத்தை பின்வற்றுவதென முடிவெடுத்தேன். இதனை என் குடும்பத்தில் யாரிடமும் கூறவில்லை. இந்த இடைநேரத்தில், இஸ்லாம் குறித்த சரியான புரிதலை என் குடும்பத்தாரிடம் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார் என் சகோதரர். அவர்களிடம் இஸ்லாம் குறித்து பல தலைப்புகளில் பேசுவார், விளக்க முயற்சிப்பார். அவருடைய உரையாடல்களை உற்று கவனிப்பேன். எனக்குள் இருந்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்தது. டிப்ளமா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, இனி என்னுடைய வாழ்வை ஒரு முஸ்லிமாக தொடர வேண்டுமென்று முடிவெடுத்தேன். வீட்டில் நடந்த பூஜைகளை புறக்கணிக்க ஆரம்பித்தேன். ‘ஒரு பெண்ணாக எப்படி வீட்டிலிருந்து வெளியேறுவது?”ஒரு பெண் என்பதால், உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், பின்பற்றுவதிலிருந்தும் பின்வாங்க வேண்டுமா?……… .கூடாது’ – இதுப்போன்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.
பகுதி-02 தொடரும்…
Source-naharvu






