கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
Posted by Kattankudi Web Community on 07/11/2011
இஸ்லாமிய சகோதரர்களின் சிறப்புமிக்க பண்டிகைகளில் ஒன்றான ஈதுல்-அழ்ஹா ஹஜ்பெருநாளை கொண்டாடுகின்ற அனைத்து சகோதரர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஹஜ்பெருநாள் பண்டிகையானது ஏனைய பண்டிகைகளை விட பல சிறப்புக்களும் மகத்துவமும் கொண்டதாக விளங்குகின்றது.
மனிதகுல ஈடேற்றத்திற்கும், சீரியவாழ்விற்குமான பல அவசிய சித்தார்ந்தங்கள் இப்பண்டிகையின் ஊடாக வெளிக்கொணரப்படுகின்றது. முஸ்லிம்களின் புனிதநகரான மக்கமா நகரத்தில் உலகத்தின் பலதிசைகளில் இருந்தும் கூடும் இஸ்லாமிய சகோதரர்கள் தமக்குள்ளான வேறுபாடுகள் துறந்து இறைவனுக்கான தமது விசுவாசத்தைவெளிப்படுத்துவதுடன் ஒன்றுபட்ட சகோதரத்துவத்தை பறைசாற்றுகின்றனர். இது மனிதவாழ்வின் ஈடேற்றத்திற்கான சிறந்த வழிகாட்டலாகும்.
மக்கள் யாவரும் தமக்குள்ளான நிற மத மொழி பிரதேச அரசியல்வேறுபாடுகள் துறந்து சகோதரத்துவம் எனும் பிணைப்பில் ஒன்றுபடும்போது உலகில் பிணக்குகளோ, பிரிவினைகளோ இருக்கபோவதில்லை, எல்லா மதங்களும் மறைகளும் பிரிவினைக்கு எதிராக மனிதகுலத்தின் சகோதரத்துவத்தையும் உறவையும் வலியுறுத்துகின்றபோதிலும், மனிதர்களாகிய நாமே நமக்குள் பிரிவினைகளையும் வேறுபாடுகளையும் தோற்றுவித்து அல்லல் படுகின்றோம். இலங்கையில் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் முஸ்லிம் சகோதர்களின் பங்களிப்பு மிக உன்னதமானது. மொழியால் ஒன்றுபட்டு தமிழ் பேசும் மக்கள் எனும் பொது அடைமொழிக்குள் ஒன்றுபடுகின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் உறுதியான சகோதரத்துவத்திற்காகவும் நீடித்த சமாதானத்திற்காகவும் ஒன்றுபட்டு செயற்படும்போது தென்னிலங்கை சமூகத்துடனும் இணைந்து வளமிக்க சுபீற்சமான நாட்டையும் எதிர்காலத்தையும் உருவாக்கலாம.
ஆனால் சுயநலஅரசியலிலும் அதிகார போதையிலும் ஊறித்திழைத்தசிலர் இன ரீதியிலான பிரிவுகள் ஊடாக தமது அரசியல் இருப்பை தக்கவைக்க முயல்கின்றனர். உலகிற்கு சகோதரத்துவத்தை பறைசாற்றும் ஹஜ் பண்டிகையானது அவர்கள் மனங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சமூகத்தினதும் நாட்டினதும் நலனுக்காக குறுகியசிந்தனைகளை திறந்து தூரநோக்கான சமூகநலனுக்காக ஒன்றுபடும் மனமாற்றத்தை ஏற்படுத்த பிரார்த்திக்கின்றேன்.
ஹஜ் பெருநாளைகொண்டாடும் அன்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.






