‘வியர்வைக்கு விலைபேசாதீர்கள்’
Posted by Kattankudi Web Community (KWC) on 01/11/2011
காத்தநகர் முகைதீன்சாலி அவர்கள் எழுதி தேசிய ரீதியல் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட கவிதை இன்போ வாகர்களுக்காக…
தோளுக்கு தோள் கொடுக்கும் தோழர்களே
இந்தத் தொழிலாளியைக் கொஞ்சம் பாருங்களன்
நாளெல்லாம் நாவறல உழைத்தாலும் – நல்ல
சோறு தின்பதற்கு முடியலையே!
குருதியெல்லாம் கொந்தளித்து ஓடுறது
உடம்பெல்லாம் ஓடாகத் தேய்கிறது
மாடாக நாளெல்லாம் உழைத்தாலும்
மனங்குளிர கை நிறைவதில்லை!
நாவிலே நுரைதள்ளிப் போச்சு தோழா
நரம்பெல்லாம் செயலற்றுப் போச்சு தோழா
நாளெல்லாம் வண்டிதள்ளி உழைத்தாலும்
நாவாற உண்பதற்கு பணமில்ல!
போராடிப் பெறுகின்ற சம்பளமோ
குடும்ப வயிற்றை நிரப்பத்தான்போதும்
மற்றக் காரியங்கள் ஆற்ற
நம் கைகள் எங்குதான் போகும்!
மழைக்கு வளர்கின்ற காளானாய்
மளமளவென்று ஏறுது விலைவாசி
தொழிளாலி மனம் குளிர்ந்துபோக
யாராச்சும் எங்களைப்பற்றி யோசி!
வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டி
வர்ணப் பூச்செல்லாம் பூசி
அழகாக அலங்கரிக்கும் நாங்கள்
வாழ்வதுவோ குடிசையில்தான் போங்கள்!
ஏக்கர் கணக்கினிலே நெல்லை
ஏர் பிடித்து விதைத்தறுத்த போதும்
வேலை முடித்து வீடு வரும்போது
வெறும் வயிறுதானே அப்போது மிஞ்சும்!
குணிந்து குணிந்து நாங்கள்
கொழுந்து பறித்த போதும்
நிமிர்ந்து வாழ முடியா
நிலைதான் இன்றும் தொடரும்!
நூல்பிடித்து நாங்கள் நூதனமாய்
நெய்கின்ற ஆடைகள் எல்லாம்
அவரவர் அணிந்து மகிழ்வர்
நாங்களோ பார்த்து மகிழ்வோம்!
கட்டளை மட்டுந்தான் அவர்கள்
கடமையைச் செய்வதோ நாங்கள்
தொட்டதெற்கெல்லாம் எங்கள்
தோளில் அடிப்பதா தர்மம்!
வாழ்க்கைச் செலவு இன்று
வானுயர்ந்து நிற்கின்ற போது
வியர்வையில் ஓவியம் வரையும்
வர்க்கத்தின் நிலை கொஞ்சம் பாரு!
நாட்டுக்காய் நாள் தோறும் நாங்கள்
வேட்கையுடன் உழைக்கின்ற போது
எங்கள் வீட்டுக்கு விளக்கேற்ற வாங்கள்
எங்கள் வியர்வைக்கு விலை பேசாதீர்கள்!
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக்குழு ஏற்பாடு செய்த வியர்வையின் ஓவியம் உழைக்கும் மக்கள் கலைவிழாவை முன்னிட்டு தேசிய ரீதியில் இடம்பெற்ற சிறுகதைப் போட்டியில் காத்தான்குடி உம்மு நசீலா எழுதிய ‘சுமைதாங்கி’ முதலாம் பரிசினையும், காத்தநகர் முகைதீன்சாலி எழுதிய ‘இன்னொரு குழந்தை’ சிறுகதை சிறப்புப் பரிசினையும் பெற்றுக்கொண்டது.
அதே வேளை தேசிய ரீதியில் இடம்பெற்ற கவிதைப் போட்டியில் காத்தநகர் முகைதீன் சாலி எழுதிய ‘வியர்வைக்கு விலைபேசாதீர்கள்’ கவிதை இரண்டாம் பரிசனையும் உம்மு நசீலா எழுதிய ‘சமாதான தேசம்’ கவிதை சிறப்புப் பரிசினையும் பெற்றுக்கொண்டது.
இதற்கான பரிசளிப்பு விழா 27.10.2011 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.






