காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஏபிஎம். இத்ரீஸ் எழுதிய பத்து நூல்கள் வெளியீடு

Posted by Kattankudi Web Community (KWC) on 26/07/2011

இணைய வாசிப்பு இன்னும் எம்மத்தியில் பரவலடையாததன் காரணமாக புத்தகப் பதிப்பும் வாசிப்புப் பண்பாட்டின் தேவையும் இருந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் ஏபிஎம். இத்ரீஸ் (நளீமி) எழுதிய புதிய பத்து நூல்களை ‘சோனகம்’ பதிப்பகம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதில் முதலிரண்டு நூல்கள் இம்மாத இறுதியில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியிலும், பின்னர் ஏனைய நூல்கள் காத்தான்குடி, அட்டாளைச்சேனை, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களிலும் வெளியிடப்படவுள்ளது.

அஷ்ஷேஹ்  இத்ரீஸ் நளீமி அவர்களின் இந்த புத்தக வெளியீடு வெற்றிபெற காத்தான்குடி இணையச் சமூகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

பத்து நூல்களின் விபரம்

1. குழந்தைகளும் வாழ்வும்

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம், கல்வி, திறன் விருத்தி, விளையாட்டு, சமூகத் தொடர்பாடல், பண்பாட்டுப் பயில்வு, பிரச்சினைகள் ஆகிய எட்டு அத்தியாயங்களில் குழந்தைகளின் வாழ்வு பற்றிய நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுத் தலைப்புகளை உள்ளடக்கிய ஒரு நூலாகும். இன்றைய அறிவியல், தொழில்நுட்ப யுகத்தின் வளர்ச்சிக்கேற்ப எமது குழந்தைகளை எவ்வாறு பயிற்றுவிக்கலாம் என்பதற்கான பல புதிய உள்ளீடுகளையும் அறிவுப் புலங்களையும் இணைத்துக் கொண்ட ஓர் ஆய்வு நூலாகும்.

பக்கம் 304 ISBN 978-955-0697-00-7 விலை-600.00

2. இஸ்லாமிய இலக்கியம் – புத்துயிர்ப்பும் புரிதல்களும்

நவீனத்துவத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட புத்துயிர்ப்புவாதம், ‘இஸ்லாமிய இலக்கியம்’ என்ற கருத்து நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நான்கு பகுதிகளை உள்ளடக்கிய இந்நூலில் முதலாம் பகுதியில் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய கோட்பாடுகளும் இரண்டாம் பகுதியில் அறபு இஸ்லாமிய இலக்கிய வரலாறும் சோனக இலக்கிய மதிப்பீடுகளும் மூன்றாம் பகுதியில் மேற்கத்திய இலக்கிய இயக்கங்கள் பற்றிய அறிமுகமும் நான்காம் பகுதியில் இஸ்லாமிய இலக்கியம் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய திசைவழிகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாமிய இலக்கியம் பற்றி அறிய விரும்பும் வாசகருக்குரிய மிகச்சுருக்கமான அறிமுகக் கையேடாக இந்நூல் அமைகின்றது.

பக்கம்-196 ISBN 978-955-0697-02-1 விலை-400.00

3. சோனகத் தேசம் – மிகச்சுருக்கமான அறிமுகம்

பொதுவாக இலங்கை, தென்னிந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தினதும் குறிப்பாக சோனகர்களின் பூர்வீகத்தையும் பண்பாட்டையும் தேடுகின்ற, புதிய வரலாற்றுப் புரிதலை ஏற்படுத்துகின்ற ஒரு நூலாகும். இதன் முதலாவது இயலில் நம்பிக்கை, விஞ்ஞானம், உள்ளுணர்வு பண்டைய இலக்கிய ஆவணங்கள் வாயிலாக வரலாற்றுக்கான இஸ்லாமிய வியாக்கியானத்தை வழங்குகின்றது. இரண்டாம் இயலில் இலங்கை இந்தியா உள்ளிட்ட பிராந்தியங்களில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் பற்றிய தேடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இயலில் சோனகர்களின் மொழி, அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாறுகள் ஆராயப்படுகின்றன.

பக்கம்-200 ISBN 978-955-0697-01-4 விலை-400.00

4. புன்னகைக்கும் நபிகள்

அறபு மண்ணும் அதற்கப்பால் விரிந்து கிடக்கும் பாலைவனமும் அதில் தோன்றிய நாகரிகமும் அதன் கர்த்தாவாகிய நபிகளின் பணிகளும் தொடர்ச்சியான ஆய்வுக்குற்பட்டே வருகின்றது. அந்த வகையில் நபிகளை ஒரு நிறுவனராக அன்றி தன்னிலை சார்ந்து புரிந்து கொள்ள எடுக்கும் எத்தனமே இந்நூல். நபிகளின் ஆளுமை, அவரது அரசியல், அவரது கல்வி முறை, மருத்துவம், தொழில்நுட்பம், குடிமக்களுடன் அவர் ஊடாடிய முறை பற்றிய பல தலைப்புகளில் நபிகளை புதிய தேவைகளுக்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்கின்றது.

பக்கம்-200 ISBN 978-955-0697-03-8 விலை-400.00

5. இருபதாம் நூற்றாண்டு: சிந்தனைகள்-ஆளுமைகள்-நிகழ்வுகள்

முன்னெப்போதையும்விட வரலாற்றில் சென்ற நூற்றாண்டு பல அழியாத் தடயங்களை விட்டுச் சென்றுள்ளது. அந்த வகையில் அறபு இஸ்லாமிய உலகிலும் அதற்கு வெளியிலும் நவீனத்துவத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட புத்துயிர்ப்புவாத்தின் போது கிளைத்த புதிய சிந்தனைச் செல்நெறிகளும் அச்சிந்தனைகளை முன்வைத்த ஆளுமைகளும் அவ்வாளுமைகளால் அறபு இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள், நிகழ்வுகள் இந்நூலில் நேர்காணல் வடிவில் தொகுக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டின் முஸ்லிம் சமூக இயங்கியல் எவ்வாறு தொழிற்பட்டுள்ளது என்பதை முழுமைத்துவ நோக்கில் புரிந்து கொள்ள இந்நேர்காணல்கள் உதவுகின்றன.

பக்கம்-160 ISBN 978-955-0697-04-5 விலை-340.00

6. அரசியல் என்ன பால்

பாடசாலை, பல்கலைக்கழகம், ஆசிரியர் கலாசாலை, மத்ரஸா போன்ற இடங்களிலும் முக்கிய பண்பாட்டு விழாக்களிலும் பெருநாட்களிலும் மேடையேற்றப்பட்ட சில நாடகப் பிரதிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், வரலாறு, கருத்தியல், பால்நிலை சமத்துவம் போன்றவற்றை வெளிப்படுத்தும் அரங்கப் பிரதிகளாக இவை அமைந்துள்ளன. தொண்ணூறுகளுக்குப் பின் இலங்கையில் ஏற்பட்ட சமூக, அரசியல் கருத்து நிலை மாற்றங்களையும் இவை ஆற்றுகை செய்யப்பட்ட பின்புலங்களை வைத்து நோக்கும் போது முஸ்லிம் சமூக அசைவியக்கத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்திய பிரதிகளாவும் இவை அமைந்துள்ளன.

பக்கம்-160 ISBN 978-955-0697-05-2 விலை-340.00

7. இஸ்லாமிய பாரம்பரிய அரங்கு

இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய அரங்கு பற்றிய தேடலில் நாடகம் சார்ந்த பண்பாட்டுக் கோலங்கள் பற்றிய அத்தனை தரவுகளும் இந்நூலில் திரட்டப்பட்டுள்ளன. இலங்கைச் சோனகர்கள் அறேபியப் பண்பாட்டோடு ஊடாடியவர்கள் என்பதால் அறேபிய அரங்கின் தோற்றுவாய் குறித்த தகவல்களும் பார்சி அரங்கு பற்றிய சில குறிப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளன. பின்னர் இலங்கை முஸ்லிம்களால் ஆடப்பட்டு வந்த அரங்கப் பிரதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தையும் அரங்க நிலையில் நின்று இங்கு ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வு மூலம் இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய அரங்கு குறித்த இதுவரை கிடைத்த முழுமையான செய்திகளையும் ஆற்றுகை முறைகளையும் ஓரிடத்தில் திரட்சியாகப் பதிவு செய்யும் முதலாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனலாம்.

பக்கம்-480 ISBN 978-955-99649-3-3 விலை-900.00

8. உடைபடும் மௌனம்

பூர்வீகம், கல்வி, பண்பாடு, பால்நிலை, குடி, தொழில்நுட்பம், அமைப்பாக்கம் போன்றவற்றில் நிலவும் கண்ணுக்குக் புலப்படும் அதிகாரங்களையும் புலப்படா அதிகாரங்களையும் கேள்விக்குட்படுத்தி நீண்டு செல்லும் இவ்வுரையாடல் போருக்குப் பிந்திய அல்லது பின் இன அரசியல் சூழலில் சகஜீவனத்திற்கான திசைவழிகளை தேடும் முகமாகவும் முஸ்லிம் புலமை வட்டாரங்களில் கவிந்திருக்கும் மௌனங்களை உடைப்பதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. அதிகாரம் மௌனத்தை உற்பத்தி செய்கிறது. மௌனத்தைக் கலைக்கும் போதே அதிகாரமும் தகர்க்கப்பட முடியும் என்பதை இந்நூல் சொல்கிறது.

பக்கம்-176 ISBN 978-955-0697-06-9 விலை-380.00

9. சோனக அரங்கு

21 ஆம் நூற்றாண்டில் அரங்கு ஆற்ற வேண்டிய பங்கு, முஸ்லிம் சினிமா முயற்சிகளும் சவால்களும், இஸ்லாமிய நிகழ்த்து கலைகளும் பிரச்சினைகளும் போன்ற தலைப்புக்களை ஒட்டி சமகாலத்தில் சோனக அரங்கு எதிர்கொள்ளும் சவால்கள் அதன் எழுச்சி, வீழ்சிகள், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய பணிகள் போன்ற சமகால அரங்கோடு தொடர்புபட்ட பல விடயங்கள் இவ்வுரையாடலில் பேசுபொருள்களாக மாறியுள்ளன.

பக்கம்-160 ISBN 978-955-0697-07-6 விலை-340.00

10. குடிமைச் சமூகத்தை வலுவூட்டல்

ஜனநாயகமும் சிவில் சமூகமும், இலங்கையில் கட்சி அரசியலும் அனுபவமும், நிலையான அபிவிருத்தி, அரசியல் இஸ்லாம், சமூக வலைத்தளங்கள் ஊடாக சிவில் சமூகத்தை வலுவூட்டல் போன்ற தலைப்புக்களை ஒட்டி எழுந்த வாதவிவாதங்களும் அதற்குப் பின்னரான எதிர்வினைகளும் இதில் பதிவாகியுள்ளன. எவ்வளவு காத்திரமான புலமைசார் உரையாடலுக்குள்ளும் பொதுப்புத்தி சார்ந்த சமூக மனநிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் இவ்வுரையாடல் உதவிகரமாய் அமைகிறது.

பக்கம்-200 ISBN 978-955-0697-08-3 விலை-400.00

*நூலின் விலையும் பக்கங்களும் இறுதி செய்யப்படவில்லை.

2 Responses to “ஏபிஎம். இத்ரீஸ் எழுதிய பத்து நூல்கள் வெளியீடு”

  1. Abu Amri said

    சகோதரர் இத்ரீஸ் நளீமி அவர்களின் ஆக்கங்கள் சமகால முஸ்லிம்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவை, சிந்தனையை தூண்டுபவை. கருத்துச்செறிவும் எளிமையான மொழிநடையும் மிக்கவை. இவரது சோனகத் தேசம் – மிகச்சுருக்கமான அறிமுகம் என்ற நூல் எமது வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கு ஒரு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு விடயத்தை பற்றி எழுதுவதற்காக இவர் மேற்கொள்ளும் ஆய்வுகள் பிரமிக்க வைக்கின்றது.

    சகோதரரின் நூல் வெளியீட்டு முயற்சிகள் அதன் நோக்கத்தை அடைவதற்கு அல்லாஹ் விடம் பிரார்த்திப்பதோடு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.

    -அபூ அம்ரி

  2. M C Rasmin said

    I think this is going to be an amazing effort. Wish you all the success. could please have Brother idrees’s contact details.
    Rasmin

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s