காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஹிஸ்புல்லாஹ் விடயங்களைச் செய்யக்கூடியவராக இருந்தும் அடுத்தவர்களின் திட்டங்களைத் தான் உரிமை கோருபவராகவும் வன்முறை அரசியலை வளர்ப்பவராகவும் இருக்கின்றார் – மாகாண சபை உறுப்பினர் முபீனின் வெளிப்படையான பேட்டி!

Posted by Kattankudi Web Community (KWC) on 10/12/2010

Kattankudi.info Exclusive

Interview Team: MSM. Noordeen / MACM. Jelees / AMM. Sathikeen

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்நேர்காணலின் முக்கிய விடயங்கள் எழுத்து வடிவிலும் முழுமையான ஒலிப்பதிவும் வாசகர்களுக்காக இங்கு வெளியிடப்படுகினறன.

முக்கிய விடயங்களின் எழுத்து வடிவம்:

உங்களது அரசியல் எதிர்காலம் தொடர்பில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?


அரசியலுக்கு வரும் முன்னரே நான் பல்வேறு பொது அமைப்புகளில் அங்கம் வகித்து மக்களுக்காக சேவைகளைச் செய்திருந்தேன். சமூகப் பணி செய்யும் நோக்குடனேயே நேரடி அரசியலுக்கு வந்தேன். மக்களுக்காக கூடுதலாக வேலை செய்யக்கூடிய பதவிகள் கிடைக்குமிடத்து இன்னும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று நம்புகின்றேன்.

நீண்ட காலம் பல்வேறு சமூகப்பணிகளைச் செய்தவன் என்ற வகையில், சார்பளவில் நகரசபைத் தவிசாளராக இருந்து ஆற்றிய பணிகள் அதிகம். அரசியல் அதிகாரம் கிடைத்தால் அதிக வேலைகளை மக்களுக்கு செய்யலாம் என்பதை இதிலிருந்து நான் உணர்ந்தேன்.

அரசியலில் மேலும் பிரகாசித்து மக்களுக்கு பணியாற்ற எதிர்பார்க்கிறேன்.

எமது பிரதேச முஸ்லிம் மக்களின் காணி விவகாரங்களில் நீங்கள் மிக நீண்ட காலமாக தனிப்பட்ட ரீதியிலும்இ நிறுவனங்களூடாகவும் மிக்க பொறுப்புடன் செயற்பட்டு வருகிறீர்கள். தற்போது எமது மக்கள் எதிர் நோக்குகின்ற காணிப் பிரச்சனைகளையும், பெற்றுக் கொண்ட, பெற வேண்டிய தீர்வுகள் சம்பந்தமாக சிறு விளக்கத்தை தர முடியுமா?

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம்களுக்கு நிறையக் காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. முஸ்லிம்களின் இன விகிதாசாராத்துக்கு அமைவாக காணிகள் இல்லை. சிறிய பரப்புகளில் குடியிருப்பதால் தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளிலேயே பிரச்சினைகள் தோன்றியுள்ளன. மாற்றுக் காணிகளை அடையாளம் காண்பதற்குரிய தேவை இருக்கிறது. பத்து வருடத்துக்கு மேற்பட்ட தொடர் முயற்சியின் காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இப்பிரச்சினை தெளிவாக தற்போது உணர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் மாகாண சபையில் இடம்பெற்ற காணி அமைச்சு சம்பந்தப்பட்ட நிகழ்வில் நான் இது பற்றி அதிக விடயங்களைப் பேசினேன்.

ஆரையம்பதி பிரதேச சபையின் நிலப்பரப்பை காத்தான்குடி முஸ்லிம் நகரசபை திட்டமிட்டு ஆக்கிரமிப்பதாக விடுதலைப் புலிகள் சார்ந்த இணைத்தளம் ஒன்று அண்மையில் துவேசத்தைத் தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவீர்களா?

இது முற்றிலும் பிழையான செய்தி. எமது நகரசபைக்கும் ஆரையம்பதிப் பிரதேச சபைக்கும் தெற்கு எல்லை தொடர்பாக நீண்டகால இழுபறி இருக்கிறது. இதில் பல பிரதேசங்கள் காத்தான்குடி எல்லைக்குள் வருவதாக வர்த்தமானி அறிவித்தல் உள்ள போதும் ஆரையம்பதி மக்கள் இதை விளங்கிக்கொள்ளாதது பிரச்சினையாக இருக்கிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகளை நான் நகரபிதாவாக இருந்தபோது ஆரம்பித்தேன். காத்தான்குடி நகரசபை இதற்கு ஒரு வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அதை அவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள்.

காத்தான்குடி மட்டுமன்றி மாவட்ட ரீதியான காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பணியாற்றியவர் என்ற வகையில் காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நீங்கள் கையாண்ட வழிமுறைகள் என்ன?

பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கு 1985 – 90 களில் முஸ்லிம்கள் காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அக்காணிகளைப் பராமரிக்க முடியாத காரணத்தால், இவை முஸலிம்களின் காணிகள் என்பது தெரியாது. தற்போது 20 வருடங்களுக்குப் பின்னர் காணிகளை அடையாளப்படுத்தும் போது அப்போது சிறுவனாக இருந்த இப்போதைய இளைஞர்களால் எமக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் நிலை காணப்படுகிறது. மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடனும் தொடர்ந்து பேசி எமது காணிகள் தொடர்பான விடயங்களை விளக்கியிருக்கின்றோம். ஓரளவு புரிந்துணர்வு வந்திருந்தாலும் முழுமையாக தீர்க்கக்கூடிய நிலை இன்னும் வரவில்லை. முக்கிமான விடயம் என்னவென்றால், மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளாக மாற்று மத சகோதார்கள் இருப்பதனால் முஸ்லிம்களுக்கு காணி தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை.

முடிந்தளவு காணி தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்தி உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அண்மையில் செங்கலடிப் பிரதேச செயலகத்தில் காணிப்பிரச்சினை தொடர்பான கூட்டமொன்று இடம்பெற்றதாகவும் அதில் நீங்களும் கலந்து கொண்டதாகவும் அறியக் கிடைத்தது. இக்கூட்டத்தின் பின்னர் காணிப் பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன ?

இக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் பற்றிய பிரச்சினை தொடர்பில் கூட்டப்பட்டது. மேய்ச்சல் தரைகளை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போது ஏறாவூர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளும் உள்ளடக்கப்படடதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விடயத்தை நான் மாகாண சபைக்கும் கொண்டு சென்றிருந்தேன். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் பேசப்பட்டது.

இவ்வாறான பிரச்சினகளின் போது உரிய ஆவணங்கள் இல்லாததன் காரணத்தால் இக்கூட்டத்திலும் எமது உரிமையை நிலைநாட்ட முடியாமல் போனது. சரியாக உறுதிப்படுத்தப்பட்ட நாற்பது ஏக்கர்களுக்கு உரிமையாளர்கள் கோரும் இடத்தில் பதில் காணி வழங்குவதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

காத்தான்குடி வைத்தியசாலை அமைப்பில் நீங்கள் பல்வேறு பங்களிப்புகளைச் செய்த போதும், திறப்பு விழாவின் போது புறக்கணிக்கப்பட்டதாக அறிக்கையொன்றை விடுத்திருந்தீர்கள், தற்போதுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியசாலையின் எதிர்காலம் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?

வைத்தியசாலை அமைப்பில் தவிசாளராக இருந்த போதும், சுனாமி ஏற்பட்ட காலத்திலும் திட்டங்களை அடையாளம் காணும் செயற்பாட்டில் நான் ஈடுபட்டேன். நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தால் கட்டப்பட்ட இவ்வைத்தியசாலை விடயத்தில் பலரும் முயற்சி எடுத்தார்கள், நானும் என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்தேன். திறப்பு விழவுக்கு நான் அழைக்கப்படாதது கவலைக்குரியது. தற்போதுள்ள அபிவிருத்திக் குழு அரசியல் சார்பானது. ஓரிருவரைத் தவிர பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது தீவிர ஆதரவாளர்களை இக்குழுவில் சேர்த்துள்ளார்.

அண்மையிலும் நான் வைத்திய அத்தியட்சகரைச் சந்தித்து குறைபாடுகளை அறிந்து மாகாண சுகாதார அமைச்சரிடம் இதுபற்றி பேச்சு நடத்தினேன். இதன் காரணமாக உடனடியாக ஒரு வைத்தியர் எமது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். இன்னொரு வைத்தியர் விரைவில் வருகிறார். எமது வைத்திய அத்தியட்சகர் தனது தற்போதைய கடமைகளுக்கு மேலதிகமாக சுகாதார வைத்திய அதிகாரியாக பதிற்கடமை ஆற்ற இருக்கிறார். ஜனவரியில் தாதிகள் நியமிக்கப்படும் போது தாதிகளையும் நியமிக்க இருக்கிறார்கள்.

வைத்தியசாலை அமைப்பில் எவ்விதப் பங்களிப்பையும் நீங்கள் செய்யாததால் உங்களை அழைக்கவில்லை என அபிவிருத்திக் குழு உறுப்பினர்க்ள் சிலர் சொல்லியருக்கிறார்கள்இது தொடர்பாக என்ன கூறுகிறீர்கள் ?

அழைப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது மாகாண சபை உறுப்பினர் பரீட் அவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்ட போது, என்னையும் அழைக்க வேண்டும் என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்ட போது, சிலர் இதற்கு மறுப்புத் தெரிவித்ததை நான் அறிந்தேன்.

நான் இவ் வைத்தியசாலையின் முதலாவது அபிவிருத்திக் குழு செயலாளராக இருந்தேன். மிகக் கடினமான காலகட்டத்தில் வைத்தியசாலைக்காக நாங்கள் வேலை செய்தோம்.

முக்கிய விடயம் என்னவென்றால் எனக்குத் தொடர்பில்லை என்று சொல்லப்படடிப்பது. வேலைகளை அல்லாஹ்வுக்காகத்தான் செய்வது. இவ்வாறு சொன்னவர்களுக்குத்தான் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் வைத்தியசாலைக்கு என்னால் முடிந்த விடயங்களைத் தொடர்ந்து செய்வேன்.

தற்போதுள்ள நகரசபை உறுப்பினர்களால் தாங்கள் தவிசாளராக இருந்தபோது பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்த உங்களது கருத்து என்ன?

இது உண்மைகள் ஏதுமற்ற அரசியல் ரீதியான குற்றச்சாட்டு. எனது பொருளாதார நிலையில் நான் கடனோடு இருக்கிறேன். நகரசபைத் தலைவராக வருவதற்கு முன்னரே வாங்கியிருந்த வளகுகளைக் கடனைக் கொடுப்பதற்காக இப்பொழுது விற்றிருக்கிறேன். இன்னும் ஒரு வளவை விலை பேசிக்கொண்டிருக்கிறேன். சில நகரசபை உறுப்பினர்கள் சிலர் அவர்களது எதிர்பார்ப்புகளை நான் நிறைவேற்றாததன் காரணமாக என்னைக் குற்றம் சாட்டினார்கள். இவ்வாறானவர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாதால்தான் நான் மாகாண சபைக்குப் போவதை விரும்பினேன். இவ்வாறான குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன்.

தற்போதைய நகரசபை தவிசாளரின் ஆளுமை மற்றும் செயற்பாடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தற்போது நகர சபையின் செயற்பாடுகள் பற்றி உங்களது கருத்து என்ன?

ஆளுமை பற்றிச் சொல்லும் போது அவரைத் தவிசாளராகப் பார்க்க முடியவில்லை. துணைத் தவிசாளர்தான் ஒரு தவிசாளராகச் சொல்லப்படுகிறார். அவரே வெளியில் அதைச் சொல்லியும் கொள்கிறார். நான் தனிப்பட்டு எவரையும் தாக்கிக் கதைக்க விரும்பவில்லை. அவர் தனது ஆழுமைய இன்னும் வளர்த்து ஊருக்குப் பல சேவைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

செயற்பாடுகளில் முன்பிருந்ததிலும் பார்க்க குறைவு தென்படுகின்றது. இது தொடர்பில் எனக்கு அதிருப்தி இருக்கிறது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வரும் நகரசபைத் தேர்தலில் எத்தனை ஆசனங்களை அவர்கள் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்?

இவ்வியக்கத்தைச் சேர்ந்த பலர் என் நண்பர்கள். எங்கள் வாக்கு வங்கிகள் கூட பெருமளவுக்கு ஒன்றுதான். சகோதரர் றஹ்மான் கெட்டித்தனமான, விடயங்களைச் செய்யக்கூடிய ஒருவர். சமூக அக்கறையுள்ளவர். பல தேர்தல்களில் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். தேர்தல் இல்லாத காலங்களில் பேசுமளவுக்கு தேர்தல் காலங்களில் களத்தில் நின்று வேலை செய்யப்படவில்லை.

இப்போதுள்ள தேர்தல் முறையில் நகரசபைத் தேர்தல் நடந்தால் அவர்களுக்கு தவறிப்போன இரண்டாவது ஆசனத்தையும் சில வேளை மூன்றாவது ஆசனத்தைக் கூடப் பெற முடியும். தொகுதி வாரி முறையில் நடந்தால், பரவலாக உறுப்புரிமை கிடைப்பது கடினம். ஒன்று – அல்லது இரண்டு கிடைக்கலாம்.

ஊரில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் நகரசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? அல்லது அரச தரப்புகளுடன் முக்கியமாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தரப்புடன் இணைந்து போட்டியிடுமா?

இப்போதைக்கு உள்ளூராட்சித் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவதென்ற முடிவு எமது கட்சியால் எடுக்கப்படவில்லை, உரிய நேரத்தில் அம்முடிவுகள் எடுக்கப்படும். இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அரசின் அங்கமாக இருப்பதால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டியிட வேண்டி வரலாம்.

அவ்வாறே இங்கு சுதந்திரக்கட்சி மற்றும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் சார்ந்திருக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என மூன்று அணிகள் ஒன்றாகப் போட்டியிட வேண்டி வரலாம். தனித்து மரத்தில் கேட்பதற்கும் ஆயத்தமாக இருக்கிறோம்.

முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் எத்தனை ஆசனங்கள் கிடைக்கும்? நகரசபையைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்குமா?

நகரசபையைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்பு எங்களுக்கு உண்டு என்று நான் பொய்யைச் சொல்ல முடியாது. வாய்ப்பு இல்லை. எங்களது வாக்கு வங்கிக்குரிய ஆசனங்களே கிடைக்கும். கூட்டு அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்கிக் கேட்கின்ற போது சில வேளை ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு வரக் கூடும்.

முஸ்லிம் காங்கிரஸின் கட்சி ரீதியான செயற்பாடுகள் காத்தான்குடியில் மிகவும் மந்த கதியில் காணப்படுகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழுவை மறுசீரமைத்து கட்சியின் செயற்பாடுகளை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் தற்போது மந்தமாக இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மாகாண சபைத் தேர்தலுக்குப் பிறகு பாராளுமன்றத் தேர்தல் வரை பல செயற்பாடுகள் செய்யப்பட்டன. பல்வேறு இளைஞர் குழுக்களை அமைத்து, பிரதேச ரீதியாக அங்கத்தவர்களைக் கொண்டு மத்திய குழுவொன்றை அமைக்க முயற்சித்த போதுதான் பாராளுமன்றத் தேர்தல் வந்தது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு காத்தான்குடியில் ஆசனம் கிடைக்காததால் ஆதரவாளர்கள் தளர்வடைந்துள்ளனர். ஆனாலும் வரலாற்றிலேயே காத்தான்குடியில் இளைஞர் காங்கிரஸை ஒழுங்கு படுத்திய வேலையை நான் செய்தேன்.

இன்சா அல்லாஹ் விரைவில் மத்திய குழு புனரமைக்கப்படும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உங்களுக்கும் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, அத்தோடு உங்களது ஆதரவாளர்களும் அவருடன் அதிருப்தி கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடாபில் என்ன கருத்துக் கூற விரும்புகிறீர்கள் ?

தேர்தல் காலத்தில் நாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்தோம். அவருக்கும் சேர்த்துத்தான் நான் இங்கு பிரச்சாரம் செய்தேன். இறுதியில் ஒருவர்தான் உறுப்பினராக வரலாம் என்ற வகையில் சில முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. இங்கிருக்கும் சிலரும் இதைச் செய்தனர். பசீர் அவர்களும் வெற்றி பெறுவதற்காக சில காய்நகர்த்தல்களைச் செய்தார். தேர்தலில் வென்ற பிறகு வழமைபோன்று அவர் என்னுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. என்னைக் கைவிட்டுவிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முஸலிம் காங்கிரஸுக்கும் உங்களுக்கும் இருந்த ஆதரவு பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இல்லாமல் போனது. இதற்குக் காரணங்கள் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அதற்கு முக்கிய காரணம் ஊருக்கு ஒரு எம். பி. தேவை என ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்ட விடயம். முபீனுக்கு வோட்டுப் போட்டால் காத்தான்குடியில் எம். பி. வர முடியாது என ஒரு பரவலான கருத்து தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்டது. ஏறாவூர் வேட்பாளரான பசீர் பலமானவராக இருந்ததால் அவர் வென்று விடலாம் என்ற அனுமானம் ஆகியவற்றால் வாக்குகள் குறைவடைந்தன. நானும் ஊருக்கு எம். பி. என்ற வகையில் தனியாகப் பிரச்சாரம் செய்திருந்தால் ஊரில் எனக்குரிய காங்கிரஸ் வாக்குகள் அதிகரித்திருக்கலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியில் அரசுடன் இணைந்தது மாகாண சபையில் ஆளும் தரப்புடன் இணைந்து செயற்பட வேண்டிய சூழலை ஏற்படுத்துமா?

மத்தியில் ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதால், மாகாண சபையில் எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது – இணைந்துதான் செயற்பட வேண்டும. ஆனால் சட்ட ரீதியான சில சிக்கல்களின் காரணமாக மாகாண சபையில் ஆளும் கட்சியாக நாங்கள் இயங்கவில்லை.

தலைமைத்துவத்தின் வழிகாட்டலுடன் எதிர்காலத்தில் மாகாண சபையில் ஆளும் கட்சியாக மாறும் வாய்ப்புள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகள் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பல்வேறு உட்கட்சி பூசல்கள் இடம்பெற்று வருவதாக பல்வேறு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் உண்மையா? இதனால் கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்படுமா?

உடபூசல் என்பதைவிட. தேர்தலுக்கு முன்பிருந்தே எதிர்க்கட்சி அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாகச் செய்கிறது என்ற வகையில், ஆதரவாளர்களிடையே அபிவிருத்தி போன்ற விடயங்களைப் பெறுவதற்காக அரசுடன் இணய வேண்டும் என்ற கருத்து இருந்தது. இதே கருத்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருந்தது. இதனால் அவர்கள் தலைவருக்கு அழுத்தம் கொடுத்தது உண்மை. சிலர் அரசின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்று சேரக்கூடாது என்றும் கூறினர். எனவே மீண்டும் ஒரு பிளவைத் தடுக்க அரசுடன் சேர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. உடபூசல் என்பதை விட கருத்து வேறுபட்ட கருத்து வெளிப்பாடுகளே. உட்பூசல் நிலவியதென்பதை நான் மறுக்கிறேன்.

மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பிரதேச முஸ்லிம்கள் ஏறாவூர் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதேச அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அணமையில் காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்திருந்தார். இதைப் பற்றி உங்களது கருத்து என்ன?

இவ்விடயத்தைத் தெரிவித்தவர் கௌரவ உறுப்பினர் ஜவாஹிர் சாலி. கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சொல்லியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களையே குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே அங்கு அமைச்சர் இருந்து பாரிய அபிவிருத்திகளைச் செய்ததால் தற்போது பின்னடைவு உணரப்பட்டிருக்கலாம் என்ற வகையில், திட்ட முன்மொழிவுகளைத் தாருங்கள் அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் கவனிக்கிறோம் என்று பதிலளிக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து நீங்கள் எமது பிரதேசங்களில் செய்யும் நடவடிக்கைகள் என்ன?

முக்கியமாக வாழ்வாதார உதவிகள் செய்யப்படுகின்றன. கல்வி ரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படடுள்ளன. அத்துடன் விளையாட்டுக் கழகங்களையும் சமூக நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

எதிர்காலத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கு அப்பால், நிதியுதவி செய்யும் நிறுவனங்களூடாகவும் திட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது நீங்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் அரச தரப்பை சார்ந்திருப்பதால் உங்கள் இருவருக்குமிடையிலான நெருக்கம் எப்படியிருக்கிறது? பிரதேச அபிவிருத்தி தொடர்பில் உங்கள் உறவு எப்படியிருக்கிறது?

ஊர் என்ற அடிப்படையில் இருவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் பிரதியமைச்சர் கொண்டு வரும் நல்ல திட்டங்களை ஆதரிக்க நான் தயாராகவே இருக்கின்றேன். அரசியல் ரீதியாக எந்த உறவும் எம்மிடையே இல்லை. நான் அரசியலில் அவரால் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றேன். அரசியல் அதிகாரத்தை அவர் எனக்கு எதிராகப் பயன்படுத்தியவர். நான் செய்த பல அபிவிருத்திகளை அவர் உரிமைகோரும் பல விடயங்கள் நடந்துள்ளன. நாங்கள் இவ்வாறு அவரது வேலைத்திட்டங்களுக்கு உரிமை கோரவுமில்லை கோரப் போவதுமில்லை. அவர் ஆற்றல் உள்ளவர். விடயங்களைச் செய்யக் கூடியவர்.

ஆனால் அவர் வன்செயலைத் தூண்டி சகோதரர்களின் இரத்தங்களை ஓட்டக்கூடியவர்களாக தேர்தலை முன்னிட்டு வன்முறையாளர்களை உருவாக்குகிறார். பின்னர் இவர்கள் குடும்பத்தில் வன்முறை செய்கிறார்கள். ஊரில் இளைஞர்கள் மிக மோசமாகக் கெட்டுப் போனதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். கள்ள வோட்டுப் போடும் கலாசாரத்தை ஊக்குவிக்கிறார். அதனாலேயே வெற்றியும் பெறுகிறார். இது ஹறாமானதாகும்.

காத்தான்குடி இன்போ இணையத்தளத்தின் செயற்பாடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு ஏதாவது ஆலோசனை கூற விரும்புகிறீர்களா?

காத்தான்குடி இன்போ ஒரு சிறந்த வலையமைப்பாக இருக்கிறது. இதைப் பாராட்ட வேண்டும. நல்ல குழுவொன்று இதை நடத்துகிறது. காத்தான்குடியிலிருப்பவர்களை விட வெளியில் இது அதிகம் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது பக்கச்சார்பானது என்று கூறப்பட்டாலும் தற்போது அந்நிலை இல்லை. இதனூடாக பல விடயங்களை செய்ய முடியும். இது நல்லதொரு களம். நடுநிலைத் தன்மையைக் கடைப்பிடித்து வருகிறது. மேலும் வளர்ச்சியடைய வேண்டும்.

வாசகர்கள் மேலும் அதிகமானவர்களை இவ்விணையத் தளத்ததைப் பார்க்கத் தூண்ட வேண்டும். முடிந்தளவு ஊரோடு தொடர்பாக இருந்து முயன்ற உதவிகளைப் பணிகளைச் செய்ய வேண்டும். இதை இவ்விணையத் தளத்தோடு இணைந்தும் செய்ய முடியும். வெளிநாட்டிலுள்ளவர்கள் கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்குப் பங்களிக்க வேண்டும்.

 

இந்நேர்காணலின் முழுமையான ஒலிப்பதிவைக் கேட்க கீழேயுள்ள இணைப்பில் சிவப்பு நிற அம்புக்குறியை கிளிக் செய்யவும்:

 

Download: Kwcaudio-interviw357.MP3

 

நேர்காணலின் போது எடுக்கப்பட்ட படங்கள் வாசகர்களின் பார்வைக்காக:

This slideshow requires JavaScript.

13 Responses to “ஹிஸ்புல்லாஹ் விடயங்களைச் செய்யக்கூடியவராக இருந்தும் அடுத்தவர்களின் திட்டங்களைத் தான் உரிமை கோருபவராகவும் வன்முறை அரசியலை வளர்ப்பவராகவும் இருக்கின்றார் – மாகாண சபை உறுப்பினர் முபீனின் வெளிப்படையான பேட்டி!”

  1. Fayz said

    Nice Interview, Thanks Kattankudi Info.

  2. kkymovlavi said

    வாழ்த்துக்கள் kattankudi.info விற்கு. மிகவும் தெளிவான பேட்டி.ஒவ்வொரு அரசியல் வாதியின் திறமை அவர்களின் அனுபவங்கள் ,சமூகத்தின்மீது உள்ள அக்கறை பற்றிய விடயங்களை மிகவும் தெளிவாக வெளிக்கொண்டு வந்த இவ்வினயத்தள சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .மேலும் அல்லாஹ்உங்களின் நல்ல இப்பணி தொடர துணை புரிவானாக .ஆமீன்

  3. Arivu said

    “….ஆனால் அவர் வன்செயலைத் தூண்டி சகோதரர்களின் இரத்தங்களை ஓட்டக்கூடியவர்களாக தேர்தலை முன்னிட்டு வன்முறையாளர்களை உருவாக்குகிறார். பின்னர் இவர்கள் குடும்பத்தில் வன்முறை செய்கிறார்கள். ஊரில் இளைஞர்கள் மிக மோசமாகக் கெட்டுப் போனதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். கள்ள வோட்டுப் போடும் கலாசாரத்தை ஊக்குவிக்கிறார். அதனாலேயே வெற்றியும் பெறுகிறார். இது ஹறாமானதாகும்….”

    I don’t know when this fact is going to be understood by our people. It’s a great sin …

  4. Sadique said

    முஸ்லிம்களின் காணி விவகாரங்கள் தொடர்பாக பல விடயங்கள் அறியக் கிடைத்தமைக்கு kattankudi.info க்கும் முபீன் சேர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  5. ottrumaivirumpi said

    tx to info. i think every politician esp .muslim must show their real face.

  6. well don sir

  7. Mazaa said

    முக்கிய பிரமுகர்களின் நேர்காணல்களை – அதிக முயற்சியெடுத்து திறம்பட வழங்கிவரும் காத்தான்குடி இன்போவுக்கு நன்றிகள்.

    எமது – இன்போ தளமானது, உலகலாவிய ரீதியில் – பல முக்கிய நபர்களாலும் அவதானிக்கப்படுகின்ற ஒரு செய்தி ஊடகமாக அல்லாஹ்வின் உதவியால் மாறிவருவதனையிட்டு பெருமிதம் கொள்ளும் நாம், ………….மற்றும் புகைப்படப் பிடிப்பு விடயங்களிலும் கொஞ்சம் கரிசனை எடுப்பது நன்று என்பது என் அபிப்பிராயம்.

  8. Fahmy said

    Nice Interview sir, Allah will help you to future political activities

  9. silmi thajudeen said

    இவ்வூரில் பிறந்த மனிதநேயம் மிக்க எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடிய சமூக வேலைககளில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கக்கூடிய அரசியல் வாதியாக நான் உங்களைப் பார்க்கின்றேன்.

    இவ்வூர் மக்கள் போலி அரசியலில் இருந்து விடுபடாத வரை யதார்த்த அரசியலுக்குள் நுழையமாட்டார்கள். அதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம் தொடர்ச்சியாக தேவையாகும்.

    உங்களளோடு சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் கொண்டிருந்த நட்பின் காரணமாக இவ்வூருக்கு பல மில்லியன் ரூபாய்களை கொண்டுவந்து பல அபிவிருத்திகளை மேற்கொண்டவர் நீங்கள்.

    காத்தான்குடி பொது வாசிகசாலையை US AID மூலம் நவீன வசதிகளுடன் கட்டினீர்கள் பல வீதிகளை மில்லியன் கணக்கில் புனரமைத்தீர்கள் மற்றும எமதூருக்கான தொழிற்பயிற்சி நிலையம் பாடசாலைகளுக்கான வகுப்பறைக் கட்டிடங்கள் சுற்றுச் சுழல் கழிவகற்றும் திட்டம் போன்ற பல திட்டங்களை மேற்கொண்ட நீங்கள் எமதூருக்கான பொது பஸ்தரிப்பு நிலையம் ஒன்றை பல மில்லியன் ரூபாயில் நவீன வசதிகளுடன் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டிய பின்னர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது அரசியல் எதிரிகளின் நயவஞ்சகத்தனத்தால் வஞ்சிக்கப்பட்டீர்கள் என்பதை இவ்வூரின் வரலாறு ஒரு போதும் மறக்காது.

  10. mohamed said

    this way your are going continue in our peoples getting good benifit so dont think if any other taking back of letthem do it

  11. நன்றி காத்தான்குடி இன்போ

  12. remaamm said

    there is nothing to learn from his message for kattankudy community

  13. enka sir namma 2years mp post

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s