முஸ்லிம்கள் வெற்றியின் பங்காளர்களாக வேண்டும்: அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா
Posted by Kattankudi Web Community (KWC) on 31/03/2010
ஆரம்ப காலம் தொட்டே இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அரசர்களுக்கு விசுவாசமாக அவர்கள் நடந்திருக்கிறார்கள். அரசவை மருத்துவர்களாக அவர்கள் சேவை செய்திருக்கிறார்கள். எமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டுள்ளார்கள். அக்காலம் தொட்டு இன்று வரை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசும் சிறந்த அமைச்சுக்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. எனவே இம்முறை தேர்தலில் முஸ்லிம்கள் வெற்றியின் பங்காளர்களாக வேண்டுமே தவிர தோல்வியின் பங்காளர்களாக ஆகக்கூடாதென அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரின் ஈரியகொல்ல இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற குருணாகல் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
குருணாகல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான முஸ்லிம்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அரசியல் யாப்பு மாற்றப்பட்டால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் காங்கிரஸ் தவறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. யாப்பில் எது மாறினாலும் அனைவருக்கும் தமது விருப்பப்படி மதத்தைப் பின்பற்றும் உரிமை உண்டு என்ற விதி மாற்றப்படமாட்டாது. அனைவருக்கும் சம உரிமை உண்டு.
அதான் கூறுவதை அரசு நிறுத்தியது என்பது போலிக்குற்றச்சாட்டு. வெலிகம பகுதியில் இரண்டு பள்ளிவாசல்களில் அதான் கூறியதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே அது. அதை வழங்கியவரும் சரத் என் சில்வாதான்.
1994ம் ஆண்டு நான் பாராளுமன்றம் செல்லுமுன் இத்தொகுதியிலே அடிக்கடி இன முரண்பாடுகள் இருந்தன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினேன். அரசியல்வாதி இன வாதத்திலிருந்து தூரமாக இருக்க வேண்டும் என்பதே நான் அரசியலிலிருந்து கற்றுக்கொண்ட முக்கிய பாடம். இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் நான் சமமாக மதிக்கிறேன்.
இத்தொகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர் தமிழ் மக்கள் பலருக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்துள்ளேன். காட்டில் பல வகையான மரங்களும் இருப்பதால் காடு அழகு பெறுகிறது போலவே, நாட்டில் பல இன மக்களும் வாழ்வதுதான் நாட்டுக்கு அழகு.
அடுத்த பொதுத் தேர்தலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலேயே நடைபெறும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஐ.தே.கட்சியின் மேல் மட்டத்திலுள்ள பலரும் எமது அரசுடன் இணைந் திருக்கும்போது ஏன் கீழ் மட்டத்திலுள்ள பொதுமக்கள் இன்னும் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இது பலப்பரீட்சை நடத்தும் நேரமல்ல. குருணாகல் மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதியை தெரிவு செய்வது முஸ்லிம்களின் கடமை எனக் கூறினார்.
Courtesy: Thinakaran News






