உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் ஏறாவூர் மக்கள் – சுபைர்
Posted by Kattankudi Web Community (KWC) on 29/03/2010
பொதுத் தேர்தலானது, ஏறாவூர் மக்கள் அமைச்சர் அமீர் அலிக்கு நன்றிக் கடன் தீர்க்கக் கிடைத்த பொன்னான சந்தர்ப்பமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூரில் இடம்பெற்ற ஐ.ம.சு.மு. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய சுபைர்,
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மிகச் சொற்ப வாக்குகளையே ஏறாவூர் மக்கள் அமைச்சர் அமீர் அலிக்கு வழங்கிய போதும் அவரது பரந்த மனம் காரணமாக ஏறாவூர் மக்களுக்கு அவர் பல்வேறு சேவைகளை வாரி வழங்கினார்.
தேர்தலுக்குப் பின்னர் காணவே முடியாத அரசியல் பிரமுகர்கள் மத்தியில் சொற்ப வாக்குகளையே வழங்கியபோதும், ஏறாவூர் மக்களுக்கு அமைச்சர் அமீர் அலி நன்றியோடு உதவிக் கரம் நீட்டினார்.
வாக்குகளை கணக்குப் பார்த்து செயற்படுவோர் மத்தியில் தமக்கு அதிக வாக்குகளை அளித்திராத மக்களுக்கு அவர் செய்த சேவைகள் எண்ணிலடங் காதவை.
மாகாண சபை உறுப்புரிமை ஏறாவூருக்கு கிடைக்குமா என்று தவித்திருந்த வேளையில் தமது சாதுரியத்தால் ஏறாவூருக்கு மாகாண சபை உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுத்தது முதல் அமைச்சர் அமீர் அலியின் சேவைகளை பலநூறாக வகைப்படுத்தலாம்.
ஏறாவூர் மக்கள் உணர்ச்சிபூர்வமான தீர்மானங்களுக்குக் கட்டுப்படுவதிலும் பார்க்க அறிவுபூர்வமான தீர்மானங்களுக்குக் கட்டுப்படுபவர்கள் என்ற உண்மையை கடந்த பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்கள். அந்த அடிப்படையில் அமைச்சர் அமீர் அலிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பாராளுமன்றுக்குத் தெரிவு செய்வார்கள் என்பது நிச்சயமானது.
ஏறாவூர் மக்கள் நன்றி விசுவாசமுள்ளவர்கள். எமது மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. வின் வேட்பாளராக களமிறங்கியுள்ள அமீர் அலிக்கு முதல் விருப்பு வாக்கை வழங்கி வெற்றிபெறச் செய்வோம் என்றும் கேட்டுக் கொண்டார்.
Courtesy: Thinakaran News






