கட்டுரைகள்
கருணா என்கின்ற முரளிதரனுக்கும்.கிழக்கு மாகாண மக்களுக்கும்-1
இன்றைய காவியங்களுக்கு பிள்ளையர் சுழி போட்டவர் என அனைவராலும் சொல்லப்படுகின்ற
கருணா என்ற முரளீதரன் என்ன செய்கின்றார், செய்யப் போகின்றார் என்பதுதான் இப்போது அனைவரினதும் எதிர்பார்ப்பு.முழுக்க முழுக்க இராணுவ பாசறையில் வளர்ந்த இவர்,அந்த பாணியிலேயேதான் கிழக்கையும் கொண்டு செல்லப் போகின்றாரோ என பலர் அவருக்கு கொம்புசீவ நினைத்துக் கொண்டிருந்த போது கிழக்கின் அபிவிருத்தி மிக மிக முக்கியம்.
முதலீட்டாளர்களே வாருங்கள் ,கிழக்கில் முதலிடுங்கள் என அவர் காய்நகர்த்தி இருப்பது மிக ஆரோக்கியமாகவும், பாராட்டும் படியாகவும் இருக்கின்றது.
பல வருடங்கள்,பல வகையிலும் சீரழிந்து கிடக்கின்ற கிழக்கின் பொருளாதாரத்தை வெறுமனே அரசை மட்டும் நம்பியிராமல் முதலீட்டாளர்களையும் அழைத்துள்ளது நல்லதொரு திருப்பம்தான். ஆனால் இந்த கொழும்பு முதலீட்டாளர்களால் மட்டும்தான் எமது பொருளாதாரத்தை உயர்த்த முடியுமா ? ஏன் போரதீவிலும் , வாழைச்சேனையிலும், திருகோணமலையிலும் உள்ள நம்மவர்களால் முடியாதா? கொழும்பு முதலாளிகள் வந்து முதலிடுவதால் எம்மவர் 2000 பேருக்கோ அல்லது 10ஆயிரம் பேருக்கோ வேலை கிடைக்கலாம்.
ஆனால் முற்று முழுதாக இதன் பயனை அடையப்போகின்றவர்கள் இந்த கொழும்பு முதலாளிகளே ! நாளை ஒரு சுனாமியோ அல்லது சூறாவழியோ வந்தால் மொத்த நஷ்ட ஈட்டையும்எடுத்துக் கொண்டுஅவர்கள் நகர்ந்து விடுவார்கள்.அல்லது இந்த முதலீட்டைக்காட்டி வங்கிகளில் பாரியளவு கடன்களைப் பெற்று தங்களுக்கு வேண்டிய பகுதிகளில் (வட கிழக்குக்கு வெளியே )முதலீடுகளைச் செய்வார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன் குஜாராத்தில் பாரிய பூகம்பம் ஏற்பட்டு ஒரு மாவட்டமே அழிந்தது.
அது ஒரு வரண்ட பிரதேசம். 3லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அழிந்தனர்.பல வருடங்கள் அப்பகுதிக்கு போவதற்கு வசிப்பதற்கு மக்களே பயந்தனர். அப்போதைய குஜாராத் அரசு மொத்த இந்திய முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்தது.பாரிய முதலீட்டு சலுகைகள் வழங்கியது.
வங்கிக் கடன்,வரிச்சலுகை,ஏற்றுமதி வரிச்சலுகை என. 5 வருடத்தில் இந்தியாவில் உள்ள மொத்த கம்பனிகளும் அங்கு முகாமிட்டன.ஆனால் அந்த மக்கள் இன்னும் கஞ்சிக்கு வழியின்றியே இருக்கின்றனர்.
ஏன் நமது நாட்டில் கூட ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் ஆடை உற்பத்திக்கு முதலிடம் கொடுத்து ,பாரிய வரிச்சலுகைகள் அளித்து காளான் கணக்காக ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உதித்தன. என்ன நடந்தது ? 5% வீதமானவர்கள் தவிர ஏனைய அனைவரும் (முதலீட்டாளர்கள் எனச் சொல்லப்படுவோர்) அரசு கஜானாவை காலிசெய்து விட்டு இன்டர் கூலர்களில் பறந்து திரிந்தனர்.அந்த சிங்கள அப்பாவிச் சனங்கள் இன்னும் ‘கஹட்ட தேனீர்’( சக்கரை கட்டியை கடித்து) குடித்துக் கொண்டுஇருக்கின்றனர்.
வட கிழக்கு இணைந்த தமிழீழத்தின் சூத்திரமே வடக்கின் மூளை வளம்,கிழக்கின் மனித வளத்துடன் கூடிய பொருளாதார வளம்.அவ்வளவு வளத்தையும் உள்ளங்கை நெல்லிக்காயாக வைத்துக் கொண்டு ஏன் நாம் நெய்க்கு அலைய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கிழக்குமாகாணத்துக்கும் இப்போதிருக்கும் கிழக்குமாகாணத்துக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. முன்னர் நமக்குத் தெரிந்தெதெல்லாம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி மட்டும்தான்.
இப்போது களுதாவளை பிள்ளையாரடியில் போய் அவ்வழியால் போகின்ற 8 வயது சிறுவனை அழைத்து ‘தம்பி உன்னுடைய அண்ணா எங்கே’எனக் கேட்டால், ஹொலன்டில் எங்கிருக்கிறார் ?என்ன செய்கிறார் ? காலையில் என்ன சாப்பிட்டார் ? இரவுக்கு என்ன சாப்பிடுவார் ? ஹொலன்டின் நீள அகலம் என்ன என புள்ளி விபரங்களுடன் சொல்வார்.அந்த அளவுக்கு நம்மவர் விபரத்துடன்,விபரமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் நாம் ஏன் தொடர்ந்தும் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டும் ?சிறிது வித்தியாசமாக சிந்தித்தால் என்ன ?இன்று உலகில் உள்ள மொத்த வியாபாரிகளையும் அவ்வவ் நாடுகளில் உள்ள ‘சேம்பர் ஒப் கொமர்ஸ்’தான் கட்டிப் போடுகின்றது.
அதாவது ஒரு கிராமத்திலோ அல்லது ஒரு நகரத்திலோ உள்ள பத்தோ .பதினைந்தோ விபாரிகள் சேர்ந்து ஒரு வர்த்தக கூட்டமைப்பை உருவாக்குவது. அதாவது செங்கலடியில் உள்ள 15 வியாபாரிகள்(புடைவை வியாபாரி,கோழி வியாபாரி,பல சரக்குகடை,மீன்,நெல் அரைக்கும் இயந்திரம் வைத்திருப்பவர்,ரியுட்டரி நடத்துபவர் என யாராயினும்) சேர்ந்து ‘செங்கலடி சேம்பர் ஒப் கொமர்ஸ்’ என உருவாக்கலாம்.அதே செங்கலடியில் இன்னும் பலர் சேர்ந்து ‘செங்கலடி வடக்கு சேம்பர் ஒப் கொமர்ஸ்’என உருவாக்கலாம்.இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் ,நகரத்திலும் உருவாக்கலாம். உலக,வெளிநாட்டு வர்த்தகர்களை தனி ஒரு வியாபாரியாக தொடர்பு கொள்வதைவிட ,இந்த சேம்பர்கள் ஊடாக தொடர்பு கொள்வதற்கு வலு அதிகமாக இருக்கும்.
இதை அரசு கட்டுப்படுத்தாது.பூரண சுதந்திரத்துடன் இயங்கலாம்.உலகில் உள்ள ஒவ்வொரு
நாட்டிலுமுள்ள சேம்பர்களுக்கு நமது உற்பத்திகள்,நம்மிடம் உள்ள மூலப்பொருள்கள் பற்றி
தொடர்பு கொள்ளலாம். கட்டார் சேம்பர் ஒப் கொமர்ஸ்,பெல்ஜியம் சேம்பர் ஒப் கொமர்ஸ்,பிரான்ஸ்சேம்பர் ஒப் கொமர்ஸ் என நம்மிடமுள்ள ஒவ்வொரு பொருள்பற்றியும் ஈமெயில் பண்ணலாம்.
சிறிலங்காவில் இப்படி பலசேம்பாகள் இருக்கின்றன.கொழும்பு சேம்பர்,நேஷனல் சேம்பர்,
பெடரேஷன் சேம்பர்,சென்றல் புறவின்ஸ் சேம்பர்,கண்டி சேம்பர்,லேடீஸ் சேம்பர், கேகல்ல சேம்பர்,யாழ் சேம்பர்,சாவகச்சேரி சேம்பர்,ஹம்மாந்தோட்டை சேம்பர்,மொனறாகலை சேம்பர்,புத்தள சேம்பர்என பல நுறு சேம்பர்கள் இருக்கின்றன இவைகள் ஊடாகத்தான் மொத்த வியாபாரமும் நடக்கின்றது.
ஏன் நாம் எல்லாவற்றுக்கும் கொழும்பை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக காலி ‘அல்பிட்டிய’ என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்.இவர் ஒரு கறுவாப்பட்டை வியாபாரி. பத்தாயிரம் ரூபா பணத்தை வைத்துக் கொண்டு அல்பிட்டிய பகுதியில் உற்பத்தியாகும் கறுவாப்பட்டையை வாங்கி தினமும் கொழும்புக்கு கொண்டு போய் விற்றுக் கொண்டிருப்பவர். இப்படியாக பல வருடம் அல்லாடிக்கொண்டிருந்தார்.காலியில் ஒரு சேம்பர் உருவானது.யாரோ ஒரு நண்பர் இவருக்கு ஆலோசனை சொல்லளூ100ரூபா செலுத்தி அங்கத்தவரானார். அடுத்த நாள்முதல் காலிசேம்பரில் இருந்துபல ஈமெயில்கள் உலகம் முழுதும் சென்றது.ஆம் கனடாவில் உள்ள ஏதோ ஒரு சேம்பரில் இருந்து மூன்று மாதத்தில் ளூ எமது அங்கத்தவர் ஒருவருக்கு கறுவா தேவை.ஐந்து வருடத்துக்கு மாதம் 1000 கிலோ தேவை என ஓடர் வந்தது.இவர் கொழும்பில் கிலோவுக்கு 10ரூபா இலாபத்தில்தான் விற்றார்.இப்போது கிலோவுக்கு 180 ரூபா இலாபம்.இது நடந்தது 18 வருடத்துக்கு முன். இப்போது இவர் பெரியதொரு ஏற்றுமதியாளர்.பில்லியனர்.
கதிர்காமம்,திஸ்ஸமகராம,திஸ்ஸ போன்ற இடங்களில் இவரது ஹோட்டல்களும்,தங்கும் விடுதிகளும் அமைந்துள்ளது.இப்படி பல லட்சம் பாமரர்கள் பணக்காறர்களாயுள்ளனர்.
இதற்குரியஆலோசனைகளை ஈ.டி.பி(எக்ஸ்போட் டெவலப்மென்ட் போர்ட்),நெஷனல் சேம்பர் ஒப் கொமர்ஸ் கொழும்பு,பெடரேஷன் சேம்பர் ஒப் கொமர்ஷ் கொழும்பு போன்ற இடங்களில் பெறலாம். இதற்கு எந்த தகுதியும் தேவையில்லை.உழைக்கும் ஆர்வமும்,எம்மால் முடியும் என்ற வெறியும் இருந்தால் போதும். யாரும் போய் இவற்றின் கதவுகளை தட்டலாம்.பாணமை குடும்பி மலை தொடக்கம் திருகோணமலை தங்கவேலாயுத புரம்வரை நமது வளம் கண்மூடி உறங்கிக் கொண்டிருக்கின்றது.
மீன்,மீன் கழிவுகள்,மீன் செட்டை,சிப்பி,நன்னாரி வேர், மூலிகைகள், மரத்தளபாடம், தென்னைமர உபகரணம், நாட்டுக்கோழி,நாட்டுக்கோழிமுட்டை முதல் பெரியகல்லாறு முதல் கிண்ணியா வரை படர்ந்துள்ள நிலப்பரப்பில் விளையக்கூடிய அனைத்துப் பொருட்கள்,சேவைகள் அனைத்தையும் நம்மவரே நேரடியாக விற்கலாம். இந்த சேம்பர்கள் மாதத்துக்கு ஒரு முறை தமது வர்த்தகர்களை குழுக்களாக வெளிநாடுகளில் உள்ள சேம்பர்களுக்கு அனுப்பலாம்.
அதே போல் வெளிநாட்டு சேம்பர்களை கல்முனைக்கும்,மட்டக்களப்புக்கும் அழைக்கலாம். அவர்களுடன் நம்மவர்கள் கதைக்கலாம்.பெரிய கம்பனிக்காறர்களுக்கு நமது மூலப் பொருட்கள் தேவைப்படலாம். இப்படியான நிகழ்வுகளுக்கும்,சேம்பர் ஆரம்பிப்பதற்கான செலவுகளுக்குமான பணம் ஏற்கனவே உலக வங்கியாலும்,இன்டர் நெஷனல் மணி பண்ட்( ஐ.எம்.எப்),ஆசியன் டெவலப்மென்ட் போர்ட் (ஏ.டி.பி.) போன்றவற்றாலும் வழங்கப்பட்டு அரசு கஜானாவில் கொட்டாவி விட்டுக் கொண்ருக்கின்றது.எந்த கெடுபிடியும் இல்லாமல் இதைப்பெற்று பல சேம்பர்களை நாளையே திறந்து விடலாம்.
சிக்கல்கள் தோன்றுமாயின் மட்டக்களப்பிலும்,திருகோணமலையிலும் உள்ள ஏ.டி.பி.புறஜக்ட் டிரக்டர்களை (ஐ.ஆர்.டி.பி.புறஜக்ட் டிரக்டர் எனஇவர்களை கூறுவர்-அதாவது இன்ரர்கிறேட் ருரல் டெவலப்மென்ட் போர்ட் புரஜக்ட் டிரக்டர்) அணுகலாம். உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் இலவச பயிற்சி எல்லாம் உண்டு.இன்று உலகம் முழுதும் நமது இளைஞர்கள் உலாவருகின்றனர். உதாரணமாக காரைதீவு முதல் சாய்ந்தமருது, கல்முனைகுடி,கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, பெரிய கல்லாறு, கோட்டைக் கல்லாறு ஓந்தாச்சிமடம், கழுவாஞ்சிகுடி.களுதாவளை தொடங்கி செங்கலடி,வந்தாறுமூலை என எடுத்துக் கொண்டால் சுமார் 3000 பேர் உலகம் முழுதும் பரந்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்புடன் அவர்களின் உறவினர்களை வைத்தே பல சேம்பர்களை தொடங்கலாம்.
ஒரு காலத்தில் களுதாவளை முறிவு வைத்தியம், ஏறாவூர்,நட்பிட்டிமுனை,அக்கரைப்பற்று கோளாவில் பாம்புக்கடி வைத்தியம், உல்லை. பாணமை, சங்கமான்கண்டி, ஓந்தாச்சிமடம், கிண்ணியா,வெருகல் நாட்டு வைத்தியம் என கிழக்கு மாகாணத்திற்கு பாமரன் முதல் படித்தவன் வரை வந்து போய்க் கொண்டிருந்தனர். அது இன்னும் அழியவில்லை.அந்த மூலிகைகளையும்,அந்த வைத்தியர்களின் வாரிசுகளையும் தேடிப்பிடித்து உலக சந்தையில் எமது தரத்தை நிரூபிக்க வேண்டும். இன்று உலகில் உள்ள முக்காலே மூணுவீசம் நபர்களுக்கு வாய்வும்,வாதமும் வந்து வகிர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றது.அதற்குரிய முக்கிய நிவாரணி வெள்ளைப் பூண்டு. இந்த வெள்ளைப்பூண்டு பஞ்சாப் லுதியானாவில்தான் அதிகம் கிடைக்கும். லுதியானாவில் தெருவுக்குத்தெரு சேம்பர் ஒப் கொமர்சும், வெள்ளைப்பூண்டு வியாபாரிகளும் இருக்கின்றார்கள்.
ஓவ்வொரு குடிமகனும் அங்கு உலக பார்மசூட்டிகல் கம்பனிகளுடன் பேரம் பேசுகின்றார்கள்.
அந்த வெள்ளைப்பூண்டைத்தான் ‘புறுபன்’ ‘கேஸ்றிக் டேப்ளட்’ ‘வாதக் குளிகை’ என்ற பெயரில் உலகமே தின்று கொண்டிருக்கின்றது. இந்த சேம்பர்கள் திறப்பது பற்றி சிறிலங்கா அரசு நிச்சயமாக எதிர்த்து நிற்கப் போவதில்லை. இந்த சேம்பரின் பெருமை மகிந்த அரசுக்கு நன்கு தெரியும்.சிறிலங்காவிலேயே பெரிய கட்டிடத் தொகுதிகளையும்,சகல தொழில் நுட்பவசதிகளையும் கொண்ட சேம்பர் ஹம்மாந்தோட்டையில் உள்ளது. அதனுடாகத்தான் அங்கு ஒரு ஹாபர்கட்டுவதற்கான அத்திவாரமே போடப்பட்டது.
இந்த எமது மண்ணின் வளத்தை பற்றி கண்டி பல்கலைக்கழகத்தில் மூத்த புரொபசர் ஆக இருந்த அதி கவுரவத்துக்குரிய பேராசிரியர் திரு.தேனபடு (மண்ணியல் ஆய்வாளர்)ஆய்வு செய்திருந்தார்.அது குடும்பி மலை முதல் சங்கமன்கண்டி வரை உள்ள நமது மண்ணின் பெருமை சொல்கிறது.இன்றைய உலக பொருளாதாரம் ஆசியாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
அண்மையில் பாராக் ஒபாமா மேற்கொண்ட கணிப்பொன்று சைனா,இந்தியா போன்ற நாடுகளைத்தான் கைகாட்டியுள்ளது.இந்தியா எனும் போது அது நம்மையும் சேர்த்துத்தான்.
இன்னும் 10 ஆண்டுகளில் மேற்கில் உள்ளவர்கள் வேலைதேடி நம்மை நோக்கி வருவார்கள் என ஆருடங்கள் சொல்லுகின்றன.
வாழ்க்கை வாழ வேண்டும் என்பது முக்கியமல்ல
அந்த வாழ்க்கைக்குப் பின்னால்-உனது பெயர்
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்
அதுதான் முக்கியம்.
கிழக்கில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பட்ட அனைத்து வேதனையும் போதும். இனி ஆவது
கொஞ்சம் மூச்சு விடட்டும். பொருளாதார அபிவிருத்தி,மக்கள் நலன் என இறங்கி புதியதொரு
உலகு படைப்போம். 1984 களில் கும்பகோணம் சாக்கோட்டையில் ராணுவத்தளபதியாக மிடுக்குடன் நடந்துவந்தவரும், 1991 களில் நாரஹேன்பிட்டி,21,பார்க் ரோட்டில் இரும்புக் கோட்டைக்குள் இருந்தவருமான அமைச்சர் .டக்ளஸ் தேவானந்தா இன்று வின்சர் தியேட்டர் வீதிகளில் மக்கள் சேவையில் வீறு நடை போடுவது அந்த மனிதமனங்களை வெல்வதற்குத்தான் என்றால் மிகையாகாது.
கருணா என்கின்ற முரளிதரனுக்கும்,கிழக்கு மாகாண மக்களுக்கும்-2
நேற்று நண்பர் ஒருவர் கேட்டார். எல்லோரும் வன்னி நிலவரம் எழுதிக் கொண்டிருக்க நீர் மட்டும் பொருளாதார நிலவரம் எழுதிக் கொண்டிருக்கிறீர். உமக்கென்ன லூசோ எனக் கேட்டார். ஆமாண்ணா சென்ற 23ம் திகதிவரை மென்டலாகத்தான் இருந்தோம்.
23 பிற்பகல் ரியுப்தமிழ் டொட் கொம் பார்த்த பின்னர் தோன்றிய பொறிதட்டல்தான் இது. அதில் நமது முன்னாள் வேங்கை ஒன்று ‘நாங்கள் இங்கு தண்ணீர் குடிக்க கூட வழியில்லாமல் இருக்கின்றோம்’ என்று எவ்வித கவச குண்டலங்களுமின்றி, கழுத்தில் ஜோல்னாப் பையொன்றை போட்டுக் ( சரி நிகர் சேரன் மன்னிப்பாராக. ஜோல்னாப் பை உங்களுடைய கருவி அல்லவா ?)கொண்டு உலகத் தமிழர்களுக்கும், உலக உதவி நிறுவனங்களுக்கும் மன்றாட்டமாக வேண்டுகோள் விட்டுக் கொண்டிருந்தது.
ஐயகோ ! இறைவா !! இதைத்தான் தண்ணில கண்டம் என்பதோ !? முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும் என்பதும் இதுதானோ! கிளிநொச்சி தண்ணீர் தொட்டி குப்புற விழுந்து கிடந்ததைபார்த்த போது எத்தனை வாயும்,வயிறும் எரிந்தது. யுத்த நாகரிகம் மொத்தமாக சவக்குளிக்குள் அல்லவா தள்ளப்பட்டது.
அழகிழந்து, அணியிழந்து, கதியிழந்து, கவலையுற்று, வாடி, வதங்கி, சோபையிழந்து இளம்பருதி அண்ணா மலங்க மலங்க விழித்துக் கொண்டு ரொம்ப நாட்களுக்கப்புறம் மக்களுடன் மக்களாக ‘வாக்கி டோக்கி’ சகிதம் நின்று போஸ் கொடுத்து ‘கஞ்சி’ வாங்கி குடித்ததைப் பார்த்த பின் யாருக்குத்தான் கவலை வராது. மக்கள் மேல் பாசம் வராது.
உங்களிடம் நீச்சல் தடாகங்களும், ‘சோலார் பவரில்’ இயங்கக்கூடிய ஜெனரேட்டர்களும், வோட்டர் பம்ப் களும் இருக்கின்றன. நாங்கள் ரொம்ப ஏழைகள்,அழுதழுதும் பிள்ளைகளை நாங்கள்தான் பெற வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை இப்போதே தொடங்கி விடுவது நல்லதல்லவா? அதனால்தான் இச்சிறு முயற்சி என்றேன்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் அனைத்தும் விசா வழங்க மட்டும்தான் இருக்கின்றன என நம்மவர் பலர்தப்புக் கணக்கு போட்டுள்ளனர். ஒவ்வொரு தூதுவராலயங்களிலும் அரசியல் பிரிவு, வர்த்தக பிரிவு, உளவுப் பிரிவு, விஸாப் பிரிவு.
செய்திப் பிரிவு என பல பிரிவுகள் இருக்கின்றது. இங்கு வர்த்தகப் பிரிவு (கொமர்ஷியல் டிவிஷன் ) தான் மிக முக்கியமானதும் பெரிய இடவசதியைக் கொண்டதுமாக அமைந்திருக்கும்.
இதில் பல ஊழியர்கள் அவ்வவ் நாடுகளின் உற்பத்தி, முடிவுப் பொருட்கள், மூலப் பொருட்கள் போன்ற சகல விடயங்களையும் நமக்குத்தரதயாராக உள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த நாடுகள் நம்மிடமிருந்து என்ன எதிர் பார்க்கின்றன என்ற விபரங்களையும் இவர்களிடம் பெறலாம். எவ்வித கட்டணமும் கிடையாது. எவரும் போகலாம். எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. என்ன அடுத்த முறை கொழும்பு போகும் போது பிரிட்டிஷ் எம்பசி கொமர்சியல் டிவிஷனுக்கோ, பிரான்ஸ் எம்பசி கொமர்சியல் டிவிஷனுக்கோ ஒரு நடை போய்த்தான் பாருங்களேன்.
‘மொரட்டுவ’யைச் சேர்ந்த மரவேலை (ஓடாவி,தச்சன்)செய்பவர் ஒருவர். சின்னச்சின்ன மரவேலைகள் செய்து பிழைப்பு நடாத்திக் கொண்டிருந்தவர். மரத்தினால் என்ன என்ன வேலைகள்கள் செய்ய முடியாது என நாம் நினைப்போமோ இதை இவர் செய்து முடிக்க கூடிய திறமை படைத்தவர். இவருக்கு சொந்தமாக வீடு கிடையாது. கூலி வீடு,பல பிள்ளைகள். ஒரு முறை அவ்வழியால் காலிக்கு உல்லாசப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்.
இவரது கைத்திறனை பார்த்துவிட்டு ஏன் இதை வெளிநாட்டில் சந்தைப் படுத்தக்கூடாது எனக்கேட்டு ‘கொமர்ஷியல் டிவிஷன்களுக்கு’ஒரு விசிட்பண்ணும்படி ஆலோசனையும் கூறுகின்றார். ஆம் இவர் பல எம்பசிகளுக்கு படையெடுக்க ஜப்பான் எம்பஷி கொமர்சியல் டிவிஷன் இவரை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றது. இப்போது ஜப்பானில் உள்ள பல ‘டகோபாக்கள்’ இவரது கைவண்ணத்தில் உருவானவைதான்.
சிறிலங்காவிலும் ,இன்னும் பல வெளிநாடுகளிலும் உள்ள அரசியல்வாதிகளினதும், பணமுதலைகளினதும் வீடுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் முழுக்க முழுக்க தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆறடி உயர, ஒண்ணரை அடி அகலமான மணிக்கூடுகள் இவரது சொந்தக் கம்பனி தயாரிப்புகளே.
இந்த கொமர்ஷியல் டிவிஷனை டெலிபோனிலும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
உதாரணமாக நீங்கள் ஒரு மொபைல் போன் வியாபாரியானால் நீங்கள் ‘பின்லான்ட்’ எம்பஷியைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொண்டு பின்லான்டில் உள்ள அத்தனை மொபைல் போன் கம்பனிகளினதும் விபரங்களைக் கேட்கலாம். மூன்று நாட்களில் அத்தனை கம்பனி விபரங்களும் உங்கள் கதவை தபாலில் வந்து தட்டும். உலகிலேயே தரமான உறுதியான மொபைல் போன் தயாரிக்கும் கம்பனிகள் பின்லான்டிலேயே இருக்கின்றது.
கொழும்புக்குப் போய் ‘செக் பொயின்ட்டுகளில்’செக்குமாடுகள் போல் அலைந்து திரியவேண்டிய அவசியமுமில்லை. ‘கடுகண்ணாவ’யில் இருந்து எட்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ‘பொத்தப்பிட்டிய’ கொட்டைப்பாக்குக்கு பெயர் போன ஊர். இங்கு விளையும் கொட்டைப் பாக்கு உலகப் பிரசித்தம். ஆனால் பழுதடைந்த கொட்டை பாக்கை யாருமே வாங்க மாட்டார்கள். ஓட்டை விழுந்து ,உழுத்துப்போன கொட்டைபாக்கு அங்கு மலையாக குவிந்து கிடந்தது.
இதில் சிறிததளவை கையில் அள்ளிக் கொண்டு புத்திசாலித்தனமான இளைஞர் ஒருவர் ஒவ்வொரு கொமர்ஷியல் டிவிஷனாக ஏறி இறங்கினார். ஆம் இந்நிய கொமர்ஷியல் டிவிஷன் இவருக்கு பாதையை திறந்து கொடுத்தது. கேரளா எர்ணாகுளத்தில் உள்ள ‘நிஜாம் பாக்கு’ ‘அஜந்தா பாக்கு’கம்பனிகள் அந்த பாக்குகளை மொத்தமாக வாங்கின. இளைஞர் இப்போது சிறிலங்காவில் விரல் விட்டு எண்ணக் கூடிய வியாபாரிகளில் ஒருவர்.
நீங்கள் உங்கள் கிராமங்களில் உள்ள வர்த்தக சங்கங்கள், சேம்பர் ஒப் கொமர்ஷ் ஊடாக இவர்களை நேரடியாக உங்கள் கிராமங்களுக்கே அழைக்கலாம். நிறைய ஆலோசனைகள் வழங்குவார்கள். உங்கள் காலடியிலேயே கொழும்பு வர்த்தகர்களை கட்டிப் போடக் கூடிய பிரபல வர்த்தகர்கள் இருக்கின்றார்கள்.
உதாரணமாக நமது மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவின் மாமனார் (மனைவியின் தந்தை),அக்கரைப்பற்றைச் சேர்ந்த அப்துல் கையும் ஹாஜியார், கொழும்பைச் சேர்ந்த ஜனாப்.மஹ்றுப் போன்றவர்களைச் சொல்லலாம்.
முழு சிறிலங்காவுக்குமான ‘மெரைன் சீமந்து’ வியாபாரம் 2000 களில் இவர்களின் கையிலேயே இருந்தது. இப்போது பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். வியாபாரத்தில் இவர்கள் மேதைகள். இவர்களை கிராமம் கிராமமாக அழையுங்கள். இவர்களிடம் இவர்களது அனுபவங்களை கேழுங்கள். இவர்கள் வாழ்க்கையுடன் போராடி ஜெயித்தவர்கள். நிச்சயம் ஆலோசனை சொல்வார்கள்.
உங்களால் முடியாவிட்டால் ஜனாப்.ஹிஸ்புல்லாவிடமும், திரு.முரளிதரனிடமும் கோரிக்கை வையுங்கள். வடகிழக்கில் உள்ள அவ்வளவு அனுபவசாலிகளையும் கிராமம் கிராமமாக அழைத்துவரச் சொல்லுங்கள். கொமர்ஷியல் டிவிஷன்களை தொடர்பு கொண்டு வந்தாறுமூலையிலும், மூதூரிலும் இலவசமாக ‘வேர்க்ஷொப்’ நடாத்தச் சொல்லுங்கள்.
2001ல் யாழ்.வேம்படி மகளிர் மகா வித்தியாலயத்தில் ஒரு கைத்தொழில் பொருட்காட்சி நடந்தது. ஒரு சின்னஞ்சிறுவன் வீட்டில் இருந்து கொண்டு எவ்வாறு சீனி உற்பத்தி செய்யலாம் என பல பண்டிதர்களுக்கு பாடம் நடாத்திக் கொண்டிருந்தான். குட்டி இயந்திரமொன்றை (அவரது சொந்த தயாரிப்பு)வைத்துக் அரைக்கிலோ கறும்புச் சாற்றைப்போட்டு 200கிராம் சீனி தயாரித்தான். உலகில் எங்குமே இப்படி ஒரு இயந்திரம் கிடையாது. இயந்திர உலகின்தாத்தா என்கின்ற சைனாவிடமே அதிகுறைந்தது 1000கிலோ சீனி உற்பத்தி பண்ணக்கூடிய இயந்திரம்தான் உண்டு. அந்த குட்டி ஜீனியஸை தேடிப்
பிடியுங்கள். அவரைப் பட்டை தீட்டி சீனி உற்பத்தியை குடிசைக் கைத்தொழிலாக்குங்கள்.
இந்தப் பொருட்காட்சிக்கு நான் நிருபரும், சினேகிதனுமான நிமலராஜனுடன் சென்றிருந்தேன்.அவர் சில புகைப்படம் எடுத்தார். அப்புகைப்படம் எனது கைக்கு கிடைக்கவில்லை.
சீனி உற்பத்தியில் கொள்ளுத்தாத்தா எனச் சொல்லப்படுகின்ற பிரேசிலில் ஒரு மெட்டிக் தொன்
சீனியின் விலை 115 யு.எஸ்.டொலர்(கிட்டத் தட்டகிலோ 14ரூபா )மட்டுமே. ஆனால் அது டுபாய் போய் அங்கிருந்து இந்தியா வந்து, அங்கிருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்து, கொழும்பு 4ம் குறுக்குத்தெரு வந்து ஓந்தாச்சிமடம் வரும் போது விலை மூச்சை முட்டும். அட சீனி பிரேசிலில் 14 ரூபாத்தானா ! உடனே பிரேஷில் எம்பஷி போய், கொமர்ஸியல் டிவிஷன் கதவைத்தட்டி ஒரு கன்டய்னர்( 20 தொன்,20.000கிலோ ) சீனி வாங்குவோமே என நடையைக்கட்டி விடாதீர்கள்.
சீனி வியாபாரம் ஒரு மாயா பஜார். அங்குள்ள ஒவ்வொரு சீனி பெக்டரியுமே வானைத்தொடும். அதிகுறைந்தது 12,500 மெட்டிக் தொன்தான் (ஒரு கோடி இருபத்தைந்து லட்சம் கிலோ ) தருவார்கள். குறைந்தது நம்மிடம் 3.1 மில்லியன் யு.எஸ்.டொலர்தேவை. சிறிலங்காவில் இந்தளவு’தில்’ யாருக்குமே இல்லை. சீனி சண்முகம் என்கின்ற ஒருவருக்கு தில் இருந்தது. பிரேமதாஸ ஆட்சி காலத்தில் அவரையும் சுவாகா……..!
முழுக்க முழுக்க கொழும்பு வர்த்தகத்தில் கோலோச்சிய யாழ்த் தமிழர்களும், மலையகத் தமிழர்களும்; ‘ரிட்டயர்ட்’ என்ற போர்வையில் பிள்ளைகளிடமும், பேரப் பிள்ளைகளிடமும்,
நண்பர்களிடமும் வியாபாரங்களை ஒப்படைத்து விட்டு டெய்லி நியுஸ் பேப்பர் படித்துக்
கொண்டு நாட்டு நடப்புக்களை வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்போதைய தா.பி.சொக்லால் ராம்சேட் பீடி முதல் இப்போது நாம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யும் ‘வோட்டர் பில்டர்’வரை கஸ்டம்ஸ் டியுட்டி,கிளியரன்ஸ்,லெட்டர் ஒப் கிறடிட் (எல்.சி),பேங் கன்போர்மேஷன் லெட்டர் (பி.சி.எல்) என ஒவ்வொரு விடயத்திலும் பழம் தின்று கொட்டை போட்டுள்ள இவர்களை அணுகுங்கள்.
குருநாகலையில் நம்மவர் தூக்கி வீசிய தும்பு, கிண்ணியாவில் நாம் வெட்டி வீசிய தென்னோலை, கல்முனைக்குடியிலும், திருகோணமலையிலும் சீவி எறிந்த
மீன் செட்டை,கடற்கரை ஓரங்களில் நாம் உதைத்து விளையாடிய கணைஓடு என்பவற்றை உலக நாடுகளுக்கு விற்று கரியை காசாக்கிய தங்க மூளைகள் இவை. நாம் ஏஜென்சிக்காறனுக்கு பத்தாயிரம் டொலர் கொடுத்து ஆறுமாதம் விழித்திருந்து,பல போடர்
கடந்து, வெளிநாடு வந்து, நிராகரிக்கப்பட்டு, சிக்கன் சொப்பில் நெருப்பில் வெந்து, வெளியே அதிகாலை உறைபனியில் பஸ்ஸில் அல்லாடி, வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி 500 யுரோ சேர்த்து வந்த கடனை அடைக்க நாய்படாத பாடு பட்டுக் கொண்டிருப்போம்.
ஆனால் இவர்கள் எதுவுமே கிடையாது. காலையில் எழும்பி டெய்லி நியுஸ் பத்திரிகையை ஆற அமர உட்கார்ந்துபடித்துவிட்டு 6.30 நியூஸூம் கேட்டு விட்டு 11 மணிக்கு பெட்டா மார்கட்டுக்கு புறப்படுவார்கள். ஒரு 5000 டொலர் தேடிக்கொண்டு 4 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவார்கள். பக்கா நேர்மையான (ஹலால் )வியாபாரம். எப்படி ?
1999ம் ஆண்டு டெய்லி நியுஸ் பத்திரிகையில் பிஸ்னஸ் பக்கத்தில் இரண்டு மூன்று அங்குல
நீள அகலத்தில் ஒரு குட்டிச் செய்தி இருந்தது.பிரேஸிலில் நேற்று பாரிய சூறாவழியுடன் பெரு வெள்ளம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் சகல மரம் செடி கொடிகளும் அழிந்தன.
நாம் எவருமே அந் செய்தியை படிக்கவில்லை.ஆனால் இவர்களினது மூளை அப்போது வேலைசெய்தது. பிரேஸில் கோப்பி உற்பத்தியாகும் நாடு. மொத்த உலகுக்குத் தேவையான கோப்பியில் மூன்றில் ஒருபங்கை உற்பத்தி செய்யும் நாடு பிரேஸில்.கோப்பி மரங்கள் அழிந்தால் அடுத்த மூன்று வருடத்துக்கு பிரேசிலில் இருந்து கோப்பியை எதிர்பார்க்க முடியாது. நிச்சயமாக அடுத்த ஒரு வருடத்தில் கோப்பிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும். கோப்பி விலை உச்சத்தில் நிற்கும்.
உடனடியாக தமது நண்பர்கள்,வாடிக்கையாளர்களுக்கெல்லாம் போன் செய்து பணமிருந்தால்
கோப்பி வாங்கி வையுங்கள்.இன்னும் ஒரு வருடத்தில் 100 ரூபாவுக்கு மேல் விற்கலாம் என்கின்றனர். அப்போது கோப்பி விலை கிலோ 24ரூபா. வறக்காப்பொல தொடக்கம் மகியங்கனை வரை, பிபிளை தொடக்கம் பதுளை பண்டாரவளை வரையுள்ள அனைத்துக்கிராமங்களிலும் உள்ள கோப்பி வாங்கி குவிக்கப்பட்டது.(அப்போது நம்மவர்கள் ஆயுதம் வாங்கி குவிப்பதில் ரொம்ப அக்கறையாகவிருந்தனர் )ஆம்.2001 இல் கோப்பி கிலோ 400 ரூபா விலை போனது. 1600 வீதம் இலாபம். கொள்ளையடித்தாலும் இப்படி பணம் உழைக்க முடியாது.
நீ பெற்றுள்ள பட்டங்களையும், பதக்கங்களையும், டிப்ளோமாக்களையும் கடவுள் கண்ணெடுத்தும் பார்க்கப் போவதில்லை.அவர் உன்னிடம் எதிர்பார்ப்பதெல்லாம் மக்களுக்காக,உனது சமூகத்துக்காக என்ன செய்துள்ளாய் என்ற தழும்புகளைத்தான் உன்னிடம் எதிர்பார்ப்பார். அடுத்த முறை சுவிசில் ஊர்வலத்துக்கு தயாராகும் அண்ணாவுக்கோ அல்லது அத்தானுக்கோ போன் பண்ணி ஒரு நடை ‘யுரோப்பியன் சோம்பர்ஒப் கொமர்ஷ்’ஹெட் ஆபிசுக்குள் போய் அந்த நாட்டுக்கு என்ன தேவை எனக் கேட்டு தகவலை அனுப்பச் சொல்லுங்கள். ஊர்காவல்துறை கடலட்டைக்கும், வேலணை ‘ஒட்டி’க்கும் சுவிசில் ரொம்ப கிராக்கி. இங்கிலாந்து லிவர்பூலில் இருக்கும் (காரைதீவு, பெரியகல்லாறு, பட்டிருப்பு, முனைத்தீவு, காத்தான்குடி, கல்லடி, ஏறாவூர் நண்பர்கள் கவனிப்பார்களாக ) நண்பர்களுக்கு ,உடன்பிறப்புகளுக்கு இப்போதே பேர்மிங்ஹாம் சேம்பர் ஒப் கொமர்ஷூக்கும்,மான்செஸ்டர் சேம்பர் ஒப் கொமர்ஷூக்கும் ஒரு விசிட் பண்ணி தகவல்களை திரட்டச் சொல்லுங்கள்.
அடுத்த முறை ஊருக்கு வரும் போது அல்பா பொபைல் போனோ! வோர்க் மேனோ வேண்டாம் 200யுரோ முதலீட்டுடன் வருடத்துக்கு பல லடச ரூபா வருமானம் தரக்கூடிய ‘தீக்கோழி’(ஒஸ்றிச்) வளர்ப்பதெப்படி என்ற புத்தகத்தையும்,செயல் முறை டி.வி.டி.யும் வாங்கிவரச் சொல்லுங்கள். இங்கு உலகமே கெட்டுக்கிடக்கின்றது. அமெரிக்காவில் இரண்டரை லட்சம் பேர் சொந்த வீடுகளின்றி கார்களை வீதியில் நிறுத்தி அதற்குள்ளேயே வாழ்கின்றனர். திடீரென எமது வேலைளும் பறிபோகலாம். காய்க்கும், பூக்கும் கல கலக்கும் காக்காய் நிற்க கொப்பில்ல என்ற கதையாகிவிடக்கூடாது.
( அடுத்தவாரம் : ‘கேரளா காலிகட்’இல் பிழைக்க வழியின்றி தற்கொலை செய்ய கடற்கரைக்கு வந்த ஒருவர் உலக கோடிஷ்வரர் ஆனதையும், தீக்கோழி, ஜேர்மன் பொயர் ஆடு வளர்ப்பதால் எவ்வளவு இலாபம் கிடைக்கும், அடுத்த வீட்டுக்காறருக்கும் தெரியாமல் இவற்றை நமது புழக்கடைக்குள் வைத்து எப்படி வளர்க்கலாம் எனவும் பார்ப்போம்)
குறிப்பு : இத்தொடரை வாசித்துவிட்டு சகோதரர் இராயகரன் (தமிழ் அரங்கம் -தமிழ் சேர்க்கிள்) போன்ற நக்கீரர்கள் நெற்றிக் கண்ணை திறந்துவிடக் கூடாது.இவர் பிரதேசவாதியோ என. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற ஒரு நப்பாசைதான். இப்போதைக்கு வடக்கு பொருதார நிலை பற்றி எழுதவோ தலையிடவோ முடியாது. கிளிங்கர் கல்லில் தொடங்கி சுருட்டுக்குப்பூசுகின்ற ‘கோடா’வரை யார் முதலிடுவது என சைனாவுக்கும்,இந்தியாவுக்கும் ஒரு கில்லி விளையாட்டு தொடங்கி முடியும் போது நான் முப்பாட்டன் ஆகிவிடுவேன். அதனால்தான் கிழக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துகின்றேன்.
கருணா என்கின்ற முரளிதரனுக்கும்,கிழக்கு மாகாண மக்களுக்கும்-3
May 24, 2009
உலகத்தில் தோன்றிய அத்தனை புரட்சிகளும்,சமூக மேம்பாடுகளும், வளர்ச்சிகளும் அப்பகுதி மக்களினதும், அவர்களது வாழ்க்கையுடன் இணைந்த தாகவுமே முன்னெடுக்கப் பட்டுள்ளது. சீரழிந்து கிடந்த சீனத்தைச் சிவப்பாக்கிய மா.ஓ.சேதுங்கின் சீனப்புரட்சியாகட்டும் முந்தா நாள் ஆட்சிக்கு வந்த நேபாளப் புரட்சியாகட்டும் மக்களையும் மக்களின் மனங்களையும் கெட்டியாக பிடித்ததனால்தான் அவர்களால் கோட்டைகளைத் தக்கவைத்துக் கொள்ளமுடிந்தது.தங்கள் மடிகளை மட்டுமே நிரப்பிக் கொண்டிருந்த “சியாங்கே சேக்” களும், “பிரேந்திராக்களும்” இப்போது நமது …….களும் துரத்தப்பட்டார்கள். துரத்தப்படுகின்றார்கள்.
எ.கிளாஜனிகோ 47ம் ஆண்டு கண்டுபிடித்த எ.கே.47 என்று சொல்கின்ற அந்த துப்பாக்கிசனியனின் ஆரம்ப கால விலை உலகசந்தையில் 42 யு.எஸ்.டொலர்தான். அந்தச்சனியனின் விலை 86க்குப் பின்னர்தான் விஸ்வரூபம் எடுத்தது.
ஆம் 345 யு.எஸ்.டொலர் வரை விலை போனது. அக்கால கட்டங்களில் ஒரு தையல் இயந்திரத்தின் ( உஷா,சிங்கர்)விலை 50 டொலர் மட்டுமே. கிட்டத்தட்ட அதே அளவு கூலியாட்கள்,அதே அளவு மூலப் பொருட்கள்,அதே அளவு உற்பத்திச் செலவில் உருவான எ.கே.47 345 யு.எஸ்.டொலர். தையல் இயந்திரம் 50 டொலர். அவர்களுக்கு 5 வீத நிகர இலாபம். இவர்களுக்கு 700வீத இலாபம். விடுவார்களா வெள்ளைத்தோலர்கள். அனைத்து தையல் இயந்திர நிறுவனங்களையும் இழுத்து மூடிவிட்டு இந்த சனியன் கம்பனிகளை திறந்து விட்டார்கள்.
இதனால்தான் இவ்வளவு வினையும்,வினோதமும் என்று சொல்வோரும் உண்டு.ஆனால் இப்படி குறுக்குப் புத்தியுடனும்,குள்ள நரித்தனத்துடனும் உழைத்ததனால்தான் இப்போது அமெரிக்காவும், யுரோப்பும் வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் 832 பில்லியண்ணா என உட்கார்ந்து கொண்டு உச்சிக் கொட்டுகின்றனர். (இங்குள்ள நிறைய அங்கவீனர்கள் நிலையங்களில் உள்ள 90 வீதமான குழந்தைகள் இந்த ஆயுத வியாபாரிகளின் பிள்ளைகளென்று ஒரு புள்ளி விபரம் சொல்கின்றது. நிறையப் பேர் கம்பனிகளை இழுத்து மூடிவிட்டு ஓப்பனேஜ் நடாத்துகின்றனர். பர மண்டலத்திலிருக்கும் பிதாவே உன் நாமமும் எங்கள் வருங்காலசந்ததிகளின் நாமமும் பரிசுத்தமடைவதாக)
எந்த விடயத்தையும் கொஞ்சம் ஆயுத பாணியில் சொன்னால்தான் டக்கென்று மண்டையில் படுகின்றது. அதனால்தான் கொஞ்சம் எ.கே.47 பற்றிய உண்மையைச் சொன்னேன். கேரளா காலிகட்டைச் சேர்ந்த அந்த நபர் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததும் தற்கொலை செய்யும் நோக்குடன் கடற்கரைக்குச் செல்கின்றார். கடற்கரையில் தற்கொலை செய்வதா ? வேண்டாமா என்ற எண்ணத்துடன் இவர் உட்கார்ந்து இருந்த போது அங்கு வந்த ஒரு அமெரிக்க உல்லாசப் பிரயாணி இவருடன் கதைத்து குசலம் விசாரித்துவிட்டு என்ன தொழில் செய்கின்றீர் எனக்கேட்க இவர் எவ்விததொழிலுமில்லை எனக்கூற அவர் 1000 டொலர் கொடுத்து இந்த தென்னம் தோட்டங்களில் கிடக்கின்ற தும்புகளை எல்லாம் சேர்த்து எனக்கு அனுப்பி வை என தனது கம்பனி விலாசமும் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.அந்த அமெரிக்கர் ஒரு தும்பு மெத்தை செய்யும் கம்பனி உரிமையாளர்.
இவர் மாதம் 1000கிலோ,2000கிலோ என அனுப்ப வியாபாரம் களை கட்டியுள்ளது. அத்துடன் கொஞ்சம் குறுக்குப் புத்தியும் வேலை செய்துள்ளது. தும்பில் தண்ணியைக் கொட்டி நிறையைக் கூட்டி அனுப்பியுள்ளார். அங்கிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.இவ்வாறு பல முறை தண்ணீரை கொட்டி அனுப்பியுள்ளார். இவர் தண்ணீரை கொட்டி அனுப்பிய பின்னர், அவ்அமெரிக்க வியாபாரி இன்னும் நிறைய தும்பு அனுப்பு எனச்சொல்லியுள்ளார். இவ்வாறு பல வருடமாக இந்த கலப்பட வியாபாரத்தை இவர் செய்துள்ளார். வருடங்கள் பல உருண்டோட( இப்போது இவர் கேரளாவில்ஒரு பெரிய எக்ஸ்போர்ட்டர்) இவரது மகன் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சென்றவர் தங்களிடமிருந்து தும்பு இறக்குமதி செய்யும் இறக்குமதியாளரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அந்த இடத்தில் தும்பு இறக்குமதி செய்யும் எந்த கம்பனியும் இல்லவாம்.
ஆனால் அங்கு அதே இடத்தில் “கனிமப்பொருள்கள்”விற்கும் கம்பனி ஒன்று இருந்துள்ளது. ஆம் இவரது தகப்பனார் தும்பில் தண்ணீரை கொட்டி அனுப்ப கடற்கரை மணலில் கலந்துள்ள ஒரு கனிமப் பொருள் அந்த தும்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளது. என்னடா தும்பில் ஏதோ பளபள என மணல் துகள்கள் ஒட்டியுள்ளதே என அமெரிக்கர் ஆய்வு கூடத்தில் பரிசோதிக்க ஆம் அது மிக மிக விலை அதிகமான ஒரு கனிமப் பொருள்.உலக சந்தையில் அதன் விலை கிலோ பல லட்டாலர். மற்ற விடயங்களை எல்லாம் நீங்களே கூட்டிக் கழித்துப் பாருங்கள். வியாபாரத்தில் நேர்மை மிக மிக முக்கியம். நாம் நேர்மை தவறினால் நமது வாடிக்கையாளரும் நமக்கு மொட்டை அடிப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இப்படியாக பல உதாரணங்களை அள்ளி விடலாம். அப்போது சிறிலங்காவில் சீமெந்துக்கு பாரிய தட்டுப்பாடு நிலவியது. கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கிராம சேவகர்,உதவி அரசாங்க அதிபர் ஆகியோரிடம் கடிதம் பெற்று கூட்டுறவு சங்கத்தில் சீமந்து பெறக்கூடிய நிலை இருந்தது. எங்களது தமிழாசிரியர் (ஏழாம்ஆண்டு) அரசு நிறுவனங்களுக்கு எவ்வாறு கடிதம் எழுதுவது என பாடம் நடாத்திவிட்டு அனைவரையும் “எனக்கு அவசரமாக வீட்டு வேலைக்கு சீமெந்து தேவை” எனக் கேட்டு உதவி அரசாங்க அதிபருக்கு மடல் எழுதச் சொன்னார்.42 மாணவ மாணவிகளும் மடல் எழுதினோம். “ஐயா எனது வீட்டுக்கு மலசல கூடம் கட்டுவதற்காக அவசரமாக 5 பக்கட் சீமெந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்”இப்படிக்கு தங்கள் உதவியை நாடும் யஹியா வாஸித் என நானும் எழுதினேன். மளார் என எனது கன்னத்தில் ஒரு அறை. அத்துடன் அந்த கொப்பியின் கட்டுரைப் பக்கத்தை அப்படியே கிழித்து வீசி என்னடா ! பிச்சை சம்பளம் கேட்டா மடல் எழுதுகின்றாய் !! அவர் ஒரு அரச உத்தியோகத்தர். நமக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர் அவரிடம் போய் என்ன உதவி கேட்பது. சீமெந்து தர வேண்டியது அவரது கடமை என்று போட்டாரே ஒரு போடு.
அன்றுடன் பாடசாலைக்கு முழுக்குப் போட்டு விட்டு இடைக்காட்டில் வாப்பாவின் பழைய இரும்புக் கடையில் தூங்கி வழிந்தேன். என்னடா ஏழாம் வகுப்பு படித்த இவர் இப்படி எழுதுகின்றாரே என யோசிக்கின்றீர்களா ! அன்று ஆசிரியர் செவிப்பறை கிழிய தந்த அடி மட்டுமல்ல முழுப் பாடசாலையுமே எங்களை சந்தை மாடு என்றுதான் அழைக்கும், ஊருக்குள்ள சோத்து மாடு என்று ஒரு செல்லப் பெயரும் உண்டு. இப்படி செக்கு மாடாக இருந்த என்னை ஒரு சர்வதேச இரும்பு வியாபாரி ஆக்கிய பெருமை முழுக்க முழுக்க நமது மூத்த குடிமகனையே (தானைத்தளபதி, பங்கர் தலைவர்) சாரும்.
ஏற்றுமதி அபிவிருத்தி திணைக்களம் (எக்ஸ்போர்ட் டெவலப்மென்ட் போர்ட் ஈ.டி.பி) கொழும்பு நவம் மாவத்தையில் இருக்கின்றது. பழவகை, கடல் பொருட்கள், மரப் பொருட்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு டிபுடி டிரக்டர் என பதினான்குக்கு மேற்பட்ட டிபுடி டிரக்டர்களுடனும் பல உயர் அதிகாரிகளுடனும் எமக்கு சேவை செய்ய என்றே காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடம் போய் கூனிக்குறுகாமல் (தங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன் என்று கும்பிடு போட வேண்டிய அவசியமில்லை என சொல்ல வந்தேன்) ஆலோசனை கேழுங்கள். நல்லவர்கள். வல்லவர்களான இவர்கள் நிச்சயம் உட்கார வைத்து ஆலோசனை தருவார்கள்.
நாம் புத்தளத்திலும், அனுராதபுரத்திலும், பிபிளையிலும் குட்டிக் குட்டி ஆடுகளை வாங்கி வளர்த்து ஆறுமாதத்தில் சொற்ப இலாபத்தில் விற்றுக் கொண்டிருக்க தெல்லிப்பழையிலும், தலவாக்கல்லவிலும். கண்டி திகனவிலும் ஆடு வளர்த்து பெரும் இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். எப்படி. இவர்கள் அவ்வப்பகுதி விவசாயத் திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் ஜேர்மனியில் இருந்து “ஜேர்மன் பொயர்”ஆடுகளைத் தருவித்து நமது
நாட்டு ஆடுகளுடன் இனப் பெருக்கம் செய்து 300 வீதம் இலாபம் பெறுகின்றார்கள். ஜேர்மன் பொயர் ஆடு ஒன்றின் விலை 50 ஆயிரத்திலிருந்து எழுபத்தைந்து ஆயிரம் ரூபா. இரண்டு ஆண் ஆடுகளை இறக்குமதி செய்து நமது பெண் ஆடுகளுடன் இணையவிட்டால் பிறக்கும் குட்டி ஆடு ஆறு மாதத்தில் மும்மடங்கு நிறையுடன் வளரும்.
அப்புறம் என்ன ! மக்கள் சேவையே மகேசன் சேவை என செய்து கொண்டு ஒரு விவசாயத் திணைக்கள அதிகாரி 2004 வரை தெல்லிப்பழையில் இருந்தார். அவரிடமும் நம்மவர்கள் பெரிய தொரு தொகையைக் கப்பமாகக் கேட்டு அவரை கனடாவுக்கு ஓரம் கட்டி விட்டனர்.இப்போது மக்கள் மொத்தமாகவே தம்பிகளை ஓரம் கட்டிவிட்டனர். இவர் போன்ற திறமையான நல்ல மனித நேயமுள்ள அதிகாரிகள் இன்னும் நம்மிடையே இருக்கின்றார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து ஜேர்மன் பொயருக்கு இப்போதே ஓடர் பண்ணுங்கள். ஜேர்மனியில் இருக்கும் நண்பர்களுக்கு போன் பண்ணி மச்சான் இந்த ஆட்டு சமாச்சாரத்தை பார் எனச் சொல்லுங்கள். ஸ்ரூடன் விஸா,ஐ.ஜீ.எஸ்.விஸா(இன்டர் நெஷனல் கிறஜூ
வேஸன் ஸ்கீம்), வேர்க் பேர்மிட், விஸிட்டிங் விஸா, அகதி விஸா எல்லாவற்றையும் தூக்கி கிடப்பில் போட்டு விட்டு “பொருளாதார மேம்பாட்டு புறஜக்ட்”பற்றி உட்கார்ந்து கொண்டு முள்ளந்தண்டு விறைக்க வெள்ளையன் யோசித்துக் கொண்டிருக்கிறான்.
கொள்ளுப்பிட்டியில் தனது வீட்டுக்குள்ளேயே ஜேர்மன் பொயர்களை வளர்த்து ஹில்டன் ஹோட்டலுக்கும்,கலதாரி மெரிடியனுக்கும் ஆட்டிறைச்சி வளங்கும் பலர் இருக்கும் போது எல்லா வளமும் உள்ள நம்மால் ஏன் முடியாது ! தீக்கோழி (ஓஸ்ரிஜ்) கூட இப்படித்தான். உலகிலேயே கால் நகம் முதல் சொண்டு (இதற்கு எனக்கு வேறு சொல் தெரியாது) வரை விலை போகக் கூடிய பொருள் இருக்கும் என்றால் அது தீக்கோழிதான். சவூதி மன்னரும் பிள்ளைகளும் போட்டுள்ள கால் செருப்பிலிருந்து உலக அழகு ராணிகள் அணிந்து வரும் மெல்லிய ஜாக்கட் வரை இந்த தீக்கோழி தோலினால் செய்தவை.
இதன் இறைச்சி கிலோ 112 யு.எஸ். டொலர். அதன் இறகு ஒவ்வொன்றும் ஒவ்வெரு விலை. தீக்கோழி கூடிய வரை புல் பூண்டுதான் சாப்பிடும்.தீக்கோழி முட்டையை கண்டி விவசாயப் பண்ணையை தொடர்பு கொண்டு சைனாவில் இருந்து இறக்குமதி செய்யலாம்.ஒரு முட்டை 15 யு.எஸ்.டொலர். ஆறு முட்டையை இறக்குமதி செய்யலாம். அந்த முட்டையை பொரிக்க வைக்கக் கூடிய இயந்திரம் 100 யு.எஸ்.டொலர் (யு.கே,கனடா,இஸ்ரேல்,சைனா). அப்புறம் என்ன தீக்கோழி ரெடி. ரொம்ப ஆசை பட்டு 100 முட்டைகளை இறக்குமதி செய்து விடாதீர்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் நான்கு அல்லது ஆறு தீக்கோழிதான் வளர்க்கலாம்.வரவு எட்டணா செலவு பத்தணா என்ற கதையெல்லாம் இங்கு கிடையாது. செலவு பத்தணா வரவு 200 அணா கதைதான்.
இதே போல்தான் கோழியும். நாம் கோழிக் குஞ்சுகளை 100 ,200 என மொத்தமாக வாங்கி 45,50 நாட்கள் வளர்த்து சிறிய இலாபத்துடன் விற்றுக் கொண்டிருக்கின்றோம். ஏன் அந்த குஞ்சுகளை நாமே உற்பத்தி செய்யக்கூடாது. முடியும். எப்படி ? இதற்காக பக்கத்துக் கடைக்குப் போய் புறய்லர் (செயற்கை)முட்டைகளைக் கொண்டு வந்து அடைகாக்க வைத்து விடாதீர்கள். இந்த முட்டைகளை கண்ணொறுவ விவசாய திணைக்களத்தில் பெறலாம்.அது சிரமமாயிற்றே என சிந்திக்கின்றீர்களா ? அப்படியானால் நீங்கள் ஒரு தடைவ இஸ்ரேல் எம்பஸி அல்லது ஸ்கண்டி நேவிய எம்பஸிகளின் கொமர்ஸியல் டிவிஷன் கதவுகளை ஒரு முறை, ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இந்த நாடுகளில்தான் இந்த முட்டைகளை இடக்கூடிய தாய்க்கோழிகள் ( பேரண்ட் சிக்) கிடைக்கும். ஒரு குஞ்சு அறுபது ரூபா என 100 குஞ்சுகளை இறக்குமதி செய்யலாம். இக்குஞ்சுகளை ஆறு மாதம் கண்ணின் இமை காப்பது போல் காக்க வேண்டும்.
அப்புறம் இரண்டு வருடத்துக்கு டெய்லி 100 முட்டை. 70 டொலர் கொடுத்து “கோழி குஞ்சு பொரிக்கும் இயந்திரம்” மூன்றோ நான்கோ வாங்கி வைத்துக் கொண்டால் நீங்கள் ஒரு பார்ம் ஓணர். கைமேல் இலாபம். உங்கள் கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களுக்கும் நீங்கள் ஒருநாள் (ஒன்டே ஓல்ட் சிக்கன்) குஞ்சு விற்கலாம். யுரோப்பில் சிக்கன் சொப்பில் 12 மணிநேரம் கால்வலிக்க ஒரு மாதம் உழைக்கும் 1200 டொலரை ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து கொண்டே உழைக்கலாம்.
இங்கு ஒரு பாரிய சங்கடம் இருக்கின்றது. மிருகவதை தடை சட்டம், ஜீவ காருண்யம் (பௌத்தம்) என தடைகள் வரலாம். சீதுவஇல் உள்ள “லங்கன் லிபியன் பார்ம்” கம்பளையில் உள்ள “ஸட்ணா போள்றி பார்ம்” எல்லாவற்றுக்கும் யார் டிரக்டர்ஸ், உரிமையாளர் என விசாரியுங்கள். நமது ஜனாதிபதி கூட விவசாய அமைச்சராக இருக்கும் போது தீக்கோழி பார்ம் திறக்க புத்தளத்தில் வைத்து ஒரு பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தும் போது நானும் அருகில் இருந்தேன் என்பதையும் (2003) தாழ்மையாக சொல்லிக்கொள்கின்றேன். ஆகவே தட்டுங்கள் எல்லாமே திறக்கப்படும். என்ன இது எல்லாமே மிருகமாகவே இருக்கின்றது என யோசிக்கின்றீர்களா ? 15 வருடமாக மிருக ஆட்சியின் கீழ் இருந்ததன் விழைவோ என்னவோ. அரண்டவன் கண்ணுக்கு எல்லாமே அதுவாகத்தான் இருக்கின்றது.
போகப் போக மீன், அட்டை, மரம், பழம், மண், தொழில் நுட்பம், மூளை என எழுதி பழையவைகளை மறப்போம். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எல்லாம் அழிக்க வேண்டியதில்லை. தனித் தனியே முயற்சித்தாலே போதும்.
கருணா என்கின்ற முரளிதரனுக்கும்,கிழக்கு மாகாண மக்களுக்கும்-4
May 24, 2009
சிறிலங்காவில் நடக்கும் போர் தமிழீழத்துக்கான,எமது உரிமையைப் பெறுவதற்கான போர் என்று சொல்லிப் புறப்பட்டவர்கள் எல்லாம் சொத்துப் பத்து சேர்த்து, சுவீமிங்பூள் கட்டி ஆர்ப்பரிக்கும் போது எல்லாவற்றையும் இழந்து விட்ட நாம் ஏன் சிறிது முயற்சிக்கக் கூடாது. அது வரும். இல்லை இல்லை இது வரும் என எவ்வளவு காலம் தான் பொறுப்பது. இனி நமது வயிற்றை நாமே பார்த்துக் கொள்வோம். பொறுத்தார் அரசாள்வார்,பொங்கினார் புக்க தின்பார் என்று திருக்கோயில் தீர்த்தக்களரியில் நண்பர்கள் சொல்வார்கள்.
அம்மாக்களும், அக்காக்களும் புது பானைக்குள் பச்சரிசி போட்டு பொங்க ‘அக்கோ கெதியா தாக்கா பசிக்கிது ‘என நண்பர்கள் கெஞ்ச ‘பொறுடா மச்சான் பொறுடா’ என்று அமைதிப்படுத்தி எல்லோரும் ஒன்றாக இருந்து தீமிதித்த காலமது. ஆயுதம் அற்ற அற்புதமான அந்தக் காலம். நாகமணியர்ர வீட்டுக் கோழியைத் திருடி ‘பள்ளிக்கு கொண்டு போய் அறுத்து’ நாகமணியர்ர மகனையும் கூப்பிட்டு கோழிக்கறி சாப்பிட்ட பொற்காலம்.
அடுத்த நாள் காலையில் கூட்டுக்குள்ள கோழிய காணாம ஊர்பட்ட சாமியெல்லாம் கூப்பிட்டு நாகமணியர்ர பொண்டாட்டி திட்டும் போது அவர்ர இளைய மகள் எங்களுக்கு நன்னாரி பிளேன்டி குசினிக்குள்ள பரிமாறுவார். நாங்கள் கொடுப்புக்குள்ளால சிரிப்பம். நண்பருக்கு விடயம் விளங்கி விடும். நேற்றய கோழிக்கறி நம்ம கோழிதான் என்ற விடயம். இரண்டு நாளில் அக்காவிடம் விடயத்தை நாசுக்காக சொல்லி,அப்புறம் அக்கா அம்மாவிடம் சொல்லி விடயம். பூசி மெழுகப்படும். ஒரு பதினைந்து நாட்களுக்கு அந்தப் பக்கமே போக மாட்டோம்.அப்புறம் நாகமணியர்ர பொண்டாட்டி எங்கள ரோட்டுல தற்செயலாக கண்டு என்ன வீட்டுப் பக்கம் காணல. மூத்த மகள்ர புருஷன் கோமாரியில இருந்து நல்ல கறுத்த கொழும்பான் மாம்பழம் கொண்டு வந்திருக்கார் போய் சாப்பிடுங்கோ என்ற பிறகுதான் அந்தப் பக்கமே போவோம்.
இப்படி ஒரு அன்னியோன்ய ஆயுதமற்ற உலகு. ஆயுதச் சனியனை களைந்த அந்த தெய்வங்களுக்கு முதலில் ஒரு சல்யூட் அடிப்போம். தெய்வங்களா இன்னும் எங்காவது தலைமைக்குத் தெரியாமல் அல்லது தவறுதலாக ஆங்காங்கே கிடந்தால் பழைய இரும்புக் கடைக் காறர்களுக்கு கொடுத்து விடுங்கள். பெரும் தலையே அந்த சனியனைக் கை விட்டு விட்டு உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி என புறப்பட்டு விட்டது. வத்தளை ( கொழும்பு ரோட்)யிலும், சீதுவையிலும் நிறைய பழைய இரும்பை வாங்கி உருக்கும் கம்பனிகள் இருக்கின்றன.பிளீஸ். விற்றுவிட்டு செட்டியர்தெரு தொங்கலில், கோயிலையும் தாண்டியவுடன் பூபாலசிங்கம் புத்தக சாலை இருக்கிறது. அங்குபோய் நிறைய முன்னேறுவதற்கான புத்தகங்களை வாங்குங்கள். ஆனந்த விகடன் இப்போதைக்கு வேண்டாம். விரைவில் குருநாகலையில் நமது அமைச்சர் ஒருவரின் மச்சான் இரும்பாலை ஒன்று திறக்க இருக்கின்றார். அவருக்காவது அந்த இரும்புகளை விற்று விடுங்கள்.
உல்லை, பொத்துவில், திருக்கோயில், தம்பிலுவில், சின்னமுகத்துவாரம், பாலமுனை, ஒலுவில் தொடங்கி மூதுர், திருகோணமலை வரை கடலை எல்லையாக வைத்துக் கொண்டு தாய்லாந்திலிருந்து வரும் டின் மீன் (செமன் டின்)ஐத்தான் சாப்பிடுவோம் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. நீர்கொழும்பு (மீகமுவ) மீனுக்குப் பெயர் போன ஊர். கொழும்பில் உள்ள புதுப் பணக்காறர்களெல்லாம் காலையில் ஐந்து மணிக்கு பஜிரோவை எடுத்துக்கொண்டு நீர்கொழும்பு போய் கடற்கரையில் கியுவில் நின்று சுடச்சுட (இப்போதுதான் பிடித்து வந்தது ) மீன் வாங்கி வந்து காலையில் ஒரு மீன் சொதி, பகலுக்கு ஒரு மீன் டெவல், இரவுக்கு நாலு நண்பரையும் கூட்டி வந்து மீன் பொரியலுடன் ஒரு தண்ணிப் பார்ட்டியும் வைப்பர். நாங்களெல்லாம் மாழுகடையில் மீன் வாங்குவதில்லை. அங்கு பழைய மீன்தான் விற்கின்றார்கள்.
65 அடி நீளம் 21 அடி அகலமான ‘ரோளர்’(பாரிய போட்)ஐ நேற்றிரவு கடலுக்குள் தள்ளி இப்போது அதிகாலையில் அள்ளி வந்த மீன்களா இவை. இல்லை. இந்த ரோளர்களின் விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா. இது ஒரு குட்டிக்கப்பல். இதற்குள் டி.வி,சற்லைட்(வழிகாட்டி), எட்டுப்பேர் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டு போகக் கூடிய வசதியுடன், 15 தொன் மீன், 1000கிலோ ஐஸ், 15 பெறள் டீசல் என்பவற்றையும் சுமக்கக்கூடிய பலமும் உண்டு. நீர்கொழும்பில் இவ்வாறு பல ரோளர்கள் உண்டு. இந்த ரோளரை எடுத்துக்கொண்டு அந்திசாயும் வேளைகளில் கடலுக்குப் புறப்படுவர். ஒரு மைல் இரு மைல் அல்ல 1000 அல்லது 1200 மைல் புறப்படுவர். 14 நாட்கள் பிரயாணம். குட்டிக்குட்டி தீவுகள் தெரியும். இந்த தீவுகளை அமெரிக்கன் தூபத் (அமெரிக்க தீவுகள்)என்று இவர்கள் சொல்வார்கள். அங்கு ரோளரை நிறுத்தி ஏழு நாட்கள் மீன்பிடிப்பார்கள். அறுக்குளா, கெலவல்லு, கட்டாப்பாறை என இங்கு கிடைக்கும். அப்புறம் 14 நாட்களில் நீர் கொழும்பு திரும்புவார்கள். மொத்தம் 35 நாட்கள் பயணம். மீன் பிடித்து 21 நாட்கள். இதைத்தான்
நம்மவர் சுடச்சுட மீன் என சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த ரோளரை 10 அல்லது 15 பேர் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து வங்கியில் கடனாகப் பெறலாம். ஒரு வருடத்தில் ரோளர் கடனை அடைத்து விடலாம். தாய்லாந்துக்கு நாம் செமன் டின் வழங்கலாம். குட்டிக் கடல்பரப்பைக் கொண்ட குருநகரில் மீன் பிடிவலை பெக்டரி அமைக்க முடியுமானால் பாரிய கடல் பரப்பைக் கொண்ட, இனி தொடர்ந்து அமைதியாக இருக்கப் போகின்ற கிழக்கில் ஏன் ஒரு மீன் பிடி வலை பெக்டரி அமைக்கக் கூடாது என யோசிக்கலாம். கல்முனை, திருகோணமலை பகுதி கடலட்டைகளுக்கும், களப்புகளில் பிடிக்கப்படும் விலாங்கு மீனுக்கும் சிங்கப்பூரிலும், சைனாவிலும் ஏக கிராக்கி. சிங்கப்பூர்வாசி ஒருவர் அனுராதபுர குளங்களிலிருந்து குட்டி விலாங்கு மீன்களை வாங்கி வந்து, வத்தளையில் நீர் தொட்டிகளில் வளர்த்து மொத்தமாக இலாபம் உழைத்துக் கொண்டிருக்கின்றார். நாம் வாழை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் விபரம் தெரியாமல் இவ்வளவு காலமும் காலத்தை கடத்திவிட்டோம். நம்ம பகுதிகளில் விலாங்கு மீன் கிடைப்பது கொஞ்சம் கடினம்.
அனுராதபுரத்துக்கு அருகில் முன்னாள் ராஜாக்கள் கட்டிய குட்டிக் குட்டிக்குளங்கள் இருக்கின்றன. இங்கு சென்று குட்டி விலாங்கு மீன்களை தண்ணீர் குடங்களில் கொண்டு வரலாம். ஓரு குடத்தில் ஒரு அடி நீளமான ஆறு விலாங்கு மீன்களை கொண்டு வரலாம். நாலடி அகல ஆறடி நீள ஐந்தடி உயர நீர்த் தொட்டிகளில் 100 விலாங்கு மீன்கள் வளர்க்கலாம். சிங்கப்பூர்,மலேசியாவுக்கு வீட்டில் இருந்து கொண்டே இதை எப்படி எக்ஸ் போர்ட் பண்ணுவதென எக்ஸ் போர்ட் டெவலெப்மென்ட் போர்ட் இல் ஆலோசனையும் பெறலாம். சில சமயம் கொழும்பில் கோள் றோட்டில் கடை பரப்பியுள்ள சைனீஸ் ரெஸ்ட்ரூரன்ட் காறர்களும் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுவார்கள்.
தொண்டமான் தொண்டமான் என்று ஒரு அமைச்சர் மலையகத்தில் இருந்தார். இப்போதைய ஆறுமுகம் தொண்டைமானின் பெரியப்பா. அந்த மனிதர் மலையக மக்களுக்கு சில நல்ல வேலைகளும் செய்திருந்தார். இவர் கால் நடை அபிவருத்தி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து நல்ல கொழுத்த மாடுகளை இறக்கு மதி செய்து தோட்டத்து தொரமாருக்கும், கங்காணிமாருக்கும், சுப்ரீன்டன்களுக்கும் ஆளுக்கு இரண்டு, நான்கு மாடு என வழங்கி இருந்தார். இந்த மாடுகள் காலையில் இருபது லிட்டர்,மாலையில் இருபது லிட்டர் பால் கறக்கும். காலையில் எட்டு மணிக்கும், மாலையில் ஐந்து மணிக்கும் பால் சேகரிக்கும் லொறி டாண் என வந்து ஒவ்வொரு சந்தியிலும் நிற்கும்.
சுத்தமான பால். கலப்படம் கிடையாது. மீட்டர் போட்டு பார்ப்பார்கள். ஒரு சொட்டு தண்ணி கூட அந்த மலையக சகோதரர்கள் கலக்க மாட்டார்கள். கையில காசு. வாயில தோச. மலையக மக்கள் இப்போது ரொம்பவிபரமாக இருக்கின்றார்கள். நுவரேலியாவுக்கு காணிவேல் பார்க்க போறதையும், ஹக்கலயில் கேளிக்கை செய்வதையும் விட்டு விட்டு அப்படியே ஒரு நடை தலவாக்கொல்லக்கும், நாணு ஓயாவுக்கும் போய் விரிந்து பரந்த பச்சை தேயிலைகளுக்
கிடையே ஆங்காங்கே கொழுக்.மொழுக் எனத் தென்படும் இந்த மாடுகளைப் பற்றி விபரங்கள் சேகரியுங்கள். போக முடியவில்லையா. எக்ரிகல்ச்சர் படிப்பிக்கற வாத்திமார்களைப் பிடியுங்கோ,( சில சமயம் ஏட்டுச் சுரக்காயும் கறிக்குதவும்)அவர்களுடாக விடயங்களைக் கறந்து, மிருக வைத்திரிடம் ஆலோசனை பெற்று பிறகு 80 ஆயிரம் ரூபா கொடுத்து இரண்டு மாடுகளை வாங்கி பால் கறவுங்கோ. அது சரி புல்லுக்கு என்ன செய்வது ? இரண்டு மாடு வளர்ப்பதென்றால் சமாளித்து விடலாம்.ஒரு முப்பது மாட்டை வாங்கி வளர்ப்பவர்களுக்குத்தான் அந்தப் பிரச்சனை வரும். அதையும் சமாளிக்கலாம்.எப்படி ? இந்த மாடுகள் காடுகரை எல்லாம் உலாவி புல் மேயும் மாடுகள் அல்ல. நின்ற இடத்திலேயே ஆறுமாதம் உசும்பாமல் நிற்கும். நேரத்துக்கு புல் போட்டால் போதும். ஒரு நாற்பது அடி நிள 20 அடி அகல ரூமில் 20 மாடுகளை நிறுத்தலாம். புல் விதைகளும்,புல் வளர்க்கும் கன்டய்னர்களும் ( 20 அடி நீளம் 10 அடி அகலம் 12 அடி உயரம் ) விலையாக வாங்கலாம்.
இந்த புல் வளர்க்கும் கன்டய்னர்க ளுக்குள் 8 அடி நீள 4 அடி அகல 5 அங்குல உயரமான 24 தட்டுக்களை 10 அங்குல இடைவெளியில் பொருத்தக் கூடிய வசதி உண்டு. தலையை சற்றுகின்றதா ? (ஒரு தரம் வீட்டுக்குள்ள போய் பிறிஜ்ஜை திறந்து பாருங்க எல்லாம் விபரமாகப் புரியும்) புல் விதையை தூவி விட்டு நீரையும் விட்டு கன்டய்னரை மூடி விட்டு சில நாட்களில் திறந்தால் ஓன்பது அங்குல புல் ரெடி.
இங்க நாங்க ஆறுமாதத்துக்கு முன் செத்த கோழி,ஒண்ணரை வருஷத்துக்கு முன் இறந்த ஆடு ,நாறிப் புளுத்த மீன்களைத்தான் ‘புதுசு மச்சான் புதுசு.இன்னும் எக்ஸ்பயறி ஆகல’ என்று சொல்லி எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம். நீங்களாவது பிறஷ் ஆக சாப்பிட்டு ஊரையும் கொஞ்சம் முன்னேற்றுங்கோ.உருப்படியாக ஏதாவது செய்த மாதிரி இருக்கும். யாருடா இவன் முன்னர் இடைக்காட்டில பழைய இரும்பு வாங்கின கதை சொன்னார்.இப்போ கோமாரியில் தீமிதித்த கதை சொல்லுகின்றார் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்குமோ என தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.
ஓன்றுமே விளையுதில்லையே என யோசிக்காதீர்கள். ஒன்றுமே விளையாத நிலத்தில் கொத்தமல்லி நன்றாக விளையும். இப்போதே ஒரு பிடி கொத்த மல்லியை எடுத்து உரலில் போட்டு இரண்டாக உடைத்துவிட்டு வீட்டு முற்றத்தில் போட்டு மண்வெட்டியால் கொத்தி விடுங்கள் மூன்று மாதத்தில் நிச்சயாக 400 கிராம் கொத்த மல்லி கிடைக்கும். அப்புறம் என்னவளம் இல்லை இந்த திரு நாட்டில் என்று பாட்டுப் பாடலாம்.
எனது இக்கட்டுரைகளை வாசித்துவிட்டு இணையத்தளங்களுக்கு நன்றி தெரிவித்து நகல் அனுப்பிய
அனைவருக்கும் நன்றி. ( தொடருவேன்…)
கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும்-5
May 24, 2009
மட்டக்களப்பு ராஜேஸ்வரா தியேட்டருக்கு முன்னால் அல்லது காந்தி சிலைக்கு அருகில் பிற்பகல் ஐந்து மணிக்கு அண்ணாக்கள் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், ஈழ வேந்தன், ஐயா ராசதுரை அக்கா மங்கையர்க்கரசி என மேடை ஏறுவார்கள். எங்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். நீங்களெல்லாம் தெகிவளை சூ (மிருகக்காட்சி சாலை ) க்கு போயிருப்பீர்கள். இஸட் டபள்ஓ சூ.இங்க மிருகங்களை கூண்டுல அடைச்சிருப்பாங்க. சிங்கத்துக்கு ஒரு கூடிருக்கும். அதற்குள்ள பாராங்கல் மாதிரி ஒன்று செய்திருப்பார்கள். இது சிமெந்தால் செய்யப்பட்டிருக்கும். இது உண்மையான பாறாங்கல் அல்ல. அது மாதிரி. ஆனால் சிங்கம் இது உண்மையான பாறாங்கல் என நினைத்து அதில் தூங்கிக் கொண்டிருக்கும்.
அது போல் புலிக்கு ஒரு குகை சிமெந்தால் செய்திருப்பார்கள். ஆனால் புலியும் இது உண்மையான குகைதான் என நினைத்துக்கொண்டு அந்த குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த மாதிரி சூ தந்திரம் எங்களுக்கு தேவையில்லை. அதாவது மாதிரி சுதந்திரம் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்குத்தேவை சுதந்திரம். காசிஆனந்தன் அண்ணா மீசையை லேசா நீவி விட்டுக் கொண்டு சொல்ல மங்கையர்க்கரசி அக்கா ஒரு சிரிப்பு சிரிப்பா.
பிறகென்ன மொத்த வோட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத்தான். இப்படி உசுப்பேத்தி மொத்த தமிழனையும் கூண்டுக்குள்ள அடைத்துவிட்டு காசிஆனந்தன் அண்ணா இந்தியாவிலயும், அக்கா மூத்த மகனோட லண்டனிலயும் ரொம்ப ரொம்ப சுதந்திரமா இருக்கறாங்க. இப்ப காசி அண்ணா புதுசா அறிக்கை விடறார். நீங்க மொத்தமாக சாவுங்க. நாங்க உலகுக்கு அறிக்கை விடுறோம் என்று.
ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக் காகாசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன். நாங்க இங்க வியர்வைசிந்தி நாற்றுநட்டு பயிர் செய்வோம். அது விளைந்தவுடன் பிரிட்டிஷ் தொரமார், நாங்கள் சொல்லும் விலைக்குத்தான் நீங்கள் விற்க வேண்டும் என அந்தக்காலத்தில் சேதி அனுப்புவார்கள். அதுமாதிரி இருக்குது கதை. வெள்ளரிக்கா என்றதும் காரைதீவு புட்டு வெள்ளரிப் பழம்தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. இந்த வகை வெள்ளரிப்பழம் உலகில் எங்கும் கிடையாது.
இல்லையே கண்டிக்குப் போகின்ற வழியில உன்னஸ்கிரியவிலும், மொனறாகலையிலும் கிடைக்குதே என்கின்றீர்களா. நம்ம காரைதீவுப் பொருள் குருத்து.அது முத்தின களட்டித் தேங்காய். இதன் விதைகளை கனடா மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பலாம். அரேபிய மண்ணில் இது நன்கு வளரும்.
மாதிரிப் பாறாங்கல்லை விட உண்மையான பாறாங்கற்களும், மலைகளும் நிறைந்த பகுதி கிழக்குமாகாணம். குடுமிமலையில் தொடங்கி அப்படியே பாணமைக்குள்ளால வந்து உல்லையில ஒரு தயிர்வடையும் இஞ்சி பிளேன்டியும் அடித்துவிட்டு பொத்துவில் ஊடாக சியம்பலாந்தொட்ட போய், அங்கு சுடச்சுட சோளம் வாங்கி தின்றுவிட்டு அப்படியே வலதுகைப்பக்கம் பார்த்துக்கொண்டு வரும் போது மகாஓயா சந்தி வந்து முட்டும். அங்க செக்பொயின்ட்டுல இறங்கி செக் பண்ணுவதற்கிடையில் அப்படியே முன்னுக்குப் பார்தாற்போல் நற்பிட்டிமுனையை ஊடறுக்குற மாதிரி ஒரு நோட்டமிடுங்கள். இப்ப செக்பண்ணி முடித்திரிப்பீர்கள். முன்னுக்கு நிற்கின்ற மாம்பழ வியாபாரியிடம் ஒரு மாம்பழத்தை வாங்கி வெட்டி உப்பும் மிளகாய்த்துளும் போட்டு தின்று கொண்டு அப்படியே வண்டியை உன்னிச்சை நோக்கி விடுங்கள். இடையில அந்த வாய்க்கல் இந்த வாய்க்கால், துருசுகள். குட்டிக்குட்டி சிங்கள கிராமங்கள், சேத்துத் தண்ணியில சுதந்திரமாக குளிக்கும் குட்டிப் பையன்கள் என பசுமை கொஞ்சும். அவை எல்லாம் தூக்கி வீசிவிட்டு வந்த வேலையை மட்டும் கவனிக்க வேண்டும். இப்போது உன்னிச்சை சந்தியில நிக்கிறீர்கள். இருட்டாகிவிட்டது. வீட்டுக்கு போயிடுங்கோ. அப்புறம் வெருகல், கிண்ணியா. மூதூர் எனச் சென்று திருகோணமலையானைத் தரிசிக்கலாம்.
இப்ப வீட்டுல உட்கார்ந்த கொண்டு கற்பனைக்குதிரையைத் தட்டி விடுங்கோ. எத்தனை வானுயர்ந்த மலைகள். அவ்வளவு மலைகளையும் உடைத்து கருங்கல் எடுத்தால் முழு ஆசியாவுக்குமே கருங்கல் விற்கலாம். கிழக்கில் உருவாகப் போகும் அனைத்து கட்டிடங்களுக்கும் கருங்கல் விற்கின்ற ஐடியா இருந்தால் ஜேர்மனியில் இருக்கும் ஓட்டமாவடி நண்பர்கள் மட்டுமல்ல அனைவரும் அரச அனுமதியுடன் மலைகளை 99 வருட குத்தகைக்கு எடுக்கலாம். அது மட்டுமல்ல பல மலைகளில் கிறனேட் கற்கள் வெட்டக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. இன்று உலகிலுள்ள அனைத்து பாரிய கட்டிடங்களும் இந்த இந்திய கிறனேட் கற்களால் ஜொலிக்கின்றன. சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் கதையெல்லாம் இங்கு கிடையாது. சுமை கூலி கால்பணம் சுண்டைக்காய் பலாப்பழம் கதைதான்.
இதை மஸ்கட் மாதிரி வெட்டுவதற்குரிய இயந்திரங்கள் இந்தியாவில் ‘கும்மிடிப்பூண்டி இன்டஸ்ரியல் சோன்’இலும் . பஞ்சாப் லுதியானாவிலும் குறைந்த விலையில் பெறலாம். இல்லை இந்தியப் பொருட்கள் வலுவாக இருக்காதே என யோசிக்கின்றீர்களா ! கொழும்பு ஹில்டன் ஹோட்டல் இரண்டாம் மாடியில் பல வருடமாக சேவை செய்துகொண்டிருக்கும் ‘யுரோப்பியன் சேம்பர் ஒப் கொமர்ஸ்’போய் எந்த நாட்டுல ‘சீப் அண்ட் பெஸ்ட் புறடக்கட்’ கிடைக்கும் என தைரியமாக கேழுங்கள். அவர்கள் பெல்ஜியத்தையும், ஸ்பெயினையும் கைகாட்டுவார்கள் என நினைக்கின்றேன். அதற்குமுதல் ஒரு விடயத்தை மறந்து விட்டேன்.
மலைகளை குத்தகைக்கு எடுக்க வேண்டுமானால் இப்போது ரொம்ப பிஸியாக இருக்கும் உங்கள் மந்திரிகள். எம்பிக்கள், உறுப்பினர்களை விரட்டிப் பிடித்து உரிமைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நேற்று நீங்கள் சியம்பலாந்தொட்ட இருந்து மகா ஓயா சந்தி வரும்போது நிறைய இடங்களில் சோளம் விற்றுக் கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். நீங்கள் பிஞ்சு சோளத்தைத்தான் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். முற்றிய சோளனை என்னசெய்வார்கள். அந்த முற்றிய சோளனை கொழும்பு வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றார்கள். மொறோக்கோ காறனுக்கு அது பகல் உணவு. அதற்கப்புறம் பழுதடைந்த, எதற்குமே லாயக்கில்லாத சோளனை என்ன செய்வார்கள். குருநாகலையைச் சேர்ந்தவரும் பொலன்னறுவவில் கோழித்தீன் தயாரிக்கும் பெக்டரி வைத்துள்ளவருமான ஒருவர் வாரத்துக்கொருதரம் வந்து அவைகளை பணம் கொடுத்து வாங்கிச் செல்வார்.
இந்தியாவில் மெட்ராசில் உள்ள அண்ணா நகரில் கோழித்தீன். மாட்டுத்தீவனம், ஆட்டுத் தீவனம் தயாரிக்கக் கூடிய இயந்திரங்களை தயாரிக்கும் பல நுறு கம்பனிகள் உண்டு. 20 ஆயிரம் இருந்து 40 ஆயிரம் இந்திய ரூபா பெறுமதியான சிறிய இயந்திரத்தில் இருந்து 20 லட்ச ரூபா பெறுமதியான பாரிய இயந்திரங்கள்வரை இங்கு உண்டு. பழைய சோளம், மீன் கழிவு, குறிப்பாக நெத்தலி, போன்றவைகளைக் கொண்டு இத்தீவனங்களை தயாரிக்கலாம். நமது அயல் வீட்டுக்காறர்கள் வாங்கிவரும் புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு என்பன இவரது பெக்டரியில் தயாரிக்கப்படுபவையே. ஒரு இயந்திரத்தின் மூலமே மூன்றுவகையான தீவனங்களையும் தயாரிக்கலாம்.
நாட்டு வைத்தியத்துக்கு பெயர்போன கிராமங்கள் கிழக்கு மாகாணத்திலேயே இருக்கின்றன. ஆனால் கடந்த கால யுத்தத்தினால் அனைத்துமே குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன. ஆனால் இப்போதும் காலம் கடந்து விடவில்லை. குப்பைகளைக் கிளறலாம். நிறைய குண்டுமணிகள் கிடைக்கும். உகந்தை முருகன் கோயில் முதல் பாணமை குடும்பிமலை வரை மூலிகைத் காடுகள் செறிந்த பகுதி அது. கொழும்பில் இருந்து 30 மைல் தொலைவில் ஹொரணையில் இருக்கும் குட்டிக்குட்டி யூனானி. ஆயுர்வேத மருந்துக் கம்பனிக்காறர்கள் எல்லாம் ஒரு காலத்தில் குடும்பிமலைக்கு வாரத்துக்கொரு முறை வண்டில் கட்டிக் கொண்டுவந்து மூலிகை வேர்களை கொண்டு சென்றார்கள். இங்கிருந்து கொண்டு சென்ற மூலிகைகள்தான் கேகல்லவிற்கும், மாவனல்லையிற்கும் இடையில் ஆறு ஏக்கர் மூலிகைத்தோட்டமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கின்றது.
1985 இற்கு முன் குடும்பிமலை பகுதியில் காட்டுக்குள் நுழையும் போது வேப்பிலை வாசமும். கற்றாளை வாசனையும்தான் வரும். குடும்பிமலை ஒரு குட்டி ஹிமாச்சலா (இமயமலைப் பிரதேசம்) போல் இருக்கும். குட்டிக் குட்டி ஹாமுதுறுக்கள் (புத்த பிட்சுகள்). சமஸ்கிரதம், திருக்குர் ஆன், ஆரியம், சமணம், பௌத்தம் என படித்த முற்றும் துறந்த சிங்கள முனிவர்கள் என சாந்த பூமியாக இருந்தது. சின்னச் சின்ன குகைகள். மன்னர் காலத்து யானைத்தந்தங்கள், பழைய ஞானிகளின் எலும்புக் கூடுகள், மூலிகை மருந்துகள் தயாரிக்கக் கூடிய மர இயந்திரங்கள், விளாம்பழம், பாலைப் பழம், மாம்பழம், மாதுளம் பழச்சோலை என ஒரு குட்டிப் பழமுதிர்ச்சோலை. வேண்டாம் அழுகை வருகின்றது.
எங்களுக்கு பல நாள் சுத்தமான தேனில் விழாம்பழத்தை பிசைந்து தந்த குட்டிப் பிட்சு தலை வேறு முண்டம் வேறாக…வேண்டாம்…வேண்டாம். இனி நல்லதை நினைப்போம்.
இங்கு உள்ள பாரிய காடுகளில் வானுயர்ந்த எதற்குமே உதவாத மரங்கள் இருக்கின்றன. இந்தமரங்களை விட்டு விட்டு மற்ற மரங்களை எல்லாம் மர வியாபாரிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒன்றுக்குமுதவாத மரத்தை அப்பகுதி மக்கள் வெட்டிவந்து விறகுக்கு பயன்படுத்துவார்கள். இதனால் இதை இவர்கள் விறகுமரம் என்பர். ஆனால் இது சாதாரண மரமல்ல.உலகிகேயே விலை மதிக்க முடியாத ‘ஒஊத்’என்று அரபியர்களால் சொல்லப்படுகின்ற ஒரு வகை மூலிகை மரம்.இந்த மரம் கிட்டத்தட்ட 12அடி சுற்று வட்டம் கொண்ட 40 அல்லது 60 அடி உயரமானது.
இந்த மரத்தை வெட்டிப் பிளந்தால் (சிறு சிறு துண்டாக வெட்ட வேண்டும்)ஆங்காங்கே ஒரு அங்குல நீளம் தொடக்கம் 12 அங்குல நீளம் வரை கன்னம் கறுப்பாகத் தென்படும். அதை கொத்தி எடுக்க வேண்டும். ஒரு மரத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ ஒஊத் எடுக்கலாம். சவூதி அரேபியாவில் இதன் விலை கிலோ 12ஆயிரம் ரியால் முதல் 70 ஆயிரம் ரியால் (ஒரு ரியால் 25 ரூபா).இதை எரித்தால் உருகி எரியும். வாசனை பத்துப்பட்டிக்கு மணக்கும்.. அதனால் இதை விபரம் புரியாத சிங்கள் மக்கள் சாம்புறாணி மரம் (சாம்பறாணி கஸ்)என்பர். குடும்பிமலைக் காட்டுக்குள்ள அப்போ ஒரு காலத்தில ஆயுதம் பிடித்த அன்பர்களே. புறப்படுங்கள்.நமது மொத்த பொருளாதாரமும் அங்கிருக்கிறது.
குடும்பிமலையைச் சுற்றி பாரிய மூலிகைத் தோட்டங்கள் அமைக்கலாமா என சிந்திப்போம். என்ன சிந்திப்பது. இப்போதே அரசியல்,அபிவிருத்தி சம்பந்தமாக பேசுபவர்களின் கதவுகளைத் தட்டுங்கள். ஒரு வருடத்தில் 5000 பேருக்கு வேலை வழங்கக் கூடிய சக்தி உகந்தை முருகனுக்கும்,குடும்பிமலையானுக்கும் உண்டு. இல்லை நாங்கள் பிட்ஷா கடையும், சிப்சுக்கடையும் தான் திறக்கிற திட்டம் வைத்திருக்கிறோம் என்றால் இப்பொழுதே சுகசெவன, அப்பலோ ஹொஸ்பிற்றல் காறர்களுக்கு எக்ஸ்ட்றா சேவிங்குல கொத்தாக பணம் போட்டு வையுங்கோ. நம்மிடம் திருடிய மூலிகையைத்தான் அவன் சேலைன் போத்தலுக்குள்ள போட்டு குத்துவான். (அடுத்த வாரம் சந்திப்போம். தொடர்ந்து எழுதுமாறு இணையத்தளங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ள அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றிகள். )
கருணா என்கிற முரளிதரனுக்கும்,கிழக்கு மாகாண மக்களுக்கும்-6
May 24, 2009
சந்தேகம், சந்தேகம். நிறைய சந்தேகம். வெரிகுட். இந்த சந்தேகம் பல வருடங்களுக்கு முன்னால் நமக்கு வந்திருக்க வேண்டும். 1948ல் சுதந்திரம் வாங்கும் போது. இந்த சுதந்திரம் உடரட்ட சிங்களத்துக்கு மட்டுமா. இல்லை பஹல ரட்ட தமிழனும் இதில் குளிர்காயலாமா என வெள்ளையனிடம் கேட்டிருக்க வேண்டும் ,1971 சிறிலங்கா குடியரசு ஆகும் போது.
அம்மா, தாயே வெள்ளையன்ட இலச்சினைக்குள்ள அடங்காத தனி சோஷலிச குடியரசுக்குள்ள இந்த வட கிழக்கும் தண்ணி குடிக்கலாமா. இல்லை தண்ணி காட்டுவீர்களா என கேட்டிருக்க வேண்டும். எம்.எஸ். காரியப்பர் சேனநாயக்கா சமுத்திரம் கட்டும் போது. கருப்பு குஞ்சம் கட்டிய சிவப்பு துருக்கி தொப்பி போட்ட காக்கா. இந்த அணைக்கட்டு மொத்த கிழக்கு மாகாணத்துக்கும் ஆப்பா இல்லை இது நீங்க சிங்களத்துக்கு போடுற சோப்பா என கேட்டிருக்க வேண்டும்.
தேவநாயகத்துக்கு மந்திரி போஸ்ட் கொடுக்கும் போது. ஐயா. வெள்ளை கோட் போடும் கருப்பு ராசாவே நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குமாங்கே பொசியுமாம் என்று சிங்களம் சொல்லுகின்றதே. பொசிய வைப்பீர்களா என கேட்டிருக்க வேண்டும். எல்லாம் போகட்டும் கழுத இப்போவும் கிழக்கு காட்டுக்குள்ள இருந்து ஆங்காங்கே கொல்லும் புலிக் குஞ்சுகளே எதற்கு ராசா எதற்கு என கேட்டோமா அல்லது கேட்கின்றோமா. ஐயோ அது பெரிய இடம் கேட்க முடியாது. இவர் சாதாரண நபர்தானே ஒரு மண்ணும் பண்ண மாட்டார் என ஆயிரம் கேள்விகள், பதினாறாயிரத்தி சொச்சம் சந்தேகங்கள்.
சந்தேகம் – 1
ஏறாவூர் நண்பர்கள் நம்முடைய பகுதி ரொம்ப சூடான பகுதி ஆயிற்றே அங்கே அவுஸ்திரேலியா பசு வளர்க்கலாமா என அடுத்த வீட்டுக்காறனுகளிடம் போய் சந்தேகம் கேட்டுள்ளனர். இந்தப் பசு எங்கும் வளரும். சுட்ட மண் ஆன தெல்லிப் பழையில் வளரும் போது குறிஞ்சி. முல்லை, பாலை, நெய்தல் நிலங்களை தன்னிடத்தே கொண்டே கிழக்கில் எல்லாமே பொன்னாகும். டோன்ட் வொறி.கோ ஹேட்.
சந்தேகம் – 2
மாட்டு சாணியை வறட்டியாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். மாவனல்லை, கடுகண்ணாவ,
திப்பிட்டி, அரணாயக்க ஊதுபத்தி வியாபாரிகள் உங்கள் கொல்லைக்கு வந்து மொத்த சாணியையும் அள்ளிக் கொண்டு போவார்கள். இல்லையே அவர்கள் குறைந்த விலைக்குத்தான் எடுப்பார்களாமே என நீங்கள் சந்தேகப் படுவது புரிகிறது.புதிதாக மூன்று ,நான்கு பதுளை சகோதரயாக்கள் கொலன்னாவ பகுதியில் உரத்தொழிற்சாலை உருவாக்குகின்றார்கள். அவர்களிடம் பேரம் பேசுங்கள். நல்ல விலைக்கு விற்கலாம். டண். விற்று விட்டீர்கள்.அப்புறம் அவன் உங்களுக்கு உரம் விற்பான் வாங்கி வெள்ளாமைக்கு(விவசாயப்பயிர்) விசிறுங்க. ரொம்ப சந்தோஷம்.
சந்தேகம் – 3
ஏன் மாட்டு சாணியை கொண்டு நாங்களே உர உற்பத்தி செய்யக்கூடாது. செய்யலாமே. ஜப்பானிலும்,இங்கிலாந்திலும் இருக்கும் வடிவேலு ரசிகர்களுக்கெல்லாம் ஈமெயில் பண்ணுங்க. கிட்டத்தட்ட 4000 டொலருக்கு ஆறடி நீள, ஐந்தடி அகல, ஐந்தடி உயரமான ( நிறை 5 டொன்) உரம் தயாரிக்கும் அந்த இயந்திரத்தை வாங்கி அனுப்ப சொல்லுங்க. இல்ல மச்சான் எங்களுக்கு படம் பார்க்கத்தான் நேரம் இருக்கு உருப்படுகிற ஐடியாவே இல்லை என்று அவர்கள் சொன்னால். உங்கள் ஊரில் உள்ள எக்ரிகல்ச்சர் ஒபீசர்களைத் தேடிப்பிடியுங்க. பேராதனை பல்கலைக் கழகத்துல படிச்ச சரக்குகளை அவிழ்த்துவிட சொல்லுங்க.இப்படியான இயந்திரங்களை அனுராதபுரத்துல செய்கின்றார்களாமே உண்மையா என கேழுங்க. கேழுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். கேழுங்கள் கிடைக்கும் என்றார். ஏசு கேழுங்கள் கிடைக்கும் என்றார்.
அது ஒரு பொற்காலம். வெள்ளிக்கிழமை பகல் பதின்ரெண்டு மணிக்கு கே.எஸ்.ராஜா பக்கிப்பாடல்கள் என்று தொடங்குவார். நாங்கள் ஜூம்ஆவுக்குப் போக அவசர அவசரமாக சாறனை உடுப்போம். கே.எஸ்.ராஜா ஹிந்து, பாட்டு கிறித்துவம் ,நாங்கள் முஸ்லீம்கள் பள்ளிக்கு போக ரெடியாகுவோம். பாத்த்தீர்களா என்ன ஒற்றுமை. எல்லாவற்றையும் குளிதோண்டி வன்னில கொண்டு போய் பொதச்சிப் போட்டு. இப்போ மலையாள பகவதி,மலையாள பகவதி என முகையதீன் ஆண்டவர் சத்துரு சங்காரம் படித்துக் கொண்டிருக்கிறோம்.
சந்தேகம் – 4
ஆடு வளர்க்கலாம் சரி. அந்த ஆட்டுப் புழுக்கைகளை என்ன செய்வது. ஆட்டுப் பட்டிக்குப் பக்கத்தில் ஒரு குட்டி தண்ணி தொட்டி ( 10 அடி நீளம்,10 அடி அகலம்,3 அடி உயரம் )கட்டி வைத்து. குட்டி விரால் மீன் 25 வாங்கி அதில் போட்டு விடுங்கள். ஆட்டு புழுக்கையை தினமும் மீன் தொட்டியில் அள்ளிப் போடுங்கள். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய். ஆடு வியாபாரம். அத்துடன் துடிக்கத் துடிக்க விரால் மீன் வியாபாரம். ஆட்டுப் புழுக்கை விரால் மீனுக்கு அல்வா மாதிரி. விரால் மீனில் ஒன்றுக்கு பத்து வீதம் இலாபம் கிடைக்கும்.
சந்தேகம் – 5
செட்டியர் தெரு நித்திய கல்யாணி ஜூவலர்ஸ் தொடக்கம் 157 டைமன் ஹவுஸ் வரையும், டைமன் ஹவுஸ் முதல் 237 பூக்கடை வரையும், பூக்கடை தொடக்கம் புதுச் செட்டித் தெரு வரையும் உள்ள மொத்த மட்டக்களப்பானுக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. நம்முடைய பெரிய போரை தீவைப் பற்றி எழுதி இருக்கிறார். இவர் தமிழனா சோனியா என பட்டி மன்றம் நடாத்துகிறார்களாம். அதை விட்டு விட்டு தொழிலை கவனியுங்கோ. சீட்டுப் பிடித்து சேகரித்து வைத்துள்ள பணத்தை எல்லாம் ஊருக்கு கொண்டுவாங்கோ. அழகான மீன்பண்ணை. இறால் பண்ணை போடுங்கோ.
ஊரில் தரிசாக உள்ள நிலத்தில் ஒரு ஏக்கரில் முயற்சி பண்ணி பாருங்கள். அப்புறம் ஐயோ இந்த கொழும்பும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என ஓடி விடுவீர்கள். இல்லையே கடல் தண்ணியில,உவர்ப்பு மண்ணுலதான் இறால் வளரும் என்று சொல்கின்றார்களே. இல்லை. நமது கிணற்றுத் தண்ணியில் இறால் துள்ளி விளையாடும். கட்டுநாயகா விமான நிலையத்தில் இருந்து மினுவாங்கொட ரோட்டுல வேனைத் திருப்புங்கள். 8 மைல் தொலைவில் ‘பொளிபுறப்’கம்பனி என எழுதி ஒரு பெரிய விளம்பரத்துடன் ஒரு பெயர்பலகை பல்லிளிக்கும்.( எந்த இடம் என்பதை மறந்து விட்டேன்).போய் அவன் கதவை தட்டுங்க.மலையளவு நீள அகலத்தில் அவனிடம் பொளிப்புறப் துணி இருக்கும்.
இது நமது யூரியா வேக் போன்று தடிமனானது. நீர் கசியாது.இதை வாங்கிவந்து ‘சுவீமிங் பூள்’போல் அமைத்து (மூன்றடி உயரம்)இறால் வளர்க்கலாம். இறால் குஞ்சுகளை கொழும்பில் வாங்கலாம். செலவு சிறிது அதிகம். பலன் தங்கத்தை விட அதிகம். 10 லட்சம் ரூபா செலவு செய்தால் 40 லட்சம் ரூபா நிச்சய லாபம். இதற்குரிய ஆலோசனைகளை புத்தளத்தில் உள்ள இறால் பண்ணைகளில் வேலை செய்யும் ஊழியர்களிடம் இலகுவாகப் பெறலாம். உரிமையாளர்களிடம் நிச்சயம் பெற முடியாது. அது ரொம்ப நஸ்டமான தொழிலாச்சே என முகத்தை சுழிப்பார்கள். ‘வைட்ஸ்பொட்’ என்கின்ற வெள்ளைப் புள்ளி நோய் வந்து நம்மை ஓட்டாண்டி ஆக்கிவிடும் என சொல்வார்கள். அது காகத்தினால்(அண்டங்காக்காய்) வருவது, காக்காயை துரத்த எங்களிடம் நல்ல சீன வெடி இருக்கிறது.வெடியை கொழுத்தி போட்டு காகத்தை விரட்டுவோம் என தைரியமாகச் சொல்லுங்கள்.
சந்தேகம் -6
கோழிப்பண்ணை போட்டால் நிறைய கோழி எரு சேருமே என யோசிக்காதீர்கள்.மலையகத் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அது பொன்.தேயிலை மரத்தின் அடியில் இதை தூவினால் தேயிலை உற்பத்தி இரட்டை மடங்காகும்.
சந்தேகம். – 7
ஊரெங்கும் பழைய,பாவித்த,எதற்குமே உதவாத சைக்கிள் டயர், கார் டயர், வேன் டயர் என குவிந்து கிடக்கிறதே இதற்கு ஒரு வழியில்லையா என பலர் கேட்டுள்ளனர். இவைகளை சேகரித்து கைக்கடக்கமாக துண்டு துண்டாக வெட்டி வீட்டுக் கொல்லையில் சேகரித்து வையுங்கள். இங்கிலாந்தில் இருந்து ‘வணங்கா மண்’ வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நீண்ட நாள் கடலில் நிற்க வேண்டியேற்பட்டால் ‘கப்பல் ஓயில்’ தேவைப்படலாம். கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒயில் விற்க இந்த டயர்கள் தேவை.
ஆம்.இந்த டயர் துண்டுகளை பாரிய இரும்பு சட்டியில் போட்டு எரித்து ஆவியை சேகரிக்க வேண்டும். இந்த ஆவி ஒயிலாக மாறும். அது கப்பல் இன்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும். பாரிய வெட்டை வெளிகளில் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இதை தயாரிக்க வேண்டும்.சுற்றுச் சூழல் இதனால் மாசடையலாம். உரிய அனுமதிகளை பெற்று செய்ய வேண்டும். ஏற்கனவே துப்பாக்கி சனியன்களால் ஏற்பட்ட கந்தக வாசனையால் நம்மவர் சுவாசிக்க முடியாமல் இருக்கின்றனர்.அப்புறம் இந்த கந்தக வாசனை மக்களை குழப்பிவிடும். ரொம்ப ஜாக்கிரதை. ஆனால் கைமேல் பலன் நிச்சயம்.
சந்தேகம் -8
மாட்டுத்தோலை என்ன செய்யலாம். ஒரு மாட்டின் தோலை ஏழு அல்லது எட்டாக பேப்பர் மாதிரி பிரிக்கலாம். ஆனால் எம்மவருக்கு அந்த நுணுக்கம் தெரியாது. பாகிஸ்தானியர்கள் இதில் கில்லாடிகள். ஒரு மணிநேரத்தில் பத்து மாட்டின் தோலை உரித்து கடாசி விடுவார்கள். புத்தளத்தில் ஆங்காங்கே பாகிஸ்தானியர்கள் விசிட்டிங் விசாவில் வந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை அழைத்து வந்து இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். உரித்து காயவைத்து கொழும்பு டாம் ஸ்ரீட் வர்த்தகர்களுக்கு ஒரு தூது விட்டால் போதும். தோல் வியாபாரம் களை கட்டும்.
நீ ஒரு நல்ல வியாபாரியாக இருக்க விருப்பமா. நிச்சயமாக நீ ஒரு நல்ல இடிதாங்கியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க விருப்பமில்லையா. உடனே பணத்தை கட்டி சவூதிக்கு அல்லது ஐரோப்புக்கு போய் அவர்களுடைய டொய்லட் களுவ வேண்டியதுதான். ஊரில் இருந்து நாளுக்கு மூன்று போன் வரும். உழைக்கிற பணத்தை எல்லாம் அனுப்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். இல்லை நான் இடிதாங்குவேன். என்னால் முடியும். ஐ கென் வின் என்றால். கோஹெட். ஆயிரம் வழிகளிருக்கிறது.
( தொடருவேன்………)
http://ywasith.wordpress.com
yahiyawasith@ymail.com







fathee said
உண்மையான தௌஹீத்வாதிகள் என்போர் யார்?
Posted on அக்டோபர் 1, 2009 by darulathar
தௌஹீத் என்ற அறபுப் பதத்தின் அர்த்தமே ஒற்றுமைப்படுத்தல் என்பதாகும். ஒருவனான அழ்ழாஹ்வை வணக்க வழிபாடுகள் சார்ந்த விடயங்களில் ஒருமைப்படுத்தல்தான் உண்மையான தௌஹீதுக்குரிய அடையாளச் சின்னமாகும்.
ஆனால், இன்று தௌஹீத் மக்களிடையே எவ்வாறு அறிமுகமாயிருக்கின்றது என்று சிந்தித்தால் மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. குறித்த சில சுன்னாக்களை மாத்திரம் அமுல்படுத்துவதால் தானும் ஒரு தௌஹீத்வாதி என மக்களிடையே அறிமுகப்படுத்திக்கொள்ள முயல்வது மிகவும் தவறானதொரு அம்சமாகும். ஏனெனில் அழ்ழாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்
( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً (2:208)
‘நம்பிக்கை கொண்டோரே! (புனித) இஸ்லாத்தினுல் சம்பூரணமாக நுழைந்து விடுங்கள்.’ (2:208)
இன்றய போலித்தௌஹீத் வாதிகளை அடையாளப்படுத்தி உண்மையான தௌஹீத் வாதிகளை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
போலித்தௌஹீத் வாதிகளின் அடையாளங்கள் சில:
1- விரலசைப்பதும் நெஞ்சில் தக்பீர் கட்டுவதுமே தௌஹீத் என விளங்கியிருப்பார்கள்.
2- மக்களோடு சேர்ந்துதான் கொள்கையை சொல்ல வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பார்கள்.
3- சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது தனது கொள்கையை விட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.
4- தான் அனைத்து சூழ்நிலைகளையும் உணர்ந்து நடப்பவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர்.
இவ்வாறுள்ள தௌஹீத்வாதிகளை ஒருபோதும் நாங்கள் நம்பி ஏமாந்துவிடக்கூடாது. ஏனெனில் இவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது தனது கொள்கையை மாற்றிக் கொண்டு குராபிகளோடு (பழைய அனுஷ்டானங்களைப் புரிவோர்) சேர்ந்து கொள்வர்.
உண்மையான தௌஹீத்வாதிகளின் அடையாளங்கள் சில:
1-நபிவழியில் ஒன்றைக் கண்டால் அதனை அற்பமாகக் கருதாமல் உடனே அமுல்படுத்துவார்கள்.
2- மக்களுக்கு ஏற்ப கொள்கையை சொல்லாமல் மார்க்கத்திற்கேற்ப மக்களுக்கு கொள்கையைச் சொல்வார்கள் அதன் மூலம் 21:73 எனும் வசனத்தை அமுல்படுத்தியவர்களாகத் திகழ்வார்கள்.
3- சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் மக்களுக்குத் தெளிவுபடுத்துவார்கள்.
4- குடும்பத்திலோ அல்லது சமூகத்திலோ மார்க்கத்திற்காக எத்தனை இழப்புக்களை சந்தித்தாலும் அவற்றை பொறுமையோடு சகித்துக்கொள்ளும் ஜெயசீலர்களாகத் திகழ்வார்கள்.
இவ்வாறு இன்னும் சில அடையாளங்களை தன்னகத்தே கொண்டவர்களாக இவர்கள் திகழ்வார்கள். இவ்வாறு இந்த தௌஹீத் வாதிகளை இரண்டு சாராராக பிரித்து விளங்குகிறோம். இந்த சாராரில் நாங்கள் இரண்டாவது கூட்டத்துடனே சோர்ந்து கொள்ள வேண்டும். இரண்டாவது கூட்டாத்தாருடன் சேராவிட்டாலும் சரி முதல் கூட்டத்தாருடன் சேர்ந்து தன்னையும் தன் சமூகத்தையும் பாழாக்காமல் இருக்க இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.
அழ்ழாஹ் திருமறையில் கூறுவதைப் பாருங்கள்: وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ(22-11)
‘விளிம்பில் இருந்து கொண்டு அழ்ழாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கின்றான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகின்றான். அவனுக்கு சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறிவிடுகின்றான். இவ்வுலகிலும் மறுமையிலும் அவன் நஷ்டமடைந்துவிட்டான். இதுவே தெளிவான நஷ்டம்.’ (11-22)
தஃவாக் களங்களில் சோதனை ஏற்படுவதென்பது இறைவிசுவாசிக்கு புதிதான ஒன்றல்ல. அந்த சோதனையின் போது அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதயே அழ்ழாஹ் பார்க்கிறான். அப்போதுதான் அவன் உண்மையான தௌஹீத் வாதியாக மாறிவிடுகின்றான் இன்று சமூகத்தை எடுத்துக் கொண்டால் எவர்கள் உண்மையான தௌஹீத்வாதிகளாக இருக்கிறார்களோ அவர்களை எவ்வாறு கருவறுத்து விடலாம் என்ற சிந்தனையைத்தான் அது கொண்டிருக்கிறது. அரசியல் மேடைகள், குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமான சொற்பொழிவுகள், தப்லீக் ஜமாஅத்தினரின் இஜ்திமாக்கள் போன்றவற்றிற்கு இடமளிக்கும் இந்த சமூகம் குர்ஆன் ஹதீதினைக் கூறுவதற்கு இடம் தாருங்கள் என்று கேட்டால் அதற்கு பின் தயங்குவதில் உள்ள மர்மம்தான் என்ன?
ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதுதான் எவர்கள் உண்மையான தௌஹீத்வாதிகள் எவர்கள் போலித் தௌஹீத்வாதிகள் என்று அடையாளம் கண்டு கொள்கிறோம். சமூகத்தில் சுகம் அனுபவிப்பதற்காக எவர்களெல்லாம் தனியாகி விடுகிறார்களோ அவர்களெல்லாம் போலித் தௌஹீத்வாதிகள் என்றும் சமூகத்தில் எத்தனை இழப்புக்களை சந்தித்தாலும் சரி கொள்கைக்காக தாங்கிக் கொள்வோம் என்ற உறுதிப்பாட்டுடன் எவர்கள் உள்ளார்களோ அவர்கள் உண்மையான தௌஹீத்வாதிகள் என்றும் அடையாளம் கண்டு கொள்வதோடு அவ்வாறான கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்ள வல்லோன் அழ்ழாஹ் எம்மனைவருக்கும் துணைபுரிவானாக!
dharulathar.com
sabra said
நிர்வாகியாரே அதர்க்காரனுக இவ்வலவு பிரச்சினைக்கும் வாய்திறக்காமல் இபோது மீன்டும் எமது குழுவுக்கு மடல் அனுபுகிரார்களே இதைச் சுட்டிக் காட்ட வேண்டாமா? அவர்களிட்ம் நாலு கேல்வி கேக்க வேண்டாமா?
Ahamed said
நாலு கேழ்வி என்ன…. ஆயிம் கேழ்வி வேண்டுமென்றாலும் கேலுங்க…… நாங்க பதில் சொல்ல தயாராதான் இருக்கம்….. ஆனா நீங்கதான் கேழ்வி கேட்க தயார் இல்லயே………………..
mohamedazath said
islam sinthippavarhlukku neranathu
kulappavathihalukku pirajinikkuriyathu
faazul haize said
i also like all these news and i like this site